Monday 11 August 2014

கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.
மேலும் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. கோமாதா = கோ” என்றால் பசு, மாதா” என்றால் அன்னை. அன்னைக்கு நிகரான பயன்தருவதால் இந்துக்கள் கோமாதாவை போற்றி வணங்குகிறோம்.
பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.
இனியாவது இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவார்களா ? பசுவதையை எதிர்த்து போராடுவார்களா ?

நன்றி
இந்து மதம் - உலக மக்களின் மதம்

Saturday 9 August 2014

திரு.ஐயம் பெருமாள் கோனார்

                    
         பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தோன்றும் போதே கருவிலே திருவுடையவராகத் தோன்றியவர்.அவருக்கு முன் அமைந்து இருக்கும் திரு என்பது அவரது தந்தையின் பெயராகிய திருச்சிராப்பள்ளி திருவேங்கடக் கோனாரைக் குறிக்கும். எனவே அவர் பிறந்த போதே, பிற்காலத்தில் திருவும், கல்வியும், செல்வமும் ஒரு சேரப் பெற்றுச் சிறந்து விளங்குவார் என்பதை இவருக்கு வாய்த்த ‘திரு’ என்னும் சொல் சுட்டி காட்டுகிறது.
          திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் விசுவாவிசு ஆண்டு ஆவணித் திங்கள் இருபத்தி ஆறாம் நாள் (05.09.1905) செந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில், வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள தம் பாட்டனார் இல்லத்தில் அகிலாண்டத்தம்மையார் அவர்கட்கு அருமந்த புதல்வனாய்ப் பிறந்தார். இளமையிலேயே அன்னையே இழந்த இவர், தம்பெரிய அன்னையின் ஆதரவில் திருச்சிராப்பள்ளி சின்னக் கடைத் தெருவில் உள்ள தம் இல்லத்தில் வளர்ந்து வரலானார். பெரிய அன்னையின் தூண்டுதலால் அவர் திருச்சிராப்பள்ளி ஆரியன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அவர்க்குத் தமிழ்ப்பற்று நாளும் வளர்ந்து வரலாயிற்று. பிறகு தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார்.
           கோனார் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் மதுரைச் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் தமிழ்த் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராகத் தனித் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி 1933-இல் வெற்றி பெற்றார். அவர் 15 ஆண்டுகள் தமிழ் உரையையும் ,வினா விடையையும் தம் சொந்த முயற்சிலேயும்,சில வெளியீட்டாளர் மூலமாகவும் வெளியிட்டு நல்ல போதக ஆசிரியராகவும் விளங்கிய அவர் சிறந்த உரையாசிரியராகவும் மதிக்கப்பட்டார்.
            1942-ஆம் ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த நடேச முதலியார் அவர்களுக்குப் பின் அவருக்கு  அப்பதவி அளிக்கப்பட்டது. 1966-ஆம் ஆண்டு வரை தமது அறுபதாவது ஆண்டு முடிய தமது தமிழ்ப் பேராசிரியர் பணியைச் சிறப்பாக செய்து மாணவர்களும், ஆசிரியர்களும் போற்றிப் புகழ்ந்து பாராட்டும் வகையில் ஒய்வு பெறலானார்.
