Saturday 17 August 2013

கார்மேகக் கோனார்

 

கார்மேக கோனார்:


கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவார். எழுத்தாளர்.

பிறப்பு:

கார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

பணி:

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்:

இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

ஆக்கங்கள்:

இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்:
  1. அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்)
  2. ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
  3. இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்)
  4. ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
  5. ஒட்டக்கூத்தர்
  6. கண்ணகி தேவி
  7. காப்பியக் கதைகள்
  8. கார்மேகக் கோனார் கட்டுரைகள்
  9. கார்மேகக் கோனார் கவிதைகள்
  10. செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
  11. பாலபோத இலக்கணம்
  12. மதுரைக் காஞ்சி
  13. மலைபடுகடாம் ஆராய்ச்சி
  14. மூவருலா ஆராய்ச்சி
  15. தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
  16. தமிழ்மொழியின் மறுமலர்ச்சி
  17. நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்

                                                                                         

Friday 16 August 2013

மு. இராகவயங்கார் அவர்களின் "வேளிர் வரலாறு"


மு. இராகவயங்கார் அவர்களின்
"வேளிர் வரலாறு" 

vELir vaRalARu
of mu. irAkavaiyangkAr
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements: 
    Our Sincere thanks go to the Digital Library of India
    for providing us with scanned images version of the work online.
    Etext preparation and proof-reading:
    This etext was produced through Distributed Proof-reading approach.
    We thank the following persons in the preparation and proof-reading of the etext:
    R Aravind, S. Karthikeyan, Kavinaya, R. Navaneethakrishnan, P. Thulasimani,
    N Pasupathy, V. Ramasamo, S Ramesh, R Usha, V.S. Kannan and Nalini Karthikeyan
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2012.
    Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    Details of Project Madurai are available at the website
    http://www.projectmadurai.org/
    You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மு. இராகவயங்கார் அவர்களின்
"வேளிர் வரலாறு" 

    source:
    வேளிர் வரலாறு.
    "செந்தமிழ்" பத்திராசிரியராயிருந்த
    இராமநாதபுரம் மு. இராகவையங்கார்எழுதியது.
    மதுரைத் தமிழ்ச்சங்கம் /The Madura Tamil Sangam
    செந்தமிழ்ப் பிரசுரம்-33
    மதுரை : தமிழ்ச்சங்க முத்திராசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது.
    காபிரைட் ரிஜிஸ்டெர்ட் 1913 விலை அணா--8
    -------------

    பொருளடக்கம்.

    1. உரிமையுரை.
    2. Hon: Dewan Bahadur. S.RM. M. இராமசாமி செட்டியார் அவர்களது ஆங்கில முகவுரை.
    3. நூன்முகம்.
    4. நூலைப்பற்றிய சில அபிப்பிராயங்கள்.
    *5. வேளிர் வரலாறு.
    6. வேள்--ஆய்.
    7. வேள்--ஆவி.
    8. வேள்--எவ்வி.
    9 வேள்--பேகன்.
    10. வேள்--பாரி.
    11. நன்னன்--வேண்மான்.
    12. மற்றைவேளிர்.
    13. விஷய சூசிகை.
    14. பிழையும் திருத்தமும்.
    -------------------------
    * இப்பகுதியே, 1914-ம் வருடத்து இன்டெர்மீடியட் (Intermediate) பரீக்ஷாபாடமாகும்.

    ஸ்ரீ

    உரிமையுரை.
    ------------------

    ஓதுபதி னாலுலகுந் தொழுஞ்சேது
          காவலரே யொப்ப முன்னாள்
    தீதுபதி யாத கொடை திகழ்வேளிர்
          வரலாற்றைச் செய்ய வொண்பூ
    மாதுபதி ரவிகுலத்து மகிபதிவண்
          தமிழ்நர்பெரு மானா மெங்கள்
    சேதுபதி ராஜரா ஜேசனுக்கே
          யானுரிமை செய்தேன் மன்னோ.
    ------------------------------

    DEDICATION

    To
    His Highness
    Mutthu Vijaya Raghunatha Rajah
    B. Raja Rajeswara Sethupathy Avergal,
    Rajah of Ramnad
    FOR
    His love and patronage for Tamil
    and the sincere devotion of the
    Sethupathy House to their mother tongue

    This work
    is
    With kind permission
    Dedicated
    BY
    THE AUTHOR
    THE HEREDITORY PANDIT OF HIS HIGHNESS.



    Preface.


    "Velir-Varalaru" is a learned and a laborious production of Mr. M. Raghava Aiyangar of Ramnad. The sterling worth of the work has been attested to by the Royal Asiatic Society. The Madras University has set upon it its own seal of approval. In the face of these distinguished testimonials, any prefatory remarks of mine own, which I have been called upon by the learned author to advance, are not at all needed.

    Till quite recent times the study of Tamil literature was confined solely to the aroma and the ornate side of it. Of late Tamil literature is being studied with a view to build up its history. The author here tries to pursue the pure history side imbedded in the regions of ancient Tamil works. He here gives the early history of the Velir probably the original ancestors of the community known at present by the name of Vellalas. His copious references to various authorities lend considerable support to this position.

    According to the author the Velir originally belong to the Yadhava clan - the very clan in which Sri Krishna was born. Sometime after the Mahabharatha war, the Velir, it seems migrated from Guzerat, their original abode, to South India, leaving their outstanding traces wherever they lived. They can be gathered from the names of towns in that part of India beginning with Vel or its corrupted forms, Belhutti, Bela, Belgaum, Velapur. The author concludes that the Bellalas, Chalukyas, Andhras, Yadhavas and Velir come from the same stock of people and that many of the
    Velir held sway over portions of South India either as paramount rulers or

    as cheifs in subordinate capacity. As the author sketches it, the history of a few Velir, is an informing and an interesting reading. I have attempted in these few lines but a perfunctory resume of the work - a real research work.

    The Thesis evidences a breadth of consultation and a compression of materials. The way in which the author cogently premises to suggest the inferency reflects a rare critical insight and a fine sense of discrimination. The materials, which the author has marshalled, subserve an investigation on kindred and collateral topics, I fervently hope that Mr. M. Raghava Aiyangar and scholar of his type will render similar service to the country.

    S.RM. M. RAMASAMY CHETTIAR,
    Chidambaram.
    ---------

    ஸ்ரீ:
    page iii

    நூன்முகம்.


    சில வருஷங்கட்குமுன் சங்கச்செய்யுள்களை யான் ஆராய்ச்சி செய்துவந்தபோது, அவற்றிற் கண்ட சிற்றரசர்களிலே வேளிர் என்று குறிக்கப்பட்டவர் ஒரு தனியான குலத்தவர் என்பதற்குச் சிலபல சான்றுகள் கிடைத்தன. அதனால் அக்கூட்டத்தாரைப் பற்றிப் பின்பு செவ்வையாக ஆராயும்படி நேர்ந்ததோடு, அவ்வாராய்ச்சியின் பயனாக வேளிர்குலத்தைப்பற்றிய முடிவான கொள்கைகள் சிலவும் ஏற்பட்டன. அவற்றை அறிஞர் சிலர்க்கு அறிவித்துக்கொண்டதில், அன்னோரும் என் கொள்கைகளை ஆமோதித்து ஊக்கினர். பின்பு, 1905-ம் வருஷம் நிகழ்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் நான்காம் வருஷக்கூட்டத்தே, " The Tamils 1800-years ago" என்ற அரிய தமிழ்ச்சரிதநூலின் ஆசிரியராக விளங்கிய ஸ்ரீமாந்- வி. கனகசபைப்பிள்ளை அவர்களது அக்கிராசனத்தின் கீழ்க் கூடிய.வித்வத்ஸமூகத்தின் முன்பு, என்னாராய்ச்சிகளைத் திரட்டியெழுதி அரங்கேற்றலாயினேன். அவ்வியாசம், அச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகையிலும் பின்பு வெளியிடப்பெற்றது. பத்திரிகையில் வெளிவந்த அதனைப்படித்த நம் நாட்டறிஞர் பலர், என் கொள்கைகளிற் றமக்குள்ள சம்மதத்தைத் தாமே மகிழ்ச்சியுடன் எனக்கு அறிவித்தார்கள். அன்னோர் அபிப்பிராயங்கள் சில அடுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுள், கொழும்பு ஸ்ரீமாந்- வி.ஜெ.தம்பிப்பிள்ளையவர்கள்,M.R.A.S., தம்முடம் பாடறிவித்தது மட்டுமன்றி, ஆங்கிலத்தில் இவ்வியாசத்தை அழகுற மொழி பெயர்த்துப் பல கீழ்க்குறிப்புகளும் இட்டு--இலங்கைப் பகுதி ராயல் ஏஷியாடிக் ஸொஸைடிக்கு அனுப்பி அதனை ---------
    page iv
    வெளியிடுவித்தார்கள்.* இவர்களால் அன்புகூர்ந்து செய்யப்பெற்ற பெரு நன்றி என்னால் என்றும் மறக்கத்தக்கதன்று.

    இங்ஙனம், நல்லறிஞர் பல்லோரது நன்குமதிப்பு இச்சிறு வியாசத்துக்கு ஏற்பட்டது எனக்குப் பின்னும் ஊக்கமளித்தமையால் வேளிர்குலத்தில் அறிவாற்றல் பெருமை முதலிய உயர்குணங்கள் வாய்ந்து தமிழகம்புகழ விளங்கிய பழைய வள்ளல்கள் சிலரது வரலாறுகளையும் செந்தமிழில் முறையே எழுதி வெளியிடலானேன்.

    இப்போது, இவ்வேளிர் வரலாற்றைக் கனந்தங்கிய சென்னைச் சர்வகலா சங்கத்தாரும் (University) நன்கு மதித்து, தமிழ் கற்கும் மாணவர்க்கு உபயோகமாம்படி, 1914-ம் வருஷத்து "இண்டெர்-மீடியட்" ( Intermediate) பரீக்ஷா பாடங்களுள் ஒன்றாக நியமித்திருந்தலறிந்து மகிழ்கின்றேன். இக்கௌரவமளித்ததன் பொருட்டு சங்கத்தார்க்கு மிகவும் நன்றிசெலுத்துங் கடப்பாடுடையேன்.

    வேளிர் விஷயமாக எழுதப்பெற்ற என் வியாசங்களை ஒருங்கு திரட்டி வெளியிடுவதற்கு இதனையே தக்க சமயமாகக்கொண்டு, ௸ ஆராய்ச்சிகளை மறுமுறை சோதித்துப் பல திருத்தங்களுடனும் கீழ்க்குறிப்பு அநுபந்தங்களுடனும் ஒரு சிறு நூலாக இப்போது வெளியிட்டிருக்கிறேன். இதனுட் கண்ட வேளிருள்ளே பாரி என்ற வள்ளலின் வரலாறு முழுதும், என் அரும்பெறன் மைத்துனரும் ஸேது ஸம்ஸ்தான வித்துவானுமாகிய ஸ்ரீ: ரா. இராகவையங்கார் அவர்களாற் செவ்விதின் எழுதப்பெற்றுச் செந்தமிழில் முன்னரே வெளிவந்துள்ளது. அவ்வாராய்ச்சியுரை இந்நூற்குப் பெரிதும் ஏற்றதானமையால், ஐயங்காரவர்களது அன்புடையனுமதி பெற்று, அதனை இவ்வியாசத்துக்கு ஏற்றபெற்றியில் அமைத்து வெளியிட்டிருக்கிறேன்.
    -----------------
    * Journal of the Royal Asiatic Society Ceylon-Branch No.61-1908
    ------
    page v

    இந்நூல் செந்தமிழ்ப் பத்திரிகை வாயிலாக முன்பு வெளிவந்ததாகலின், சங்கத்தார் விருப்பத்தின்படி "செந்தமிழ்ப்பிரசுரங்" களில் ஒன்றாக இது வெளியிடப்பெற்றது.

    இவ்வியாசத்தே, பழைய வேளிருடைய வரலாறுகளை ஆராய்ச்சி செய்ததின் பலனாக ஏற்பட்ட கொள்கைகளைக்கூறுதலே என் நோக்கமன்றி, சாதிபற்றிய எவ்வழக்கிலும் பிரவேசிப்பது என் கருத்தன்று என்பதை அறிஞர்க்கெல்லாம் வற்புறுத்த விரும்புகிறேன். இந்நூலுட் காணப்படும் கொள்கைகள் சில, காலாந்தரத்தில் கிடைக்கும் சாதனங்களால் மாறுபடுதலுங் கூடும்: ஆதலால் 'என் கூற்றெல்லாம் முடிபு' என்று ஒருதலையாகச் சாதிக்கவந்தவனு மல்லேன். அதனால், "குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்-கற்றறிந்த மாந்தர் கடன்" ஆகும்.

    இராமநாதபுரம். )         இங்ஙனம்,
    10--1--13 )         மு.இராகவையங்கார்.


    ஸ்ரீ
    page vi

    வேளிர் வரலாற்றைப்பற்றிய சில அபிப்பிராயங்கள்


    (1) மஹாமஹோபாத்யாயர்: ப்ரம்மஸ்ரீ. வே. சாமிநாத ஐயர் அவர்கள்;-- " இந்த முறை செந்தமிழில் வெளிப்பட்ட நன்னன்--வேண்மாள் முதலிய நியாஸங்கள் மிக்க ஆனந்தத்தை உண்டுபண்ணின. மிகவும் கடினமாகிய சங்கச்செய்யுளிற் புகுந்து ஆராய்ந்து ஒழுங்காக விஷயங்களை எடுத்தெழுதுவதைக் காட்டிலும் சிறந்த அருமை வேறு யாதுளது? எல்லாம் அவ்விடத்துப் பெரு முயற்சியால் வந்த பயனே"--( ஸ்ரீமாந்-- பாண்டித்துரைத் தேவரவர்கட்கு 3--5--06-ல் எழுதிய கடிதப்பகுதி)

    (2) ";செந்தமிழ்" ப்பத்திராசிரியராயிருந்த-ஸேதுஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீ ரா. இராகவையங்கார் அவர்கள்:-- நீ செந்தமிழில் எழுதிவரும் வியாசங்கள் பெரிதும் மதிக்கத்தக்கனவாயுள்ளன. " ஆயண்டிரன், நன்னன் வேண்மான்" முதலிய வேளிர்வரலாறுகளைப் படித்து பெருமகிழ் வடைந்தேன். உன்னால் எழுதப்பட்டுள்ள வியாசங்களெல்லாம், நுண்ணிய ஆராய்ச்சியொடுகூடியே விளங்குங்குதலால், இனி எழுதப்படுவனவும் அவ்வாறு விளங்கத் தடையில்லை என்றே நம்புகிறேன். (5--3--06)

    (3) ஸ்ரீமத்- திருமணம்- செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் M.A., பச்சையப்பன் காலேஜ், சென்னை;---- ஐயரே! புறநானூறு வகுப்பிற் பாடமாக நடக்கும்போது அதில் இருங்கோவேளின் ஆதிக்க முரைக்கும் இடத்திலும் நச்சினார்க்கினியர், வேளிரின் ஆதிக்க முரைக்கின்ற இடத்திலும் பிற்றை நாள் வரலாறுகளுடன் தொடர்புபடுத்த இயலாது இடர்ப்பட்டுவிட்டேன். ஆயினும், தாங்கள் எழுதிய வேளிர் வரலாற்றில் இன்றியமையாத சரித்திரக் கூறுகளும் மேற்கோள்களும் பற்றாசான சான்றுகளும்--" பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய--மாமலை பயந்த காமரு மணியும்-இடைபடச்சேய வாயினுந் தொடை
    -----------
    page vii

    புணர்ந்து-அருவிலை நன்கலம் அமைக்குங் காலை--ஒருவழித் தோன்றி யாங்கு"--இயைபுபடத் தொடர்புடையனவாய் அமைந்திருத்தல் கண்டு அடங்கா மகிழ்ச்சி அடைந்துளேன். தங்கள் வியாசத்தைப் படித்தவுடனே, தொண்டை மண்டலத்து உயர்துளுவ வேளாளர் என்னும் எங்கள் பூர்வோத்தரம் இப்பொழுது வெள்ளிடை விலங்கலாக விளக்கமெய்துகின்றது. தங்கள் வியாசத்தைப் படித்த அளவிலே என்பாலெழுந்த மகிழ்ச்சி, யான் உள்ளபடி செல்வக் கேசவராயனாயின், உடனே வரிசைகள்பல செய்யுமாறு என்னை ஏவியிருக்கும்; யான் சேதுபதியல்லனே, பாண்டித்துரைச்சாமியல்லனே, புதுக்கோட்டைத் தொண்டைமான் அல்லனே...........இதனால், என்னுளங்கொளா மகிழ்ச்சி என்னைவிட்டு என்னுள்ளத்தை ஈர்த்துக்கொண்டு தங்கள்பாற் சென்றுவிட்டது. அதன் மகிழ்ச்சியை அங்கீகரித்து அதனை என்பால் விடுக்க. (1905-ஜூலை.5)

    (4) ப்ரம்மஸ்ரீ: S. இராதாகிருஷ்ணையர் அவர்கள், பிரின்ஸிபால், மகாராஜா காலேஜ், புதுக்கோட்டை:-- தங்களால் எழுதப்பெற்ற பழைய கைத்தொழில் வியாபாரங்கள், வேளிர் வரலாறு, மாதைத் திருவேங்கடநாதர், பொய்யாமொழிப் புலவர், வீரத்தாய்மார் முதலியவை வந்து சேர்ந்தன. இவற்றுட் சிலவற்றை முன்னரே வாசித்திருக்கிறேன். இவை மிக்க ஆராய்ச்சியைக் காண்பிக்கின்றன என்று யாவரும் ஒப்புக்கொள்வார்கள். தாங்கள் தமிழுக்கென்று உழைத்து வருவதுபோல் அநேகர் உழைத்தால், மறைந்து கிடக்கும் பல அரிய விஷயங்கள் எளிதில் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ( 5--2--1908.)

    (5) ஸ்ரீமத்-J.M. நல்லசாமிப் பிள்ளையவர்கள் B.A., B.L., டி.முன்ஸீப், ராஜமஹேந்திரம்--(17-4-1910) "புறப்பொருள் வெண்பாமாலை புறநானூறு இவைகளினின்றும், டாக்டர் ஜி.யூ. போப்பையரவர்களால் மொழி பெயர்க்கப்பட்டவைகளை இப்பொழுது அச்சிட்டுவருகின்றேன். நான் எழுதி வரும் அதன் உரைப்பாயிரத்திற்குத் தாங்கள் எழுதியுள்ள "வான்மீகரும் தென்னாடும்" என்ற விஷயங்களும் மிகவும் முக்கியமானவை. வேளாண் மாந்தரைப் பற்றிய எனது சந்தேகம், இதுபொழுது கண்ட வேளிர் வரலாற்றினால் ஒழிந்ததாகும். இவ்வாராய்ச்சியில் தாங்கள் செய்துள்ளது சிறப்பிக்கற் பாலது.
    -------
    page viii

    தங்கள் பத்திரிகை யொவ்வொன்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படின் நம்மவர்க்கும் ஐரோப்பியர்க்கும் பெரிதும் பிரயோசனப்படும்; எனக்குச் செய்ய மிகவும் அவாவுண்டு; காலமின்மையே தடை. தாங்கள் எழுதியுள்ள விஷயங்களை யெல்லாம் என்னுரையில் பேசியிருக்கிறேன்."

    (6) மிஸ்டர் டி. சவரிராயப் பிள்ளையவர்கள், M.R.A.S., தலைமைத் தமிழ்ப் பண்டிதர், சென்ட்-ஜோஸப்ஸ்-காலேஜ். திருச்சி:-- " தாங்கள் செந்தமிழ்ப்பத்திரிகையிற் பத்திராதிப-ஆஸனத்தின் கீழ் எழுதிவருவன ஆராய்ச்சித் திறம் அமைந்தவை: மிக அருமையான விஷயங்கள். தங்கள் ஆராய்ச்சித் திறத்தையும் மதிநுட்பத்தையும் எக்காலத்தும் பெரிதும் வியக்கின்றேன்.................. தாங்கள் வெளியிட்ட வேளிர் வரலாற்றைக் கொழும்பு ஸ்ரீமாந்-V.J. தம்பிப் பிள்ளையவர்கள் M.R.A.S., ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "ராயல்-ஏஷியாடிக்-ஸொஸைடி" க்கு அனுப்பியிரு்க்கிறார்கள். அவ்விஷயம் அச்சங்கத்தாரால் ஒப்புக்கொள்ளப்ப்ட்டது. இச்சங்கத்தின் 'மெம்பர்ஷிப்' தான் 'M.R.A.S.,-- என்பது, தங்களுக்கும் இக்கௌரவம் உரித்தாக வேண்டுமென்பது என் அத்யந்த விருப்பம்.......... இன்னும் தாங்கள் எழுதியுள்ள பழைய கைத்தொழில் வியாபாரங்கள், வீரத்தாய்மார் முதலிய விஷயங்கள் மிக அருமையானவை: தமிழரின் பண்டைப்பெருமைகளை நன்கு விளக்குவன (7--11--7)

    (7) Brahma Sri. K..Sundara Rama Aiyer Avergal, M.A., Professor of History, Kumbakonam College," I read 2- articles in "Sen-Tamil" with very great interest, வேளிர் வரலாறு and பாரதகாலமும் தமிழரும். I was taken by surprise at the erudition displayed and the ingenuity of the suggestions and inference made regarding the past history of S. India. The writer expresses himself also with unusual reform of style that-- a style that commends itself to me atleast. It is that which has most affinity to the vigour and ease of modern English Writers. I trust Mr. மு. இராகவையங்கார் will continue his researches and writings and convey more instruction regarding ancient S. India.
    ---------------
    page ix

    I regard his writings altogether as of an epoch-making character and trust he will keep the promise he has given of a future of renown. It is now that the work of our great scholar Mr. Aiyer Avergal, is bearing fruit" (August 26th 05.)

    (8) Sri., V.Gopala Aiyer, B.A., B.L, (Author of Chronology of Ancient India, Chittoor):-- " I am much obliged to you for your instructive essay on Velir, a copy of which was duly received by me a few days ago. The various lines of reasoning by which you seek to prove your theories are the evident result of your varied and extensive study of Tamil history and literature and I hope you will continue your interesting researches. I am glad to find you support the date I have given for the great Mahabharata War." (11--7--05.)

    (9) Sri., V.J. Thambi Pillai Avergal, M.R., A.S. Audit office, Colombo.--" May I take the liberty to write to you that I intend to have an English Translation of your very interesting paper entitled வேளிர் வரலாறு appearing in the last but one issue of 'Sen-Tamil" published in the journal of the Royal Asiatic Society here. It is full of facts that ought to be more generally known. I had arrived at the same conclusions nearly two years ago. I hope that S.India, will yet reveal facts of history that will try to unite all the great races of India into one great nation. I shall send you a copy when printed" (August11,05'),
    ii (12th, June.07.) " Dear Sir, You will be very glad to hear that the committee of the Royal Asiatic Society, Ceylon Branch have informed me to-day that they have accepted with thanks my

    -------------
    page x

    English tanslation of your interesting paper on the history of the Vels [ வேளிர்வரலாறு.] Your paper is no doubt, one of the great merit and deserves to be published in the Journal of the Royal Asiatic Society for the perusal of learned men all over the world. You are indebted, I think, to me, for bringing your idea and theories to such prominence. I have done it as a labour of love. Your paper on 'Tamil Alphabet' is most interesying and original in some respects."
    -------------------


    page 1

    ஸ்ரீ:

    வேளிர் வரலாறு


    செந்தமிழ் வளர்த்த பெருமையிற் சேர சோழ பாண்டியர்க்கு எவ்வளவு பாகமுண்டோ, அதற்கு அதிகமில்லாமற்போயினும், அவரளவு சமபாகம் பெற்றுநின்ற ஒரு பெருங் கூட்டத்தார் முற்காலத்தே தமிழ்நாட்டில் விளங்கியிருந்தனர் எனின், அது சிலர்க்கு வியப்பாகத் தோற்றலாம். ஆனால், பழைய நூலாராய்ச்சியுடைய செந்தமிழறிஞர்க்கு அது சிறிதும் வியப்பன்று. பண்டை யிலக்கியங்களை ஆராயுமிடத்து, மூவேந்தர் படைத்த தமிழ்ப்பெருமையளவு தாமும் படைத்து நின்ற ஒரு கூட்டத்தார் தமிழகத்தே விளக்கமுற்றிருந்த செய்தி வெளியாகும். இன்னோர் தாம் வேளிர்* என்றழைக்கப்-படுவார்கள். இரவாமலீந்த கடையேழுவள்ளல்களிற்† பலர் இவர்களே. “கொடுக்கிலா தானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை”‡ என்னும் திருவாக்கில், வள்ளன்மைக்கே ஓரெல்லையாக வைத்துப் பாராட்டப் பெற்றவன் இவருள் ஒருவனேயாவன். வரையாவண்மையால் தானடைந்த ஒப்பற்ற புகழைக்கண்டு மூவேந்தரும்$ அழுக்காறு கொள்ளும்படி நின்ற இப்பெருவள்ளல் விளங்கியது வேளிர் குலமெனின், அதற்கு வேறொரு பெருமையும் வேண்டுமோ?

      * வேளிர், வேள் என்பதன் பன்மைச்சொல்: கேள் கேளிர் என்றாற்போல.
      † பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி என்ற எழுவர். (புறம்-158; சிறுபாண் - அடி. 84--122.)
      ‡ ஸ்ரீ: சுந்தரமூர்த்திநாயனார் தேவாரம்.
      $ இவன் வேள் - பாரியாவன்; இவனது வள்ளன்மையால் உண்டாகிய பெரும்புகழ், தமிழரசராகிய சேர சோழ பாண்டியரதுகீர்த்திகளையுங்கீழ்ப்படுத்து மேம்பட்டதனால் அழுக்காறுகொண்ட அவ்வரசர்கள், தம்மிற்கூடி அவ்வேளின் பறம்புமலையை முற்றுகையிட்டு, அவ்வள்ளலையும் வஞ்சத்தாற் கொன்றனர். இச்சரிதவிரிவை, இந்நூலுள் வேள்-பாரி என்ற தலைப்பின்கீழ்க் கண்டுகொள்க.

    -----------
    page 2

    இங்ஙனம் புகழ்வாய்ந்தகுலத்தவரின் வரளாறுபற்றி நம்மவராற் சிறப்பாக ஆராய்ந்தறியப்பட்டவை இதுவரை இல்லையென்றே சொல்லலாம். செந்தமிழரசர் என்ற அபிமானத்தாற் சேர சோழ பாண்டியரது வரலாறுகளை அறிவதிற்றமிழ் மக்களால் எத்துணை ஊக்கங் காட்டப்படுகின்றதோ, அதனிற் சிறு பகுதியேனும் இவ்வேளிர் விஷயத்தினுங் காட்டுதல் நம்மவரது பெருங் கடமையன்றோ. ஆனால், இம்முயற்சியில் இறங்கத்தக்க கருவிகள் கிடைப்ப தரிதென்று சொல்லக்கூடும். வேளிரது பரம்பரை வரலாறுகளை எழுதிவைத்த பழைய நூல்களேனும் சாதனங்களேனும் கிடையாவென்பது உண்மையே. இப்போது காணப்படுவதெல்லாம், புறநானூறு முதலிய சிலபழைய தமிழ் நூல்களிற் புலவர்கள் அவ்வப்போது பாடிப்போந்த ஒரு சில செய்யுட்களேயாம். இச் சிலவற்றைக்கொண்டு வேளிர் வரலாறெல்லாந் தெரிதல் எங்ஙனங் கூடும்? எனினும், வேளிர் வரலாறாகிய இருண்ட களஞ்சியத்தே, கையிலுள்ள இச்சிறு வெளிச்சங்களைத் துணைக் கொண்டு கூடியவளவு நாம் துருவுவோம். அங்ஙனந் துருவி நோக்குவதிற் றெரிகின்றவற்றைத் தமிழ்மக்கட்கு வெளியிட முயல்வோம்.