           கல்லூரிப் பேராசிரியரான பின், கல்லூரிப் தமிழ்ப்பாட நூல்களுக்கும் உரை எழுதலானார். இவ்வாறு கல்லூரியில் பாடம் கற்பிப்பதிலும், உரை எழுதுவதிலும் அவர் வல்லவர் என்னும் நற்பெயர் எங்கும் பரவப் பெற்றார்.
           அவரது சிறப்பினை உணர்ந்த உயர்திரு. செ.மெ.பழனியப்பச் செட்டியார் அவர்கள் அவரது உரை நூல்களைப் பள்ளி இறுதி வகுப்பு ஆகியவற்றின் தமிழ்ப்பாட நூல்களுக்கான உரைநூல்களைத் தமது வெளியீடாக வெளியிட விரும்பி ஏற்றுக்கொண்டார். மற்றும் பி.ஏ.பி,எஸ்.சி, வகுப்புத் தமிழ் உரைநூல் அவர்தம் மைத்துனர் வாசன் பதிப்பகம், கோனார் பப்ளிகேசன்ஸ் மூலமாக வெளியிட்டு வந்தார். அவர்க்குப் பின் சென்னை, மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பாடநூல்களின் உரைகளும் மதுரை கோனார் பப்ளிகேசன்ஸ் உரிமையாளர் திரு.சடகோபன் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். கோனார் உரை நூல்க்கு முத்திரையும் பெற்றுச் சிறப்புச் சேர்த்து உள்ளார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, தமிழ் உரை நூலும் கோனார் பதிப்பகத்தில் வெளியிட்டு வந்தார்கள்
         அவர் 1965-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தமது அறுபதாவது ஆண்டு நிறைவு நாளில் மணி விழாக் கண்டு மகிழ்ந்தார் திரு.கோனார் அவர்களின் தமிழ்ப்பற்றையும் தொண்டினையும் ‘ஆனந்த விகடன்’, ‘ஆசிரியரத்தினங்கள்’ என்ற தலைப்பில் பாராட்டுரை வழங்கிப் படம் வரைந்து சிறப்பித்தது. அவரது இறையன்பையும்,அதனை வளர்க்கும் நெறியில் இடையராது ஆற்றிய சொற்பொழிவுத் தொண்டினையும் போற்றும் வகையில் உறையூர் ‘வாசுகி பக்த சன சபையார்’ அவர்க்குப் பொன்னாடை போர்த்தி, ‘செம்பொருட்காட்சியர்’ என்னும் பட்டத்தை வழங்கினார். மேலும் அவரது சமயத் தொண்டினைப் பாராட்ட விரும்பிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவருக்குப் தங்கப்பதக்கம் வழங்கி ‘திருப்பாவை ஆராய்ச்சி மணி’ என்ற பட்டத்தையும் சுட்டிச் சிறப்பித்தனர். மார்கழி முப்பது நாட்களிலும் திருச்சி வானொலி நிலையத்தினர் ஒலிபரப்பிய அவரது திருப்பாவை விளக்கவுரையைக் கேட்டுக் தமிழகமே பெரிதும் மகிழ்ந்தது.
          தமிழ்ப்பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தம் சிறந்த தமிழ்ப் பணியினால் மாணவருலகம், ஆசிரியர் உலகம் , சமய உலகம், தமிழுலகம் பயனுறுமாறு சிறந்த போதக ஆசிரியராகவும் உரையாசிரியாகவும், நூலாசிரியராகவும், சொற்பொலிவாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.
         திரு.கோனார் அவர்கள் இயற்றிய நூல்கள்:- கோனார் தமிழ்க் கையகராதி,திருக் குறளுக்குக் கோனார் பொன்னுரை மற்றும் சங்ககாலப் பாண்டியர், வாசன் பைந்தமிழ்ச் சோலை முதலின
நன்றி
     யாதவர் களஞ்சியம் ச.சி.செல்லம்
     யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
      கோகுல மணி மாடசாமி 