    பழைய சங்கநூல்களிலே, வேளிர் என்ற ஒரு கூட்டத்தார், தமிழ்ப் பேரரசர்களாகிய சேர சோழ பாண்டியரை அடுத்துப் பல விடங்களினுங் கூறப்படுகின்றனர்; இதனை:--“பண்கெழு வேந்தரும் வேளிரும்” எனப் புறநானூற்றினும், “இருபெரு வேந்தரொடு வேளிர்” என மதுரைக்காஞ்சியினும், “வேந்தரும் வேளிரும்” எனப் பதிற்றுப்பத்திற் பலவிடங்களினும் வருதலால் அறியலாம். இதனால், மூவேந்தரையுமடுத்து முற்காலத்தே தமிழ்நாட்டில் மதிக்கப்பட்ட சிற்றரசருள், இவ்வேளிரே முற்பட்டவர் என்பது விளங்கும். அன்றியும் “தொன்முதிர் வேளிர்” (அகம் - 258; புறம் - 24) “நாற்பத்தொன்பது வழிமுறைவந்த வேளிர்” (புறம் - 201) “இருங் கோவேள் மருங்கு” (பட்டினப்பாலை) “எவ்விதொல்குடி” (புறம் - 202) என நூல்களிற் காணப்படுதலின், இன்னோர் பண்டைக்கால முதலே தமிழ்நாட்டில் விளங்கியிருந்தவர் என்பதும் தெளியப்படுகின்றது.

    இனி, இவ்வேளிர் யாவர்? இவர் குலம் யாது? இவர் தமிழ்நாட்டின் பழைய மக்களா? அன்றி இடையில் வந்தேறியவரா? இவர்

    -------------
    page 3

    புராதன நாடு யாது? இவர் வந்தேறிய காலமும் வரலாறும் என்னை? என்பன முதலிய செய்திகளை விசாரிப்போம்.

    வேளிர் வரலாற்றைப்பற்றித் தமிழ்நாட்டில் வழங்கிவந்த பழைய செய்திகள் சிலவற்றை, ஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில், அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:-"தேவரெல்லாங்கூடி 'யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர்.....
    துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி* வேளிர் உள்ளிட்டாரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கி.......... பொதியிலின்கணிருந்தனர்" † - எனக்காண்க. இவ்வரலாற்றுள், "துவராபதிப்‡ போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல்$ வழிக்கண்" எனத் துவராபதிக்கும் திருமாலுக்கும் சம்பந்தங் கூறப்படுதலால், அத்தொடர், துவாரகையைப் புதிதாகநிருமித் தாட்சிபுரிந்த கண்ண
    பிரானைப்பற்றியதென்பது எளிதிற் புலப்படத்தக்கது. இனி, மேற்கூறப்பட்ட செய்திகளுள், 'அகத்தியமுனிவர் துவாரகை சென்று

      * 'பதினெண்கோடி' என அச்சுப்பதிப்பில் உள்ளதாயினும், ஏட்டுப்பிரதிகளில் அவ்வாறின்மையாலும், பொருளதிகாரம், 32 - ம் சூத்திரவுரையிலும் 'பதினெண்குடி' என்றே ஆளப்படுதலாலும் 'குடி' என்பதே பொருத்தமாம்.
      † இவ்வாறு எழுதிச்செல்லும் நச்சினார்க்கினியர் - "இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து அவனை ஆண்டு வாராமை விலக்கி" என்ற செய்தியையும் உடன் கூறுகின்றார். இச்செய்தி, மதுரைக்காஞ்சியுரையிலும் அவ்வுரைகாரராற் குறிக்கப்பட்டுள்ளது. இவ்விராவணன் இராமபிரானோடு பொருது வீழ்ந்தவனாயின், கண்ணபிரான் காலத்துக்குப் பின்னிகழ்ந்த செய்தியுடன் இராவணன் விஷயம் கூறப்படுதற்குக் காரணம் புலப்படவில்லை. ஒருகால், இவ்விராவணன் தென்றிசையாண்ட வேறொருவனெனிற் பொருந்தும்.
      ‡ துவாரகை.
      $ நிலங்கடந்த நெடுமுடியண்ணல் - உலகமளத்தற்குத் திருவிக்ரமாவதாரம் எடுத்த திருமால். தொல் - பாயிரவுரையில் மற்றோரிடத்தும் "நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகந்தவஞ்செய்து வீடுபெற்றமலையாதலானும், வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்" என இத்தொடரையே நச்சினார்க்கினியர் திருமாலுக்கு வழங்குதல் காண்க. "நீணிலங் கடந்த நெடுமுடி யண்ணல் - தாடொழு தகையேன்" என்றார் இளங்கோவடிகளும். (சிலப். 11-ம் காதை - 148.)

    ---------------
    page 4

    கண்ணபிரான் வழியினராகிய அரசரையும் வேளிரையும் தென்னாட்டிற் குடியேற்றினர்" என்பதே, நாம் இங்கு ஆராய்தற்குரியது. அகத்தியனார் தென்னாடுபுகுந்த வரலாற்றைப்பற்றிப் புராணங்களிற் சொல்லப்பட்டிருப்பதை ஒத்தே மேற்கூறிய செய்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளனவாயினும், கண்ணன்வழிவந்தோர் பலரை அம்முனிவர் தம்முடன் கொணர்ந்தாரென்பது அப்புராணங்களிற் கூறப்பட்டிருப்பதாக இப்போது தெரியக்கூடவில்லை. எனினும், இச்செய்தியே, "வேந்துவினையியற்கை" என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும்-"இது, மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்* வேந்தன் தொழில் உரித்தென்கின்றது" (பொருளதி - 32) என, மற்றும் ஒருமுறை எடுத்தோதி வற்புறுத்தப்பட்டுளது.

    இப்பிற்கூற்றிலே, முன்குறித்த தொடரிற்கண்ட அருவாளரை யொழித்து, ஒழிந்த நரபதியருடன் கூடிய வேளிரே கண்ணன் வழியினரெனவும், அவர் பதினெண்வகைக் குடியினராயிருந்தனர் எனவும்,† அவரெல்லாம் அரசுரிமை எய்தற்குரியவரெனவும் குறிக்கப் படுதல் காணலாம். இவ்வாறு, வேளிரைப்பற்றிய வரலாற்றை நச்சினார்க்கினியர் ஒருமுறைக்கு இருமுறை எழுதுதலால், அஃது எதோ ஒரு பிரமாணம்பற்றியே அவர்காலத்து வழங்கியிருத்தல் வேண்டு

      * ஸ்ரீவியாஸபாரதம், ஸபாபர்வம், 14-ம் அத்யாயத்தில், ஜராஸந்தன் விஷயமாகக் கண்ணபிரான் யுதிஷ்டரருக்குக் கூறிவருமிடத்து -- "ராஜாவே! ஜராஸந்தன் எதிர்த்தலாற் கரைகடந்த பயம் எங்கட்கு நேர்ந்தபோது, நாங்கள் பதினெண் குலத்தோர்கள் சேர்ந்து இவ்வாலோசனை செய்தோம்" என்று, இரு முறை குறிப்பிடுதலால், யாதவர் பதினெண்வகைக் குடியினராயிருந்தமை தெளிவாகின்றது. (ஸ்ரீ ம.வீ. இராமனுஜாசாரியரவர்கள் பதிப்பித்துவரும் வியாஸபாரதம் தமிழ்பொழிபெயர்ப்புப் பார்க்க.) ஸ்ரீமத் பாகவதத்தில், இவர்கள் ஐந்து குலமாகவும், 101-கிளைகளாகவும் கூறப்படுவர். (தசமஸ்கந்தம்; அத்-1, 10)
      † முன்குறித்த வாக்யத்தில், 'அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்' என வேறுவேறாகக் குறிக்கப்பட்டிருப்பினும், இவ் வாக்யத்தில் 'நரபதிய ருடன்கொணர்ந்த 18-குடிவேளிர்' என வருவதனால், அந்நரபதிகள் வேளிருடைய தலைவர்களே என்பது பெறப்படுகின்றது. வேளிர் பதினென்வகையினரானமைக்கேற்ப, அவரரசரும் பதினெண்மராயினர் போலும். 

    ---------
    page 5

    மென்று தெரிகிறது. ஆனால், அவ்வுரைகாரர் தாமெழுதியவற்றுக்குக் காரணமாயிருந்த மேற்கோளை எடுத்துக்காட்டினாரில்லை. இச்செய்திகளைப் பிரமாணத்தாலன்றிப் பிற்காலத்தொருவர் கூற்றால் மட்டும் நம்பி மேற்சொல்லுதல், சரித்திரவுண்மை யறிவதற்குப் போதாததாம். மேலும், துவாரகையாண்ட கண்ணன்வழியினர் இவ்வேளிரெனின், அது புதியசெய்தியன்றோ. ஆதலால், நச்சினார்க்கினியர் எழுதியவற்றை அடியாகக்கொண்டு, அவற்றி னுண்மையை விளக்கவல்ல வேறு சாதனங்கள் உளவா என்பதை இனி, ஆராய்ச்சி செய்வோம்.

    நச்சினார்கிகினியர் எழுத்தின்படி, வேளிரென்பவர் கண்ணன் வழியினராயின், அவரை நாம் யாதவர் என்றே அழைக்கலாம்: என்னெனின்-- அப்பெருமான் அவதரித்தது யதுவமிசத்திலென்பது* பிரசித்தமன்றோ. இனி, இவ்வேளிர் துவாரகையினின்று தென்னாடு புகுந்த பழைய யாதவராயின், அன்னோர்வரலாறு பண்டைத் தமிழ் நூல்களிற் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இவர்கள் கண்ணன் காலத்தை அடுத்துத் தெற்கே வந்தேறியவராக நச்சினார்க்கினியர் கூறுதலின், அவர்கள் செய்தியை நன்குவிளக்கக்கூடிய அக்காலத்து நூல்கள் இறந்தனபோலும்; எனினும், பிற்பட்ட கடைச்சங்கச் செய்யுளில், இவ்வேளிர் வராற்றைக் குறிப்பிக்கக்கூடிய இரண்டொரு செய்திகளும் இல்லாமற்போகவில்லை. கடைச்சங்கத்தவராகிய கபிலர் என்ற புலவர்பெருமான் இருங்கோவேள் என்ற சிற்றரசனை நேரில் அழைக்குமிடத்தில்:-

      * " யது என்பான், பாண்டவரின் மூதாதைகளில் ஒருவனாகிய யயாதிக்குத் தேவயானை வயிற்றில் உதித்த புத்திரன். இவன்வம்சம் பல்கிப் பலகிளைகளாகி அநேக பிரசித்திபெற்ற ராஜர்களைத் தந்தது. யதுவின் மூத்தகுமாரனாகிய ஸகஸ்ரஜித்தினாலே ஹேஹயவமிசமாயிற்று. அவ்வம்சத்திலே கார்த்த வீர்யார்ச்சுனன் என்ற பிரசித்திபெற்ற அரசன் தோன்றினான். அவன் சந்ததியிலே தாளஜங்கர்கள் தோன்றி விளங்கினர். யதுவின் இரண்டாம்புத்திரனாகிய குரோஷ்டுஷ வம்சத்திலே பிரசித்திபெற்றவர்கள்--சசிபிந்து, சியாமகன், விதர்ப்பன் என்பவர்கள். இவருள் விதர்ப்பனால் விதர்ப்பராஜவம்சம் வந்தது. விதர்ப்பன் மூன்றாம்புத்திரனாலே சேதிவமிசம் வந்தது. இரண்டாம் புத்திரன் வமிசத்தவனாகிய சாத்வதனால் போஜவமிசமும், அந்தகவமிசமும், விருஷ்ணிகவமிசமும் வந்தன. இவற்றுள், விருஷ்ணிக வமிசத்திலேதான் கண்ணபிரான் அவதரித்தது.--அபிதானகோசம், யது என்ற தலைப்பின்கீழ்க் காண்க.

    ------------
    page 6

      "நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
      செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
      உவரா வீகைத் துவரை யாண்டு
      நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
      வேளிருள் வேளே"

    எனக் கூறியிருக்கும் அடிகள் புறநானூற்றில் (201) காணப்படுகின்றன. இதன்பொருள்:- நீதான், வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை-என்பதாம். இப்பழைய மேற்கோளால், வேளிரென்பார் துவாரகையினின்றுவந்து தென்னாடாண்ட சிற்றரச வகுப்பினர் என்பதுமட்டில் நன்கு விளங்கிற்று; விளங்கவே, மேற்கூறிப்போந்த நச்சினார்க்கினியர் செய்திகளிலே, சிறந்த தொன்றற்குப் பிரபல ஆதாரங் காணப்பட்டதாம்.

    இனி, வேளிர் துவாரகையினின்று வந்தேறியவர் என்பதற்கு இலக்கியமுள்ளதாயினும், அவர் யாதவகுலத்தவரென்பதை விளக்கவல்ல பிரமாணங்களை முன்னூல்களினின்று அறிதல் இப்போது அரிதாம். ஆயினும், யது வமிசத்தோர் ஆதியிற் கங்கைபாயுந் தேசங்களிற் பல்கிப் பெருகியகாலத்தே, அன்னோர் பகைவர்களாற்* றுன்பமுறாது வாழ்தல்வேண்டி, அக்குலத் தலைவராகிய கண்ணபிரான், மேல்கடற்பக்கத்தே துவாரகையைப் புதிதாக நிருமித்து, அதனைச் சூழ்ந்து கிடந்த காட்டுப் பிரதேசங்களைத் திருத்தி நாடுகளாக்கி எண்ணிறந்த யாதவர்களை ஆங்குக் குடியேற்றித் தாம் அவர்கட்கு இரக்‌ஷகராக நின்று உதவி வந்தனர் - என்ற செய்தி புராணேதிகாசங்களிற் கேட்கப்படுகின்றது. கண்ணபிரான் தன்னடிச்சோதிக்கு+ எழுந்தருளுங் காலத்தே, இவ் யாதவரிற் பலர் தமக்குள் விளைந்த பெருங்

      * ஜராஸந்தன் முதலியோர்.
      + பரமபதம்.

    ------------
    page 7

    கலகத்தாற் போர்புரிந்து மாணடனரென்பதும், அக்காலத்துப் பலர் அவ்விடத்தைவிட்டு வெளியேறினர் என்பதும், அங்ஙனம் வெளியேறியவர் கோதாவரியின் தென்கரைப் பக்கங்களிலும் பரவலாயினர் என்பதும் இதிகாசங்களால் அறியப்படுகின்றன.
    இச் செய்திகளால், யாதவ குலத்தார்க்குப் பலதேசங்களிலும் அடுத்தடுத்துக் குடியேறும்படி நேர்ந்துவந்ததென்றும், அம்முறையில், அன்னோர் முதலிற் கங்கை பாயும் நாடுகளினின்று மேல்கடலோரங் குடியேறிக் காலாந் தரத்தில் மஹாராஷ்டிரமெனவழங்கும் தேசமுழுதும் பரவியிருந்தனரென்றும் விளங்கலாம். இவ்வாறாயின், அவ்யாதவர்கள் தாம் பரவியிருந்த நாட்டுக்குந் தெற்கணிருந்த தமிழகத்துக் காடுகளைத் திருத்தி, ஆண்டும் குடியேறினர் என்று கொள்வதிற் புதுமை யொன்றுமில்லை என்க. யாதவர் தெற்கே வந்ததைப்பற்றிய நச்சினார்க்கினியர் எழுத்துக்களை முழுதும் ஆதரிக்கக் கூடிய பிரமாணம் இப்போது கிடைப்பதரிதேனும், அவற்றைக் குறிப்பிக்கக் கூடிய பிரமாணமும் இல்லாமற் போகவில்லை என்பதை இதனால் அறியலாம். யாதவர் தென்னாட்டுங் குடியேறினர் என்ற இவ்வூகத்துக்குப் பிரசித்தரான சரித்திராசிரியர் ஒருவரும் சம்மதமளித்தல் கவனிக்கத்தக்கது:
    ஸ்ரீரோமேச சந்த்ர தத்தர் எழுதிய "பழைய இந்திய நாகரீகம்" என்ற அரியநூலின் முதற்றொகுதியில்* யாதவரைப்பற்றி எழுதப் பட்டிருப்பதாவது:-"கண்ணனைத் தலைமையாகக்கொண்ட யாதவர்கள் (வட) மதுரையைவிட்டு நீங்கிக் கூர்ச்சரத்துள்ள துவாரகையிற் குடியேறினார்கள். அங்கே அவர்கள் அதிககாலம் தங்கவில்லை. அவர்கள் தங்கட்குள்ளே பெருங்கலகம் விளைக்க, (அவருட்பலர்) துவாரகையை நீங்கிக் கடல்வழியே பிரயாணித்தனர். அங்ஙனம் பிரயாணித்தவர்கள் தென்னிந்தியாவை அடைந்து ஆங்குப் புதுராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகிறது" என்பதே. இவ்வாறு தத்தரவர்கள் எழுதுவது நச்சினார்க்கினியர் எழுதிய வேளிர் வரலாற்றோடு சில அமிசங்களில் ஒத்திருக்கின்றமை காணலாம். "வேளிர் யாதவரே" எனக்கண்டு தமிழறிஞர் ஆங்கிலத்தில் வியாசமெழுத, அதனை நோக்கி "யாதவர் தென்னிந்தியாவில் ராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகின்றது"
      -
      * Dutt's Civilization in Ancient India: Part I, page 210.

    ------------
    page 8

    என்று ஸ்ரீதத்தர் எழுதியிருக்கக்கூடாதோ எனின், இதுவரை இக்கொள்கைபற்றி எவரும் வரைந்திருப்பதாகத் தெரியாமையால், அங்ஙனஞ் சொல்வதற்கில்லை. ஆதலின், அச்சரித்திராசிரியர், தென்னாட்டிற்போல வடநாட்டும் வழங்கும் ஏதோ ஒரு கர்ண பரம்பரைச் செய்தியைப்பற்றிக்கொண்டு தம் ஆராய்ச்சியிற் றோற்றியதை எழுதினர் என்பதே முறையாம். ஆகவே, நச்சினார்க்கினியர் எழுதிய செய்திகளில் மற்றொன்றற்கும் வடநாட்டுப் பண்டிதரொருவர் சம்மதமளித்தலின், கண்ணன் வழியினார் பலர் தென்னாட்டுக் குடிபுக்கவரலாறு ஒருபடியாக நிருபணமாகின்றது.

    இனி, வேளிர் என்பவர் யாதவகுலத்தவரே என்பதைக் குறிக்கவல்ல வேறுபல சான்றுகளும் காணப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இனி எழுதுவோம். ஏறக்குறைய, தொள்ளாயிரம் வருஷங்களுக்கு முன் மைசூர் நாட்டை அடிப்படுத்தி, அந்நாட்டிலுள்ள துவாரசமுத்திரம் என்ற நகரத்திருந்து ஆட்சிபுரிந்தவர் ஹொய்சள-யாதவர் என்பதைப் பலர் தெரிந்திருக்கலாம். *இவ்வரசர், ஆதியிற் கூர்ச்சரநாட்டுத் துவாரகையினின்று குடியேறியவரென்பதும், யாதவ குலத்தவரென்பதும் சரித்திர பூர்வமாக அறியப்பட்டவை. இவ்வாறு வந்தேறிய யாதவத் தலைவர், கன்னட பாஷையில், பேலாலர் என வழங்கப்படுகின்றனர். தமிழர் வழங்கும் வேளாளர் என்ற சொல்லோடு இப்பேலாலபதம் பெரிதும் ஒற்றுமை பெறுதல் ஆராயத்தக்கது. அன்றியும், இப் பேலால-யாதவர் காலத்தே உண்டாகிய தலை நகரொன்று, வேளூர் அல்லது வேளாபுரம் என அவர்பெயரால் வழங்கப்பட்டுள்ளது.+ இதனால், கன்னடவடிவில் அவ்யாதவர் பேலாலர் என வழங்கப்பட்டிருப்பினும், அச் சொல்லின் உண்மையுருவம் வேளாளர் எனத்தெரிதலோடு, வேள் என்ற பெயரும் அவருக்கு முன்பு வழங்கிவந்த தென்பதும், அறியப்படும். ஸ்ரீமத். வி. கனகசபைப் பிள்ளையவர்களும் - மைசூர்ப் பேலாலரையும் தமிழ் வேளாளரையும்

      * இவ்வரசரைப்பற்றிய சரித்திரக்குறிப்பை, Lewis Rice துரையவர்கள் எழுதிய "Mysore Gazetteer" என்ற நூலில், "Historical Period" என்ற தலைப்பின் கீழ் அறியலாம்.
      + இஃது இப்போது ஹாலபீடு என வழங்கப்படுகிறது.

    -------
    page 9

    யாதவகுலத்தவரென்று விளங்கக்கூறாது போயினும், ஒரு குலத்தவராகவே தம்நூலில் எழுதல்காணலாம். *இனி, இப்பேலாலயாதவரும் பண்டைத் தமிழ்வேளிரும் ஒரு கூட்டத்தவரே என்பதற்கு வேறொரு சிறந்த சான்றுங் கூறுவோம்.

    புறநானூறு என்ற சங்க நூலிற் கபிலரென்னும் புலவர், "வேளிருள் ஒருவனாகிய இருங்கோவேளை அழைக்குமிடத்து, அவனை, துவாரகையினின்று வந்து தென்னாடாண்ட வேளிர் வழியினன் என்று கூறியிருக்குஞ் செய்தி முன்னரே குறிக்கப்பட்டது. அவ் வேளை நோக்கிக் கபிலர் தாம்பாடிய இரண்டுபாடல்களிலும் (புறம்-202, 203) புலிகடிமால் என்ற சிறப்புப்பெயரால் அவனைக் கூறுகின்றனர். இதற்குப் புறநானூற்றுரைகாரர்-"புலிகடிமால்- இவனுக்கு ஒரு பெயர்" என்ற மட்டிற் காட்டி, அப்பெயர்க்காரணத்தை விளக்காமற் போயினர். அன்றியும், அதன்காரணத்தைச் சங்க நூல்களினின்று தெரிதல் இப்போது அரிதாம். எனினும், பிற்காலத்தே துவாரகையினின்று வந்து மைசூர் நாட்டை ஆண்ட பேலாலர், அப்பெயர் வழக்கைத் தம் வரலாற்றால் விளக்கித் தாம் தமிழ்வேளிருடன் ஒற்றுமை பெற்றவர் என்பதைக் குறிப்பித்தல் நோக்கத்தக்கது. "கொங்குதேச ராஜாக்கள் சரித்திரம்" என்ற நூலிலும், + ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வேறுசில நூல்களிலும் பேலால யாதவர் ஹொய்ஸலர் என்ற பெயர் பெற்றதற்குப் பின்வருங் கதை கூறப்பட்டுளது:- தபங்கர் என்ற முனிவர் காட்டில் தவஞ்செய்துகொண்டிருக்கும்போது, ஒரு புலி அவர் மேற் பாய்தற்கு நெருங்க, அதுகண்டு அம்முனிவர், அப்போது வேட்டைமுடித்துவந்து நின்ற சளன் என்னும் யாதவ அரசனை நோக்கி, 'இப்புலியைக் கொல்க' எனலும், அவ்வரசனும் அதனைத் தன்னம்பால் எய்து வீழ்த்தினமையால், அவன் வமிசத்தோர் "ஹொய்சளர்" ++ எனக்

      * The Tamils 1800 years ago. pp 114.
      + இந்நூல், தமிழ்வசனநடையில் அமைந்தது. சென்னை மியூஸ்யத்தைச் சார்ந்துள்ள கையெழுத்துப் புத்தகசாலையில் இதன் பிரதி யுள்ளது.
      ++ கன்னடத்தில், "ஹொய்-சள" என்பது, "கொல்-சளனே' எனப் பொருள்படும் என்பர். 

    -------------
    page 10

    கன்னடத்தில் வழங்கப்பட்டார் என்பதாம்*. இக்கதை அப் பேலாலரைப்போலவே துவாரகையினின்றுவந்து முற்காலத்துத் தமிழ்நாடாண்ட வேளிர் குலத்தவனாகிய இருங்கோவேள் என்பான் 'புலிகடிமால்' எனப் பெயர் பெற்றதன் காரணத்தையும் விளக்கக்கூடியதன்றோ. புலியைக் கொன்று முனிவரைக் காத்த யாதவத்தலைவனொருவனைத் தங்கள் வழிக்கு ஆதி முன்னோனாகக் கொண்டமை பற்றியே, அவ்விருவரும் ஹொய்சளர் எனவும், புலிகடிமால் எனவும் ஒத்த சரித்திரம் பெற்றனர் என உணர்க. இவ்வாறு, 1800- ஆண்டுகட்குமுற்பட்டவேளிரும், 900-ஆண்டுகட்கு முந்திய பேலாலரும் சாதியாலும் பெயராலும் சரிதத்தாலும் பெரிதும் ஒற்றுமைகொண்டு, தாம் ஒரே குலத்தவர் என்று
    காட்டிக் கொள்வதைக் காணலாம்.

    இனி, இவ்விருவகை யாதவரும், முறையே வேள் அல்லது வேளாளர் எனப் பெயர்பெற்றதன் காரணமும் ஆராயத்தக்கதாம். விந்தியமலையின் தென்பக்கத்து நாடுகளை ஆண்டுவந்த பழைய அரசருள், சளுக்கியர் என்பவரும் ஒருவர் என்பது பலர்க்குத் தெரிந்தது. இவ் வரசரது புராதனராஜ்யம், கூர்ச்சரமும் அதன் பக்கமுமாம். பிற்காலத்தே, இவருள் ஒரு கூட்டத்தார் கீழ்கடலைச்சார்ந்த நாடுகளைக் கைப்படுத்தாண்டமையால், இவ் வேறுபாடறிதற்கு இவர்களைக் கீழைச்சளுக்கியர் எனவும், மேலைச்சளுக்கியர் எனவும் இருதிறத்தாராகச் சரித்திரநூலோர் வழங்குவர்.†

      * மைசூர் கெஸட்டியர், 335-ம் பக்கத்தும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது; ஆனால் அடியில்வருமாறு சிறிது வேறுபடுகின்றது:-- சளன் என்ற அரசன், சசகபுரத்தை அடுத்த காட்டிலுள்ளதும் தன் குலதேவதையுமான வஸந்திகா தேவியை வணங்கச் சென்றிருந்தபோது, அவன் அத்தேவியைத் தொழமுடியா வண்ணம் காட்டினின்று பாய்ந்துவந்த புலியொன்றால் தடுக்கப்பட்டான். அப்போது, அக்கோயிற் குருவானவர் பக்கத்திலிருந்த இரும்புத்தடியொன்றை எடுத்து அவ்வரசன்கையிற் கொடுத்துக் (கன்னட பாஷையில்) 'ஹொய் சள'! எனக்கூற, அதன்படி அவனும் அத்தடியால் ஓங்கியடித்து அப்புலியை இருந்த விடத்தே சாகும்படி வீழ்த்தினான். இவ்வாறு, குருசொற்படி புலியை வீழ்த்திய அரியசெயல்பற்றி, அவ்வரசனும், அவன் வழியினரும். 'ஹொய்சளர்' என்னும் பெயர் பெற்றனர்; (அன்றியும்) இதுபற்றியே, இவ்வமிசத்தார் புலியைத் தம் கொடியாகவும் கொண்டனர்--என்பதாம்.
      † இச்சளுக்கியவமிசத்தின் வரலாறு மைசூர்-கெஸட்டியர் முதலிய சரித நூல்களில் விளங்கக்காணலாம்.