இலக்கணத் தாத்தா திரு.மே.வீ.வேணுகோபால்பிள்ளை யாதவ்

                                             
                                     மே.வீ.வேணுகோபால்பிள்ளை யாதவ்  அவர்களின் தந்தையார் சென்னையை அடுத்த மேட்டுப்பாளையம் என்னும் ஊரை சேர்ந்தவர். இவர் மூன்று ரூபாய் ஊதியத்தில் அச்சு தேய்க்கும் பணியில் அமர்ந்தார். கையில் கிடைத்த தமிழ் நூல்களைக் கருத்து ஊன்றி படித்தார். அறிஞர் நடத்திய இரவு பள்ளியில் சேர்ந்து கற்றார். வேப்பேரியில் உள்ள அஞ்சலகத்தில் ஏவலனாகப் பணியாற்றினார். ஒரு வழக்கறிஞரிடம் பணிபுரிந்த போது வழக்குத் தாள்களைப் படித்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். பிற்காலத்தில் கூட்டங்களில் பேசும்போது “டால்ஸ்டாய்’, ‘எமர்சன்’, ‘கார்லைல்’ போன்றோரின் கருத்துகளையும் சீன நாட்டு கன்பியுசியஸ் கருத்துக்களையும் மேற்கோள் காட்டுவார்.
                  திரு.கா.ரா.கோவிந்தராச முதலியாரிடம் முறையாகத் தமிழ் கற்றார். பிறகு தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் எழுத்து வேளையிலும், பதிப்புத் தொழிலிலும் எடுபட்டார். அவர் பத்திராயு அல்லது ஆட்சிக் குரியோன்,திருக்கண்ணபிரானார், குனசாகரர் அல்லது இன்சொல் இயல்பு, அற்புத விளக்கு. அரிச்சந்திர புராணம்-விளக்கக் குறிப்புரை, இளைஞர் தமிழ்க்கையகராதி போன்ற நூல்களை இயற்றினார். அவர் மேலும் துருவன் என்ற நூலையும் அம்பல வாணன், இளங்கோவன் என்ற புதினங்களையும் இயற்றினார். எழுத்தெண்ணி நுணுகிப் பார்த்து பிழைகளைத் திருத்துதல் இவர்க்குக் கைவந்த கலை. அவர் திருத்தம் செய்து பதிப்பித்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை:- இறையனார் அகப்பொருள், வீரசோழியம், தொல்காப்பியம், இலக்கணச் சொல்லதிகாரம், நச்சினார்க்கினியார் உரை, தஞ்சைவாணன் கோவை விளக்கக் குறிப்புரை, அட்டப் பிரபந்தம் விளக்கக் குறிப்புரை, சித்தர் ஞானக் கோவை போன்றவை. சென்னை பவாநந்தர் கழக உறுப்பினராகத் திகழ்ந்தார். சென்னை பல்கலைக்கழகத் தமிழ் வெளியீடுகள், தமிழ்நாட்டுப் பாடநூல்கள் நிறுவனப் பதிப்பாசியராய்த் திகழ்ந்தார். சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்று வந்த கம்பர் கழகத்தில்  மே.வீ.வே. சிறந்த தொண்டாற்றினார். சென்னை ஸ்ரீவைஷ்ணவ மகாசங்கம் நடத்தும் மாநாட்டில் ஆண்டு தோறும் சமயச் சொற்பொழிவாற்றிதோடு, ஓராண்டு மாநாட்டுத் தலைமை தாங்கும் பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களால் நடத்தப்பபெற்ற ‘தமிழகப் புலவர் மற்றும் தமிழ்ச்சான்றோர்’ குழுவின் தலைவராய் இருந்து தமிழ்ப் பணியாற்றினார்.
            ‘மகா வித்துவான் பட்டம் இவரைப் புலவர் உலகம் ‘இலக்கணத் தாத்தா’ என அழைத்து வருகிறது அறிஞர் அண்ணாவால் 1967-இல் ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டம் வழக்கப்பட்டது. 1977-இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ‘கலைமாமணி’ என்ற பட்டமும் 1981-இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினரால் ‘தமிழ் பேரவைச் செம்மல்’ பட்டமும் பொற்கிளியும் வழங்கிப் பாராட்டியது. 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டமும் பத்தாயிரம் வெண்பொற்காசுகளும் அப்போது முதல்வராயிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் வழக்கப்பட்டது. 1981-இல் தமிழ்நாடு நல்வழி நிலையம் இவருக்கு ‘செந்தமிழ் வித்தகர்’ என்ற பட்டமளித்தது.
             காஞ்சியில் சீவக சிந்தாமணி சொற்பொழிவாற்றினார். அதன் சிறப்பை அறிந்த திரு.வி.க அவர்கள் ‘சிந்தாமணிச் செல்வர் வேணுகோபால் பிள்ளை’ என்ற பட்டமளித்தார். ஆசிரியர்க்கு ஆசிரியரான இவர் நிறைவாழ்வு வாழ்ந்து பெரும் புகழ் ஈட்டினார். ஐரோப்பாவைச் சேர்ந்த டாக்டர் கபில் சுவலபில் அவர்கள் மே.வீ.வே வின் தமிழ் மாணவர். ஜெர்மனியிலுள்ள ‘கோல்ன்’ பல்கலைக்கழக நூலகத்திற்கு இலக்கணத் தாத்தா மே.வீ.வேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆயிரம் பிறைகண்ட அறிஞர் மே.வீ.வே யின் 80-வது பிறந்த நாளில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் தலைமையில் விழாவெடுத்து, ‘பாவலர் போற்றும் மே.வீ.வே’ எனும் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.
நன்றி
     யாதவர் களஞ்சியம் ச.சி.செல்லம்
     யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
      கோகுல மணி மாடசாமி