    ----------
    page 11

    இவருள், தென்னாடாடண்ட சளுக்கியரைப் பண்டைத் தமிழ் நிகண்டுகள் வேள் புலவரசர் என்று கூறுகின்றன: இதனை-- " வேள்புல அரசர் சளுக்குவேந்தர்" * எனத் திவாகரத்தும், பிங்கலத்தும் வரும் சூத்திரத்தால் அறியலாம். இவற்றுள், திவாகரத்தில், அச்சளுக்கரது கொடி வராகமென்பதைக் "கேழல்வேள்புல வரசர்கொடியே"‡ என்றசூத்திரங்கூறுகிறது. இத்திவாகரம் பாடுவித்த அம்பர்கிழான்-சேந்தனார், கடைச் சங்கத்தவரான ஔவையாராற் பாடப்பெற்றவர் என்பது, அந்நிகண்டின் 'தொகுதியிறுதிக்கட்டுரை'களானே நன்குவிளங்குதலின், அத் திவாகரமும் அச் சங்ககாலத்தது என்பது சொல்லாதே அமையும். கி,பி. 6-ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட சளுக்கிய-சாஸனங்கள் இப்போது காணப்பட்டிலவேனும், அச்சளுக்கர் பழமைபெற்றவர் என்பது, திவாகர முதலியவை அவ்வரசர் பெயரை எடுத்தோதுதலானே தெளிவாகின்றது. இனி, இச்சளுக்கு வேந்தரை வேள்புலவரசர் என அந்நிகண்டுடையார் கூறுவதில், வேள்புலமென்பது, அவ்வரசரது புராதன ராஜ்யமாகிய கூர்ச்சரமுதலிய மஹாராஷ்டிரபூமியே என்பதற்கு, வேண்டிய ஆதாரங்கள் இப்போது காணப்படுகின்றன. பண்டைத் தமிழ்மக்கள் பம்பாய் மாகாணத்தையே வேள்புலமெனக் கொண்டனர் என்ற என் கொள்கை, அம்மாகாணத்துள்ள நகரங்கள் பல வேள் என்ற சொல்லடியாக வழங்கிவருதலால் நிலை நாட்டப்படுகின்றது; உதாரணமாக:-- நைஸாம் ராஜ்யத்தைச்சார்ந்து அதன்வட மேற்கெல்லையில் உள்ளதும், பம்பாயின் வடபாகத்தை ஒட்டியதுமான எல்லூரா (Ellora) என்னும் பிரபலமான குறிஞ்சிநிலத்து ஊரொன்று உண்டு. இவ்வெல்லூரா என்பது, எலாபுரம் என்ற வடசொல்லின் திரிபென்பர் டாக்டர்-பண்டார்கர். (Dr.Bandarkar) இதனை ஆக்ஷேபித்து டாக்டர்--பிளீட்துரை (Dr. Fleet) அவ்வூர், வேளூர், வேளூரகம் எனப் பழைய சாஸனங்களிற் கூறப்படுதலைத்

      * மக்கட் பெயர்த்தொகுதி பார்க்க.
      ‡ பல்பொருட் கூட்டத் தொருபெயர்த்தொகுதி--வேள்புல அரசர் கொடிவகைப்பெயர் பார்க்க: இக்காலத்து அங்கங்கே அகப்படும் சிலா, தாமிர சாஸனங்களிலும் "வேணாட்டரசர், வேள்குலச்சளுக்கி" எனவும் "வராகவெல்கொடி, சூகரக்கொடி" எனவும், சளுக்கியரது நாடு, குலம், கொடி முதலியவை கூறப்படுகின்றன.( ஸ்ரீ.து.அ. கோபிநாதராயரவர்களது சோழவமிச சரித்திரம், அநுபந்தம் II பார்க்க)

    ---------------
    page 12

    தக்க காரணங்காட்டி நிரூபித்திருக்கின்றார்.* இவ்வாறே, பம்பாய் மாகாணத்து ஷோலாபூர் ( Sholapur) ஜில்லாவில் ஒரு நகரம் வேளாபுரம் ( Velapur என்ற பெயர்வாய்ந்துளது இன்னும், வேளிரின் ஆதியிருப்பாகிய கத்யவார் ( Kathiawar) கட்சு (Cutch) பிரதேசங்களில் பேலா (Bela) என்ற பெயர்வாய்ந்த ஊர்கள் பலவுள. அங்ஙனமே, அஹமெட்நகர்த் தாலூகாவில் வேளாபுரம் எனவும், பூனா ஜில்லாவில் வேளகம் (Belha) எனவும் நகரங்கள் காணலாம். இனி, அம்மாகாணத்தின் தென்பக்கத்துள்ள முக்கியமானதொரு ஜில்லாவும் நகரமும் பேல்காம் (Belgaum) என வழங்குதலை அறியாதார் அரியர். பேல்காம் என்பது வேள்கிராமம் என அப் பக்கத்துச் சாஸனங்களிற் காணப்படுவதெனவும், சளுக்கியரின் சகோதர வகுப்பினராகிய கதம்பர்க்குத் தலைநகராக அஃது ஓர்காலத்து விளங்கியதெனவும் சரித்திர நூலோர் கூறுவர்.† அப் பிரதேசத்து லக்ஷ்மேச்வரத்தை அடுத்துள்ளதோர் ஊர் வேள்பட்டி (Belhutti)‡ என வழங்குதலும் அறியத்தக்கது. இங்ஙனமே பம்பாய்மாகாணத்தை ஊன்றி நோக்குமிடத்து, ஆங்குள்ள ஊர்கள் பல, வேளென்ற சொல்லடியாக வழங்குதலை நன்றாக நாம் காணலாம். ஆகவே, பம்பாய் மாகாணமாகிய வேள்புலத்தினின்று வந்து தென்னாடாண்டமை பற்றித் தமிழ்நாட்டார் சளுக்கியரை 'வேள்புலவரசர்' என வழங்கினர் என்பது பெறப்படுவதன்றோ. எனவே, அவ்வேள்புலத்தினின்றே முற்காலத்துத் தமிழ்நாட்டுக் குடியேறிய வேளிராகிய யாதவரும், பிற்காலத்து அங்ஙனங் குடிபுகுந்த ஹொய்சள-யாதவரும் முறையே வேளிர் எனவும், பேலாலர் எனவும் பெயர் பெற்றதன் காரணமும் அதுவே யாதல்வேண்டும் என்பது தானே பெறப்படத்தக்கது.

    மேற்கூறியவாறு சளுக்கியரை வேள்புலவரசர் என நிகண்டுகள் படிப்பதோடு, வேள் என்ற சொல்லே அச்சளுக்கர்க்கு உரிய

      † * Bombay Gazetteer, Vol. I, Part. II, pp. 391
      வேள் கிராமமாகிய இவ்வூர், வேணுக்ராமம் என வடமொழியில் வழங்கப் பட்டுள்ளது; இந்நகரத்திலிருந்-தாண்ட இக்கதம்பரும் சளுக்கரும் ஆதியில் ஒருகுலத்தவரென்பதை, இந்நூலில் நன்னன்-வேண்மான் என்ற தலைப்பின் கீழ்க்காண்க.
      ‡ வகரம் பகரமாகவும், பகரம் ஹகரமாகவும் பாஷாந்தரங்களில் வழங்கும்.

    --------
    page 13

    தாகவும் பிங்கலந்தை கூறுகிறது: இதனைத்--" தாரகாரியுஞ் சளுக்கியர் வேந்தனும்-வேனிலாளனும் வேளெனலாகும்' * என்பதனால் அறிக. இங்ஙனம், வேளிர் எனச் சளுக்கரசர் கூறப்படுதற்கேற்ப, மைசூர்ப் பேலால-யாதவரைப் போலவே இவ்வரசரும் யாதவருள் ஒரு வகையினரே என்பதற்குப் பலசான்றுகள் உள்ளன. சளுக்கருடைய புராதன நாடு கங்காதீரமாகவும், வமிசம் சந்திரகுலமாகவும் -- யாதவர்க்குரிய குடி குலங்களே இவர்க்குங் கூறப்படுதல் காண்க. இனி கிறிஸ்தவாப்தந் தொடங்குதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே, வடநாட்டிற் பிராபல்யம் பெற்று விளங்கிய ஆந்திர சக்கரவர்த்திகளது ஆட்சி,† பிற்காலத்தே நிலைகுலைந்தபோது, அவரில் ஏழு பிரிவான அரசர்கள் தக்ஷிணத்தில் ராஜ்யங்கள்ஸ்தாபித்து ஆண்டு வந்தனரென்றும், சளுக்கரும், விக்ரமார்க்கன் வம்சத்து மாளவ அரசரும், காலசூரிகளும், காகதீய-கணபதிகளும், கொண்டவீடு-கஜபதிகளும்,
    விஜயநகர் - யாதவ நரபதிகளும் அவ்வகையினரென்றும் ‡ சாஸனங்களால்

      * பல்பொருட் பெயர்த்தொகுதி.
      † மகதநாட்டு ஆந்திர-சக்கரவர்த்திகள் பலர், வடக்கே இமாசலமும், தெற்கே
      தெலுங்காணமும், மேற்கே மாளவமும், கிழக்கே வங்கமும் எல்லையாகக் கொண்ட ஏகாதிபத்யத்தை( Empire) நாட்டிப் பன்னூற்றாண்டுகள்வரை பெருந்திறமையுடன் ஆட்சிபுரிந்தவர்கள்; இன்னோர், ஆந்திரர் (நேரான அரசர்), ஆந்திர-ஜாதிகர் (அவர் பந்துக்கள்), ஆந்திர-பிருத்யர் (அவர் வேலைக்காரர்) என மூன்று பிரிவாயிருந்தனர். இவர்கள் 2000- ஆண்டுகட்கு முன்பே பிரபலம் பெற்றவர் என்பதற்கு வேண்டிய பிரமாணங்கள் உள்ளன. இந்த சக்கரவர்த்திகளை, அக்காலத்துக் கிரேக்க-பூமிசாஸ்திரிகள் அண்டரிய (Andoria) என வழங்கி வந்தனர். இத்தேசத்துக்கு வந்துசென்ற பழைய யவனாசிரியராகிய பிளைநி ( Pliny) என்பவர் எழுதிய குறிப்பால், இன்னோர் பரதகண்டத்தே மஹாவீரரா- யிருந்தவரெனவும், இவர்கள் வசம் நூற்றுக்கணக்கான பேரரண் வாய்ந்த நகரங்களும், ஆயிரக்கணக்கான யானைகளும், லக்ஷக்கணக்கான சைந்யங்களும் இருந்தன எனவும் தெரிகின்றன. இம்மஹாவமிசத்தின் வரலாறு, பாகவத- விஷ்ணு மத்ஸ்ய-புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன. இவ்வரசரிற் கடைசியானவன், கி.பி. 3-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த புலோமன் என்பவன். சிலப்பதிகாரத்தில், செங்குட்டுவனது வடநாட்டு யாத்திரையில் அவனுக்கு உதவி புரிந்த "நூற்றுவர் கன்னர்" என்பவர் இவ்வாந்திர குலத்தரசரே என்பர்; மற்றும் இன்னோர் வரலாறுகள் சரித்திரநூல்கள் நோக்கி அறியத்தக்கன.
      ‡ James Priseps Essays on Indian Antiquities. Vol II. p.281

    ----------
    page 14

    நன்கு தெளியப் பட்டவை என்பர் *. இவர்களுள், காகதீயரும் காலசூரிகளும் விஜயநகர-நரபதிகளும் யாதவகுலத்தைச் சார்ந்தவரென்பது பிரசித்தமாம்; ஆகவே, அவரினத்தவராய்த் தக்ஷிணத்திற் குடியேறியாண்ட சளுக்கர்களும் அவ் யாதவ-வமிசத்தவரேயாதல் சொல்லாமலே அமைவதாம். இதனாலும், யாதவக்கிளைகளுள் சளுக்கருமடங்குதல் அறிந்துகொள்க.

    இனி, இச்சளுக்கிய-யாதவர், பண்டைத் தமிழ்வேளிருடன் ஒற்றுமைபெற்ற குலத்தவரென்பதற்குச் சிறந்த சான்றொன்று, பம்பாய்-கெஸட்டியரில் காணப்படுகின்றது; † அஃதாவது:-- வட தேசத்தே, ஹாரீத பஞ்சசிகர் என்ற முனிவர் யாகம் செய்துகொண்டிருந்தபோது, அவரது தீர்த்தபாத்திரத்தினின்று ஓர்அரசன் உண்டானான்; 'சுளுகம்' என்னும் வடமொழிப் பெயர்பெற்ற பாத்திரத்தினின்று உதித்தமைபற்றி அவன் வழியினர் சுளுகர் எனப் பெயர் பெற்றனர் என்பதாம்; ‡ வடமொழிமுறைப்படி 'சௌளுக்யர்' எனத்

      * விக்கிரமார்க்கன் வழியினர், மாளவ நாட்டுத் தாராநகரத்திலிருந்து ஆண்டவர்கள்; போஜன் என்ற பிரபல அரசன் இவ்வமிசத்தவனே. காலசூரிகள் யாதவரில் ஹேஹய வமிசத்தவராவர்; இவர்கள் கல்யாணபுரியிலிருந்து ஆண்டவர்கள்; சாளுக்யரின் சந்ததியாராக இன்னோரைக் கூறுவர். காகதீய-கணபதிகள், ஓரங்கல் நாட்டை-யாண்டவர்கள்; பிரதாபருத்ரீயம் எந்ற அலங்கார நூலாற் புனையப்பெற்ற பிரதாபருத்திரன் இவ்வழியினனே; "உருத்திராநின்னுடைய ஒரங்கல்நாட்டில்" என்னுங் கம்பர்வாக்குங் காணத்தக்கது. கஜபதிகள், கிருஷ்ணா நதிக்குத்தெற்கே, குண்டூருக்கு அருகிலுள்ள கொண்டவீட்டிலிருந்து ஒரிசா நாடாண்டவர்கள். விஜயநகரம்-யாதவநரபதிகள்-இவர்கள் தென்னாடு முழுமையும் பலதலைமுறை பெரும்புகழுடனும் திறமையுடனும் ஆட்சிபுரிந்த பிற்காலத்துச் சக்கரவர்த்திகள்; இவர்கள் ராஜதானி விஜயநகரமாகும். இவர்கள் வரலாறு, ஸுவெல்துரை எழுதிய " Forgotten Empire" முதலிய நூல்களால் அறியத்தக்கது.
      † Bombay Gazetteer, Vol. I, partII. page. 339
      ‡ இச்செய்திகளே, " இண்டியன் ஆண்டிகுரி "--தொகுதி7, பக் 74 லிலும் கூறப்படுகின்றன; ஆனால் பிலஹணகவியின் விக்ரமாங்க-காவியத்தே- பிரமதேவர் ஒருகாலத்தில் சந்தியாகர்மஞ் செய்துகொண்டிருந்தபோது, இந்திரன் அவரிடம் வந்து, பூவுலகில் நிரீசுரக்கொள்கை தலையெடுத்துவருதலால், அக்கேட்டை நீக்கத்தக்க மஹாவீரனொருவனை சிருஷடித்துத் தரவேண்டுமென்று பிரார்த்திக்க, அதற்கிரங்கிப் பிரமதேவரும் தம் சுளுகத்தை நோக்க, அப்பாத்ரத்தினின்று மூவுலகும் புரக்கவல்ல ஒரு மஹாவீரன் வெளிப்பட்டான் என்றும், அவன் வழியினரே சௌளுக்யர் என்றும், அக்குலத்தலைவராக ஹாரீதரென்பவரும், அவர்க்குப் பின் மானவ்யர் என்பவரும் உண்டானார்கள் என்றும், பிற சில வரலாறுகளும் கூறப்பட்டுள்ளன. ( Ind.Ant.Vol.V.p.317)

    ---------------
    page 15

    தக்க இவ் வரசர், பிற்காலத்தில் சாளுக்கியர், சளுக்கியர், சளுக்கர், சளுக்கி எனப் பலபடியாகத் திரித்து வழங்கப்பட்டனர்--என உணர்க. பிங்கலந்தையில் வேளிர் என வழங்கப்பட்ட சளுக்கியரது வரலாற்றைக் குறிக்கும் இக்கதை, புறநானூற்றில் 'வடபால்முனிவன் தடவினுட்டோன்றித். . . . . துவரையாண்டவர்' எனப்பட்ட வேளிர் வரலாற்றுடன் பெரிதும் ஒற்றுமை பெற்று விளங்குதல் அறிந்து மகிழத் தக்கதன்றோ.* இச்செய்தி கபிலர் வாக்கிற் பயின்றுள்ளமை முன்னரே குறிக்கப்படடது. இதனுள்வரும் வடபால்முனிவன் தடவு' என்பதற்குப் புறநானூற்றுரைகாரர், 'வடநாட்டு முனிவரது ஓமகுண்டம்' எனப் பொருள் கூறியிருப்பினும், சளுக்க-வேளிருடைய முன்குறித்த வரலாற்றுக்கு இயைய 'யாகபாத்திரம்' என்பதே பொருத்தமாகும். [தடவு-தடா= பாத்திரம்] இங்ஙனம், முனிவரொருவரது தீர்த்தபாத்திரத்திற் றோன்றிய வரலாறும், வேள் என்ற பெயர் வழக்கும் தமிழ்-வேளிர்க்கும் சளுக்க-வேளிர்க்கும் உரியனவாக வழங்குதலால், அவ்விருவரும் ஒருகுலத்தவராதல் விளக்கமாம். இவ் விருவகையார்க்கும் வழங்கும் வேளிர் என்ற பெயர், யாக சமயத்திற்றோன்றிய இவர்களது வரலாற்றைப்பற்றியே வழங்கி யிருத்தல் வேண்டுமென்றுஞ் சொல்லலாம்: என்னை? வேளிரென்பது,
    யாகஞ்செய்தல் என்ற பொருளுடைய 'வேள்' என்னும் பகுதி யடியாகப் பிறந்த பெயராதலால் என்க. †

      * முன் குறித்தபடி, ஆந்திரமரபினர் என அறியப்பட்ட இவ்வேளிர், முனிவரது யாகசமயத்திற் றோன்றிய அரசனொருவன் வமிசத்தவரென்னும் வரலாற்றைப் புராணேதிகாசங்களினின்று உறுதிப்படுத்தல் இப்போது அரிதாம்; ஆயினும், ஸ்ரீமத்-பாகவதம், நவமஸ்கந்தம், 23-ம் அத்யாயத்தே, -யயாதியின் வழியிற் பல தலைமுறைகட்குப் பின் வந்த ஸுதபஸ் என்பவனுக்கு பலி என்பவன் உண்டானான் என்றும், இப்பலியின் க்ஷேத்திரத்தில் தீர்க்கதமஸ் என்ற முனிவர்க்கு அங்கன், வங்கன், கலிங்கன், சுகன், பவுண்டிரன், ஆந்திரன் என்ற அறுவர் குமாரர் ஜனித்துத் தத்தம் பெயர்களால் முறையே ஆறு ராஜ்யங்களைத் தாபித்தார்களென்றும் கூறப்பட்டுள்ளன. இதனால், ஆந்திரர், பலியென்பானாற் செய்யப்பட்ட யாகத்தில் முனிவரால் தோன்றியவர் என்ற வரலாறு, புராணங்களாலும் ஒருவகையால் ஆதரிக்கப்-படுவதென்றே சொல்லலாம். பலி என்ற அரசன் பெயர், யாகஞ்செய்தவனென்ற பொருள் கொள்ளுதலும் நோக்க தக்கது. [பலி--யாகம்; அதனைச் செய்தவன் பலியாவன்.]
      † தெலுங்கு நாட்டாராகிய ஆந்திர-யாதவகுலத்தார் சிலர்க்கு பலிஜர் என்ற குலப்பெயர் இன்றும் வழங்கிவருதல் ஆராயத்தக்கது, [பலி-ஜர்=வேள்வியில் உண்டானவர்.] இதனால், யாகத்திற்றோன்றிய வேளிர் ஆண்ட தேசமாதலால், அது வேணாடு, வேள்புலம் என வழங்கப்பட்டதென்றுங் கொள்ளப்படும்.

    ------------
    page 16

    இனி, சளுக்கரும் வேளிரும் ஒரே குலத்தவர் என்பதை மற்றொரு தக்க எதுவும் வலியுறுத்துகின்றது. முற்காலத்தே மகத நாடாண்ட ஆந்திர சக்கரவர்த்திகளின் வழியினராய்த் தக்ஷிணத்துக்கு வந்த யாதவக்கிளைகளில் சளுக்கரும் ஒருவரென்பது முன் குறிக்கப்பட்டதன்றோ. ஆந்திரராகிய இச் சளுக்கரைப் பழைய தமிழ் நிகண்டுகள் வேள் குலத்தவர் என்று கூறுதற்கேற்ப, இவ்வேளிர் மரபினனும் கடையேழுவள்ளல்களில் ஒருவனுமாகிய வேள்-ஆய் என்பவனை அண்டிரன் என்ற பெயராற் சங்கச்செய்யுள்கள் குறிக்கின்றன.* இவ் அண்டிரன் என்ற சொல்லை நோக்குமிடத்து, அதற்கு வேறு சிறந்த தமிழ்ப்பொருள் காணப்படாமையின், அப்பதம்-- வேள்-ஆயின் குலப்பெயராகிய ஆந்திர சப்தத்தின் திரிபாக வழங்கியதென்றே சொல்லலாம். ஆந்திரன், மேலோன் என்னும் பொருளுடையது என்பர். இவ் ஆந்திர பதம் பழைய கிரேக்காசிரியரால் அண்டரீ (Andarae) என மருவி வழங்கப்பட்டிருத்தலுங் காண்க. எனவே, ஆந்திர ஜாதியினராகிய சளுக்கர் பண்டைத் தமிழ் வேளிரின் வேறன்றி ஒரு குலத்தவரென்ற கொள்கையே பல்லாற்றானும் தெளிவாகின்றது. இத்துணையும் கூறிப்போந்தவைகளால், வேளிர் எனப் பழைய தமிழ்நூல்களிற் குறித்த கூட்டத்தார், யாதவ-வமிசத்தவராய்த் துவாரகையினின்று வந்து தென்னாடாண்டவர்-- என்றெழுதிய ஆசிரியர்- நச்சினார்க்கினியர் செய்தி, பல்வேறு சான்றுகளாலும் உறுதிபெற்று விளங்குதல் கண்டுகொள்க.

    இனி, செந்தமிழ் நிலத்தைச் சூழ்ந்துள்ளனவாகச் சொல்லப்படும் பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளில் 'வேணாடு' என்பது மொன்றாம். இஃது யாதவரது பழந்தேயமாகிய 'வேள்புலம்' என்று கருதப்படுகிறது. † வேள்புலம் என்பது, இப்போது 'கொங்கணம்'

      * இவ்வள்ளலின் வரலாற்றை, இந்நூலுள் "வேள்- ஆய்" என்னுந்தலைப் பின்கீழ்வரும் விஷயத்துக் கண்டுகொள்க.
      † ஸ்ரீமத்: வி.கனகசபைப்பிள்ளையவர்கள், வேணாடு என்பது, பாண்டி நாட்டின் தென்மேற்கில் பேரியாற்றுக்கும் குமரிமுனைக்கும் இடையில் உள்ளதென்றும், மூங்கிற்காடு மிக்குள்ளமையின் வேணு மூங்கில் நாடு எனப் பெயர் பெற்று, அதுவே வேணாடு எனத் தமிழில் திரிந்ததென்றுங் கூறினர். பிள்ளையவர்கள் கூற்றின்படி, திருவாங்கூர் ராஜ்யத்தில் வேணாடு என்பதொன்று உண்டாயினும், அதுவேளிரின் ஆதிபூமியாகாமையின், மகாராஷ்டிரமாகியவேள் புலமே கொடுந்தமிழ்நிலமாகக் கொள்ளத்தக்கது. இனி, சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் "செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிருநிலத்தும்" (சொல்-400) என்னுந் தொல்காப்பிய - சூத்திரவுரையில், "பன்னிரு நிலமாவன:- பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டி, குட்டம், குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை - எனச் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பா லிறுதியாக எண்ணிக்கொள்க" என்பர். இவர்களெழுத்தின்படி, வேணாடு என்பதற்குப் பிரதியாக ஒளிநாடு காணப்படுவதுடன், அவ்வெளிநாடு செந்தமிழ்நாட்டுக்குக் கீழ்பால் உள்ளதாகவும் முடிகின்றது. "செந்தமிழ்நிலமாவது-வையையாற்றின்வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்குமாம்" என்பது அவர் கொள்கையாம். இனி, நச்சினார்க்கினியர், "பல் லொளியர் பணிபொடுங்க" என்ற பட்டின்ப்பாலையடியின் உரையில், "ஒளியராவார், மற்றை மண்டலத் திற்கு அரசராதற்குரிய வேளாளர்" என எழுதல் ஆராயத்தக்கது.

    --------
    page 17

    என்று அழைக்கப்படும் நாட்டுக்கும் வடக்கிலுள்ள மஹாராஷ்டிர தேசமே என முன்னர்க் குறிப்பிட்டோம். கொங்கணமென்பது, முன்பு தமிழ்நாடாகவிருந்தது என்பது, புறநானூற்றில் (154) கொண்கானங்கிழான் என்னும் வேளைப்பற்றிப் பண்டைத் தமிழ்ப் புலவர் பாடியுள்ள பாடல்களால் இனிது விளங்குகிறது. இனி, இக் கொண்கானத்தை அடுத்திருந்த வேணாட்டினுந் திரிசொல்லாகிய தமிழ் முன்பு வழங்கிவந்தமையால், அது கொடுந்தமிழ் நிலங்களுள் ஒன்றாக எண்ணப்பட்டது போலும். பஞ்சதிராவிட நாடுகளில் * மகாராஷ்டிரமும் கூர்ச்சரமும் அடங்குதல் இக் கொள்கையையே வற்புறுத்துவதுங் காண்க. இனி, வேளிரது நாடு என்னும் பொருளுடைய வேணாடு என்ற தொடர்சொல்லை (வேண் -- நாடு எனப் பிரித்து) "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்" என்புழி, வேண் என்பதே பதமாக வழங்கினர் பிற்காலத்தார்.†


      * பஞ்சதிராவிட நாடுகளாவன:- தமிழ், ஆந்திரம், கருநடம், மஹாராஷ்டிரம், கூர்ச்சரம் என்பன. இதனால் ஆதிகாலத்தே, இவ்வைந்து மொழிகட்கும் அதிக வேற்றுமை இருந்ததில்லைப்போலும்.
      † தமிழ் மக்கள், பம்பாய்மாகாணத்தை வேள்புலம் வேணாடு என அழைக்கப் பழைய ஆரியமக்கள் தண்டகாரணியதேசம் என அதனை வழங்கிவந்தனர். இச்செய்தி, மஹாராஷ்டிரப் பிராமணர் வைதிக கர்மத்தொடக்கத்துச் செய்து கொள்ளும் சங்கற்பக்கட்டுரையிலே, 'மஹாராஷ்டிரதேசே' என்னாது 'தண்டகாரண்யதேசே' எனக்கூறிவருதலால் தெரியலாம். (Dr: Bandarkar's History of Dekkan. p. 136) பதிற்றுப்பத்தில் "தண்டகாரணியத்துக் கோட்பட்டவருடைய" என்பதனுரையில் (பக் - 98) "தண்டாரணியம் - ஆரியநாட்டிலுள்ளதோர் நாடு" என எழுதப்படுதலால், தண்டகாரண்ய தேசமென்ற பழைய வழக்குத் தமிழ் நூல்களிலும் பயின்றிருத்தல் காணலாம்.

    ------------
    page 18

    இனி, வேளிரின் ஆதி முதல்வர் எக்காலத்தே தென்னாட்டிற் குடியேறியவர் என்பது ஆராயத்தக்கது.ஆசிரியர்- நச்சினார்க்கினியர் எழுதிய செய்திப்படி, இன்னோர் கண்ணபிரானுக்குப் பிற்காலத்தில் வெளியேறியவராகத் தெரிதலால், பொதுவாக, பாரத காலத்திற்குப்பின் இவர்கள் இங்கு வந்தவராக அறியப்படினும், இன்ன
    காலத்திற் றென்னாடு புகுந்தவராதல் வேண்டும் என்று சிறப்பாக அறிந்தகொள்வதற்கு ஒரு குறிப்பும் முன்னூலிற் காணப்படுகின்றது: அஃதாவது --மேலே குறித்தபடி, இருங்கோவேள் என்பவனை நோக்கிக் கபிலர்-- "நீயே.... துவரையாண்டு-நாற்பத்தொன்பது வழிமுறை வந்த-வேளிருள்வேளே" எனக் கூறுதலேயாம்.* இவ்வாறு சங்கப் புலவர் பாடுதலால்,அவர்காலத்தில் வேளிர் வம்சத்தைப்பற்றிப் பிரபலமாக வழங்கிவந்ததொரு செய்தி விளங்குவதன்றோ? இனி, இந்நாற்பத் தொன்பது என்னும் எண்கொண்ட தலைமுறைகளின் ஆட்சிக் காலத்தைக்கொண்டு, வேளிரின் ஆதிமுதல்வர் இன்ன காலத்து இங்கு வந்தவராதல் வேண்டுமென ஒருவாறு நாம் ஊகிக்கலாம். முற்காலத்தே,ஆரியாவர்த்தத்தை ஆண்ட பலிபுச் சகவழி அரசர் முப்பத்துமூவர் 486-வருஷமும்,மௌரிய-அரசர் பதின்மர் 137-வருஷமும் ஆட்சி புரிந்ததாக †விஷ்ணு-பாகவத புராணங்களிற் கூறப்பட்டுள்ளது.இவற்றை நோக்கின், முதலிற் குறித்த பலிபுச்சகவழியினர் தலைமுறையொன்றுக்குச் 'சராசரி' 15- வருஷமும், அடுத்த மௌரியர் 14-வருஷமும் ஆட்சி செய்தவராக ஒரு கணக்கு ஏற்படும். இவ்வாறே, பழைமையாக வரும் அந்நிய அரசுகளின் தலைமுறையளவை ஆராயினும், நிகழ்காலத்தில் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கும் ஜப்பானிய-ஏகாதிபத்யத்தை (Japanese Empire)

      * இற்றைக்கு 900-வருஷங்கட்கு முந்திய சாளுக்கிய சாஸனங்களிலும், உதயணன் முதலாக 75-தலைமுறை இவர் முன்னோர் ஆண்டு வந்ததாகக் கூறப் பட்டுள்ளது; இச்சாஸனங்களிற் கண்ட புராண வரலாற்றில் இவர்வமிசம், விஷ்ணுவினின்று தொடங்கினும்,பாண்டவரது மரபாகக் கூறப்படுதலால், முற்காலத்தேயே இவர் ஆதிவரலாறு மாறுபாடடைந்ததாகத் தெரிகிறது. (In.Ant.
      1890. p425)
      ‡விஷ்னு புராணம்:4-ம் அம்சம், 24-ம் அத்தியாயம். பாகவதம்,12-ம் ஸ்கந்தம், முதல் அத்யாயம்.

    ----------
    page 19

    இப்போது ஆட்சி புரியும் மிக்கோடா-சக்கரவர்த்தி, தமது பழமை பெற்றதும் இடையூறு படாததுமாகிய பரம்பரையில் 123-ஆவது தலைமுறையினராகச் சொல்லப்படுகின்றார். அவ்வேகாதிபத்யத்தை நாட்டிய ஆதி சக்கரவர்த்தியான ஜிம்மு_திந்நோ இற்றைக்கைக்கு 2500-ஆண்டுகட்கு முன்பு விளங்கியவர் என்பது ஜப்பானிய- சரித்திரத்தால் தெரியவருகின்றது.இனி, இவ்2500-வருஷங்களையும் 123-அரசர்க்கும் பகிர்ந்தால்,ஜப்பானிய அர‌சர் ஒவ்வொருவர்க்கும் 21-ஆண்டே தலைமுறையளவாதல் பெறப்படும். இம்முறையே, ஆயுள்விர்த்தி பெற்ற ஐரோப்பிய நாடுகளில்,ரஷ்ய சக்கரவர்த்திகட்கு 19-ம்,இங்கிலாந்து அரசர்க்கும், ஜர்மானிய சக்கரவர்த்திகட் கும் 23-ம்,பிராஞ்சு அரசர்க்கு 24-ம் 'சராசரி"யாட்சிக் காலமாகச் சொல்லப்படுகின்றன.* இவற்றுள்ளே அதிக ஏற்றக்குறைவின்றி ஜப்பானியத் தலைமுறைக்கு அமைந்த 21-ஆண்டளவை நாம் மேற்குறித்த 49-தலைமுறை வேளிர்க்குங் கொண்டு கணிப்போமாயின், கபிலர் பாடிய இருங்கோவேளுக்கு 1000-ஆண்டுகட்கு முற்பட்டதே அவன்வழியின் ஆதிமுன்னோர் தென்னாடு புகுந்த காலமென்பது பெறப்படும்; படவே, கடைச்சங்கத்தவராகிய கபிலர் பாடிய அவ்வேளின் காலம் 1800-வருஷங்கட்கு முற்பட்டதென்பது இப்போதுள்ள கொள்கையாதலின், வேளிருடைய ஆதி முன்னோர் தமிழ் நாடு புகுந்தது கி.மு.10-ம் நாற்றாண்டுக்கும் முந்தியது† என்று நாம் ஒருவாறு கூறத் தடையில்லை என உணர்க.

    இனி,மேற்கூறிய வேள்புலமக்களும் அவரது தலைவரும், முற் காலத்தே தென்னாட்டிற் குடியேறி வாழ்ந்த வரலாற்றை அடியில் வருமாறு சுருக்கிக்கூறலாம். கண்னபிராணைத் தலைமயாகக் கொண்ட எண்ணிறந்த யாதவர்கள் பகைவர்க்கஞ்சித் தம் ஆதிபூமியாகிய
      -
      * The Chronology oa Ancient India.p.65
      † இக் காலவரையறைR.C.தத்தர் ,V..கோபாலையர் முதலியோர் பல ஏதுக்களால் கி.மு.13 அல்லது 12-ஆம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறியிருக்கும் மஹாபாரதக் காலத்துக்குச் சிறிது பிற்பட்டு நெருங்கியுள்ளது;இவ்வாறு நெருங்குதல் கண்ணபிரானது வியோகத்தின் பின் வந்தவர் வேள்புலத் தலைவர் என்ற வரலாற்றுடன் ஒத்திருத்தல் சிந்திக்கத்தக்கது.இங்ஙனமன்றி,நம் இதிகாசங்கள் கூறுமாறு,பாரதகாலம் 5000-ஆண்டுகட்கு முன்பென்பதே முடிவாயின், அக்காலத்துக்கு 21-நூற்றாண்டுக்குப்பின் வேளிர் தென்னாடு புகுந்தவராதல் வேண்டும்.

    ----------
    page 20

    கங்கை யமுனைக் கரைகளை நீங்கி மேல்கடலையொட்டிய வேள்புலத்திற் குடியேறிப் பெருகியதுபோல, அவர் வழிவந்த பதினெண்குடி வேளிரும் அப்புலத்திற்கும் தெற்கணிருந்த பெருங்காடுகளைத் *திருத்திக்கொண்டே பரவலாயினர். இன்னோர் நாகரிகம்வாய்ந்த ஜாதியராதலின், அரசுத்தொழில் படைத்திற முதலியவற்றினும், தாம்
    முயன்று நின்ற குடியேற்றத்துக்கு இன்றியமையாத உழுதொழில்,† கொற்றொழில்,‡ மண்சுடுதல், நூற்றல்,$ கால்நடைகளை வளர்த்தல் முதலிய பலவகை விருத்திகளினுங் கைதேர்ந்திருந்தனர்.

      * கொண்கானம், துளுநாடு முதலியன. கொண்கானம் முற்காலத்து வேளிரது ஆட்சிக்குட்பட்டிருந்ததென்பது புறநநூற்றால் (454) அறியப்பட்டது; இனித் துளுநாட்டிற் புகுந்து பரவிய வேளிர் துளுவ - வேளாளர் எனப்படுவர். இவ்வமிசத்தவராக இந் நாட்டிலுள்ளோர், தம்மைச் சந்திரகுப்தன் வழிவந்த ஆந்திரகுலத்தவரெனக் கூறிக்கொள்ளுதல் அறியத்தக்கது. (அபிதானகோசம் - துலுவமிசம் பார்க்க.)
      † இவர் செய்தி பின்பு விளக்கப்பட்டுள்ளது.
      ‡ கொல்லரை, ஆந்திரமக்கள் 'கொல்ல - வேலம' என்பர்; வேலம, வேள்மார் என்பதன திரிபாம். இதனால், வேள்குடி பதினெட்டில் இவரும் அடங்கினவர் என்பது தெரியலாம்.
      மட்கலம் வனைவோர்க்கு வேட்கோ, *இருங்கோவேள் என்ற பெயர்கள்
      நூல்களில் வழங்குதலால், வேளிர் குலத்தில் இவரும் அடங்கியவராதல் வேண்டும். இக்குலத்தோர், முற்காலத்தில் ஆரியமொழியில் வல்லவராயிருந்தவரென்பது-- நக்கீரருடன் 'ஆரியம் நன்று தமிழ்தீது' என வாதிட்ட வேட்கோக்குயக் கோடன் செய்தியால் தெரியலாம். (தொல். பொருளதி. பக். 745) 'நன்மதி, வேட்கோச்சிறார் ' எனப் புறநானூற்றில் (32) வருதலின், இக்குலத்துச் சிறுவர் நுண்ணறிவுடையராக முந்நாளில் மதிக்கப்பட்டிருந்தமை விளங்கும். இக்குயவர், ஆரியாநுட்டானங்கள் தமக்கென்று உடையர்.
      $ பழைய நிகண்டுகளில் 'சாயவேளர்கொல்லி' என இராகப்பகுப்பு ஒன்று காணப்படுதலின நூற்றலோடு சாயமிடுதலும் இவர் தெரிந்தவரென்பது வெளியாகின்றது.
      || இவர்கள் ஆயரென வழங்கப்படுவர்; இன்னோர் நிலையின்றித் தங்கள் ஆடுமாடுகளுடன் சஞ்சரிப்பவரென்பதை பாகவதத்திற் பலவிடங்களினுங் காணலாம். இவர்களை யாதவரின் வேறாகப் புராணங்கள் கூறுவனவேனும் ஆந்திரநாட்டார், வேளாளரைப்போலவே தமிழிடையரையும் 'வேலமா' என்ற குலப்பெயரால் அழைத்தலால், வேளிரில் இவரும் அடங்கினவர்போலும். இவ் ஆயரைக் கோவைசிய குலத்தவரென்று புராணங் குறிக்கும். பாண்டியர் ஆதியிற்
      றென்னாடு புகுந்து அரசியல் தாபித்தகாலத்தே இவ் ஆயரும் அவருடன் வந்தவரென்ற செய்தி "வாடாச்சீர்த் தென்னவன் - தொல்லிசைநட்ட குடியொடு தோன்றிய - நல்லினத்தாயர்" 'வீவில் குடிப்பி னிருங்குதியாயர்' (முல்லைக்கலி. 5,4) எனக் கலித்தொகையிற் கூறப்படுதலால் அறியலாம். இவ் ஆய்க்குலத்தாரும் தென்னாட்டிற் சிற்றரசுகள் தாபித்திருந்தனர் எனவும், அவற்றைத் தமிழ்வேந்தரும் தலைவரும் அழித்தனரெனவும் தெரிகின்றன. (பதிற்றுப். 71, 88; பட்டினப்பாலை - 281.)

    ------------
    page 21

    இன்னோரது குடியேற்ற முயற்சிக்குப் பேருதவி புரிந்தருளியவர் அகத்திய முனிவர் என்பர் நச்சினார்க்கினியர்*. இனி, இவ்வேள்குலத்தோர் தம்மாற் காடு கொடுத்து நாடாக்கப்பட்ட பிரதேசங்களிற் கோட்டை முதலிய அரண்களைப் பெருக்கித் தம் தலைவரின் கீழ் அமைதியுடன் அமர்ந்து வந்தனர். இங்ஙனம், நாடுகளிற் றங்கியவர்
    'பதிக்குறியோர்' என்னும் பொருள்கொண்ட கிழார் எனவும், தம் முயற்சித்திறந்தோன்ற மருதநிலங்கள் எனவும், தம் ஆதிநாட்டினடியாக வேளிர், வேளாளர் எனவும் பெயர் பெற்றனர். ஆந்திர நாட்டாரும் இன்னோரை (வேண்மார் என்பதன் திரிபாக) வேலமா என்பர். ஆரியவகுப்பினருள் க்ஷத்ரிய-ஜாதியைச் சேர்ந்த இவர்கள், தம் நாடு செழித்தல்கருதி வணங்கிவந்த தெய்வம், ஆரியமக்கள் வணங்கிவந்த தெய்வங்களுள் இந்திரனாவன் : "வேந்தன் மேய தீம்புன லுலகமும்" என்றார் தொல்காப்பியனார். (பொருளதி, அகத்திணை, சூத்-5.) இவ்வேளாளர், ஆதியிற் கங்காதீரங்களில் வாழ்ந்த
    வராதலின், இவர்கள் தம்மைக் 'கங்கா - புத்திரர்' 'கங்கை-வமிசத்தவர்' எனக் கூறிக்கொள்வர். இவர்களை ஆண்ட சிற்றரசர் வேளிர் அல்லது வேண்மார் எனப்படுவர்.

    இவ்வாறு தமிழகத்துப் புகுந்து குடியேறிய வேளிராகிய யாதவகுலத்தார், ஆதியில் க்ஷத்திரிய வகுப்பினரேயாயினும், பன்னெடுங்காலமாகக் குடியேற்றமுயற்சியிற் சென்றமையாலும், உடனொத்த ஆரியக்கூட்டரவின்றித் தமிழ்நாட்டிற் றத்தந் தொழில் வேறுபாட்டாற் பிரிந்தமையாலும் தமது புராதன ஆசரணையைச் சிறுகச் சிறுக நெகிழவிட்டனர். கண்ணபிரான் காலத்தேயே யாதவ குலம், மற்ற க்ஷத்திரிய-குலங்களினுந் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட தென்பதும், †அரசாளுமுரிமை அக்காலத்தேயே இவர்க்கு

      * தொல்காப்பியப் பாயிரவுரை.
      † யாதவர்க்கு, முற்காலத்தே, சிங்காதன உரிமையின்மையும், அவர்கள் க்ஷத்ரிய
      குலத்திற் றாழந்துநின்ற செய்தியும் ஸ்ரீமத்-பாகவதம், 45, 68-ம் அத்யாயங்களில் முறையே கூறப்பட்டுள்ள விஷயங்களால் அறியப்படுவன. இங்ஙனமே, புராணதாற்பரியங்கூறும் பெரியோரும் - "யயாதி சாபத்தாலே அபிஷேக ப்ராப்தியற்று, க்ஷத்ரியரில் தாழ்ந்து வைசியப்ராயரான யது குலத்தில் தோன்றிய வசுதேவர்க்கும், கோவைசியரான நந்தகோபர்க்கும், புத்ரனாகிய கண்ணபிரானாக மூன்றாம் யுகத்திலே மூன்றாம் வருணத்தில் ஸர்வேசுவரன் அவதரித்தான் " ... என்று கூறுதலாலும் நோக்கத்தக்கது. (ஸ்ரீ வை.மு.சட கோபராமாநுஜாசாரியர் இயற்றிய சடகோபரந்தாதி 71-ம் பாட்டுரை பார்க்க) இதனால், வைசியகுலத்தாராக யாதவர் முன்பு கருதப்பட்டமை விளங்கும்.

    --------
    page 22

    அதிகமாக இருந்ததில்லை என்பதும் புராணேதிகாசங்களினின்று தெரிதலால், தென்னாட்டுப் புகுந்த வேளியராகிய யாதவர் தம் பழைய மதிப்பைக் காலாந்தரத்தே இழந்ததில் வியப்பில்லையாம்*. ஆயினும், இவர்களுடன் பிறந்த வீரத்தன்மையும் உறுதிப்பாடும் எக்காலத்தும் இவர்களைக் கைவிட்டொழிந்தில.

    இங்ஙனம், தமது பெருத்த குடியேற்றத்திற் பலவகைத் தொழிற்றிறங்களிற் சிறந்துநின்ற வேள்வகுப்பார், அவ்வத் தொழில்களை வழிவழியாகக் கொண்டமைபற்றித் தாமும் வேறு வேறு கிளைகளாகி மறைந்தனர். இவருள்ளே, தமிழ் நாட்டிற் றம் பழைய மதிப்புடன் பல்கிப்பெருத்த யாதவர் உழுதுண்டுவாழ்ந்த வேளாளராவர். ஆசிரியர்-நச்சினார்க்கினியர் தொல்காப்பிய வுரையில் (பொருளதி. 30) அடியில் வருமாறு எழுதுகின்றார்:- "வேளாளர் இருவைகயர்; உழுதுண்போரும் உழுவித்துண்போரும் என. இவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய்ச் சோழ நாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி, 'வேள்' எனவும் 'அரசு' எனவும் உரிமை-யெய்தினோரும்,

      * மனுஸ்மிருதி 10-ம் அத்யாயம், 43, 44-ம் சுலோகங்களில் (உபநயன முதலிய) கர்மலோபங்களாலும், பிராமண தர்சனமின்மையாலும் (-அஃதாவது, வைதிக லௌகீக - ஆசார வியவகாரங்களிற் பிராமணருடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளாமையாலும்) சூத்ரநிலைமைக்கு இவ்வுலகத்தே தாழ்ந்துவிட்ட 12-க்ஷத்ரிய வம்சங்களில் திராவிடரும் ஒருவராகக் கூறப்பட்டுள்ளனர். இதனை நோக்கும்போது, யாதவ - க்ஷத்ரியராய்த் தென்னாடாண்ட வேளிர் போன்றவரது முற்கால நிலையை நோக்கி இவ்வாறு கூறப்பட்டதோ என்று தோற்றுகிறது. ஸ்ரீ வியாச பாரதம், சபாபர்வம், 96-ம் அத்யாயத்தில், பரசுராமரது கொடிய க்ஷத்ரியவதத்துக்கு அஞ்சி ஓடியொளித்த அரசர் பலர், தங் குலதர்மங்களை விட்டமையாலும் பிராமணதர்சனமின்மையாலும், சூத்திர ப்ராயர் ஆயினரென்றும், அவரில் திராவிடரும் ஒருவர் என்றும் கூறப்படுதலும் காண்க. இதற்கேற்ப, க்ஷத்ரியனாகிய காந்தமன் என்ற சோழன், பரசுராமருக்கு அஞ்சிப் பொதியமலையில் அகத்தியமுனிவர்பால் அடைக்கலம்புக்க செய்தி மணிமேகலையில் வருதலும் அறிந்திகொள்க. (காதை-22; அடி 25-40)

    ------
    page 23

    பாண்டிய நாட்டுக் 'காவிதிப்' பட்டமெய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளராம். உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கோடலும், அவன் மகனாகிய கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலும் கூறுவர்" எனவும், "வேளாளர் பகைவர்மேலும், நாடுகாத்தன்மேலும், சந்துசெய்வித்தான்மேலும் அரசரேவற்படி செல்லுதற்குரியர்" எனவும் காண்க. இவற்றால், வேளாளருட் பலரைத் தமிழ்ப் பெருவேந்தர் தம் அரசியலில் உயர்நிலையில் வைத்து மதித்துவந்ததோடு, அவரினத்துச் சிற்றரசரான வேளிருடைய பெண்களை அவ்வேந்தர் விரும்பி மணம்புரிந்துவந்தனரென்பதும் அறியலாம். சேரன்-செங்குட்டுவன் மனைவி 'இளங்கோ -வேண்மாள்' என்று சிலப்பதிகாரங் கூறுதலுங் (காதை -25-அடி-5) காண்க. பதிற்றுப்பத்தில் இத்தொடர்பு பலவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வேளிர் பழைய க்ஷத்திரிய -வகுப்பினராய் நாகரீகமுதிர்ச்சி உடையரா யிருந்தமை பற்றி, உயர்குலத்தவராகிய தமிழ்வேந்தர் அவருடன் சம்பந்தஞ் செய்து வந்தனரென்பது இதனாற் பெறப்படுகின்றது. "நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி - மகட்பா டஞ்சிய மகட்பாலானும்" (புறத்திணை - 79) என்புழி, இம்மணச் செய்தியைத் தொல்காப்பியனாரும் குறித்தனர் என்பர் நச்சினார்க்கினியர்.

    வேளிரால், ஆதியிற் சிற்றரசுகள் தாபிக்கப்பட்டுவந்த காலங்களில், இவர்க்கும் சேர சோழ பாண்டியர்க்கும் அடுத்தடுத்துப் போர் நிகழ்ந்து வந்ததாக அறியப்-படுகின்றது. அங்ஙனந் தாபிக்கப்பெற்ற பழைய வேளிர்நாடுகள்:- கொண்கானம், ஒளிநாடு, முத்தூற்றுக்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக்கூற்றம், குண்டூர்க் கூற்றம், வீரை, துளுநாடு முதலியன. பிற்காலத்தில் அவ்வேளிர்பால் மகட்கொண்டு, சம்பந்தம்பெற்ற பேரரசர்கள் அவரது சிற்றரசுகளை ஆதரித்து வந்ததோடு, அவரினத்து வேளாளர் பலரைத் தம் மரசியற்கு உரியவராக்கி நாடுகள்பல அளித்தும், வரிசைகள் கொடுத்தும் அமைச்சராகவும் தண்டத்தலைவராகவும் நியமித்துப் போற்றிவந்தனர். இங்ஙனம் அமைச்சுப் பூண்டவர்கள், பாண்டியரிடம் 'காவிதி' என்ற பட்டத்துடனும், சோழரிடம் 'ஏனாதி' என்ற பட்டத்துடனும் விளங்கினர்.

    ------
    page 24

    கரிகாற்சோழன் மற்றெல்லாரினுஞ் சிறப்பாக, இன்னோர்க்கு 74- நாடுகளமைந்த 24 - கோட்டங்களை உதவிப் பெரிதும் ஆதரித்தானென்று தெரிகின்றது*. தொல்காப்பியனார், இவ் வேளாளரில் தாழ்ந்தவர் பலரால் மிகுதியுங் கொள்ளப்பட்டு வந்த தொழிலாதல் பற்றி "வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல - தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி" என மரபியலிற் கூறினரேனும், தங்காலத்தே இன்னோர் சிற்றரசராய்ச் சிறந்து விளங்கினமையாலும், இவரினத்தார் தமிழ் மூவேந்தர் சார்பிற் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தமை யாலும் -

      "வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய
      ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே."

      "வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும்
      தாரு மாரமுந் தேரும் வாளும்
      மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய"

      "வேந்துவிடு தொழிலிற் கழலுங் கண்ணியும்
      வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே."

    என்ற சூத்திரங்களால், இக்குலத்தாரையே பெரும்பான்மை கருதி, அவர்க்கு அரசர்க்குரிய வரிசை பலவும் கூறிப்போதல் காணலாம். இதனால், தொல்காப்பியனார் காலத்தே, வேளிருடைய நிலை க்ஷத்ரிய ஒழுக்கத்தினின்றும் நழுவியிருந்ததாக உய்த்துணரப்படும். இது பற்றியே, உரையாசியர்களும் வேளாளரது உயர்வு புலப்படும் இடமெல்லாம் அதனை அவருளுயர்ந்த உழுவித்துண்ணும் வேளாளர் மேலும், தாழ்வு புலப்படுமாயின் அவரிலிழிந்த உழுதுண்ணும் வேளாளர் மேலும் ஏற்றிச் செல்வாராயினர். இனி, தமிழ்நாட்டிற் பண்டைக்காலத்தே விளங்கிய சிற்றரசருட் பெரும்பாலார் இவ்வேள் கலத்தவரேயாவர்; இதுபற்றி, வேளென்றபதம், பிற்காலத்தே, வேறு குலத்தலைவரும் அடங்கக் குறுநிலமன்னர் அனைவர்க்குமுரிய பெயராக வழங்கலாயிற்று. ஆனால், பண்டை வழக்கு அவ்வாறு காணப்படாமையின், அது பிற்பட்ட கொள்கை என்பதே

      * The Tamils 1800 - years ago; ஏரெழுபது, 97-ம் பாட்டு.

    ------
    page 25

    பொருத்தமாம். இவ்வேள்குலத்தார் உழுதூண்டொழிலை வழிவழியாகவும், ஏனைய குடிகளின் சிறப்பாகவும் கொண்டமையால், அச்சிறப்புப்பற்றி, அவர் பெயரடியாக, 'வேளாண்மை' என்பது உழுதூண் தொழிற்குரிய பெயராக வழங்குவதாயிற்று*. இதுபற்றியே, "வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல - தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி" எனத் தொல்காப்பியருங் கூறுவாராயினர். அன்றியும், வழிவழியாக வந்த வேளிரது வள்ளன்மையும் சிற்றரசுரிமையும் நோக்கி, வேளென்பது உபகாரி என்னும் பொருட்கும் சிற்றரசு என்னும் பொருட்கும் உரிய சொல்லாகவும் வழங்கப்பெற்றது. பண்டைப் பதமாகிய வேள், வேளார்†என்பவை, புதுக்கோட்டை ஸம்ஸ்தானத்தைச் சார்ந்த தேர்க்காட்டூரிலும் பிரான்மலைப் பக்கத்தும்‡ உள்ள வேளாளரில் ஒரு கூட்டத்தார்க்கு இன்றும் பயின்றுவருதல் அறியத்தக்கதாம்.

    இதுகாறும் கூறிப்போந்தவற்றால், தமிழகத்துப் பண்டைக்கால முதலே உள்ள வேளிர் என்ற கூட்டத்தார் கண்ணன்வழியினராய்த்¶ துவாரகையினின்று குடியேறியவர் என்றெழுதிய நச்சினார்க்கினியர் கூற்று, அவர் யாதவ-குலத்தவரென்பதைக் குறிப்பதென்பதும், இச்செய்திக்குப் பொருந்த, வேளிர் துவாரகையினின்று வந்தவரென புறநானூற்று மேற்கோளுண்டென்பதும், பாரத காலத்தை

      *உழுதுண்பாரை 'வெள்ளாளர்' என வழங்குதலுமுண்டு; இதற்கு 'வெள்ளத்தை ஆள்பவர்' என்பது பொருளாம், பெருக்காளர், காராளர் என்பவற்றுக்கும் இங்ஙனமே பொருள் கூறுவர். இச்சொல், வேளாளர் என்பதின் வேறாதலின், ஈண்டா-ராய்ச்சியில்லை என்க.
      † வேளார் என்ற பெயர், பண்டைச் சோழவரசரது மந்திரிகளும் படைத்
      தலைவருமாகிய பலர்க்கு வழங்கிவந்ததென்பது சாஸனங்களால் விளங்குகிறது;
      ராஜராஜேந்திர மூவேந்த வேளார், வீரசோழ இளங்கோவேளார் எனக்காண்க.
      (S.I. I; Vol III, p.115). இதனாற் பிற்காலத்துத் தமிழ்வேந்தராலும், இவ்வேளிர் அபிமானிக்கப்பட்டுவந்தமை வெளியாகும்.
      ‡ இப்பிரான்மலையே, வேள்-பாரியின் பறம்புமலையாம். இந்நூலில்,
      வேள் - பாரி என்ற விஷயம் பார்க்க.
      சளுக்கியர், கண்ணன் வழியினரென்று சிறப்பாகக் கூறப்பட்டிலரேனும், பொதுவாக விஷ்ணுவமிசத்தினராகத் தம்மை வழங்கியிருத்தல் சாஸனங்களால் அறியப்படுகின்றது(Ind. Ant, 1890, p.425.)

    ---------------
    page 24

    யடுத்து யாதவர் தெற்கே வந்தேறியவர் என்ற குறிப்பு முன்னூல்களினின்று அறியப்படுதலோடு, வடநாட்டுப் பண்டிதராலும் அஃது ஆதரிக்கப்பட்டுள்ள தென்றும், வேளிர் யாதவகுலத்தவரே என்பது பிற்காலத்தில் துவாரகையினின்றுவந்து தென்னாடாண்ட ஹொய்சள-பேலாலயாதவர், இவருடன் பல்லாற்றானும் ஒத்திருத்தலால் விளங்குவதென்பதும், வேள்புலத்தினின்று வந்தமையே அவ்விருவரும் வேளிரெனவும், பேலாலரெனவும் பெயர்பெற்றதன் காரணமாக வேண்டுமென்பதும், இவ்வேளென்ற பதம் சளுக்குவேந்தர்க்கும் நிகண்டுகளிற் படிக்கப்பட்டுள்ளதென்பதும், இச் சளுக்கரும் யாதவ குலத்தில் ஒருகிளையினரே என்பதும், முனிவ ரொருவரது யாக பாத்திரத்திற் றோன்றியவரலாறு சளுக்கருக்கும் பண்டை வேளிர்க்கும் உரியதாகத் தெரியவருதலின் அவ்விருவரும் ஒரு குலத்தாவரென்பதும், கொடுந்தமிழ்நாடுகளில் ஒன்றாகிய வேணாடு என்பது இவ் யாதவரது புராதனபூமியாகிய வேள்புலத்தையே குறிப்பதாகல் வேண்டுமென்பதும், பண்டைவேளிர் தமிழ்நாட்டுக் குடியேறிய காலம் கி.மு. 10-ம் நூற்றாண்டாகக் கொள்ளுதல் ஒருவாறு பொருந்துமென்பதும், வேளிர்பெருங்கூட்டந் தென்னாடு புகுந்து வாழ்ந்த வரலாறு இதுவாம் என்பதும், அன்னோர் பெருமை இன்னவென்பதும் விளங்கியவாறு கண்டுகொள்க.

    இங்ஙனம், வேள்புலத்தினின்று தமிழ்நாடு புகுந்து ஆட்சி புரிந்த வேளிரும் அவரினத்தாராகிய வேளாளரும், தமது வரையாது வழங்கும் வள்ளன்மையாலும், அரசாற்பெற்ற வரிசைகளாலும், எளியரைத்தாங்கிய அளியினாலும், நலிதற்காகா வலிமையாலும் பண்டுதொட்டே இத் தமிழ்நாட்டிற் பெரும்புகழ் பூண்டு விளங்கினர். முற்காலத்தும் பிற்காலத்தும் விளங்கிய தமிழ்ப் பெருங்கவிகளிலே, இவர்களைப் பாடிப் பயன்பெறாதவர் எவருமே இரார். இவரது இரவாமலீயும் வள்ளன்மையை இத்தமிழகத்தே போற்றிப்

    ---------
    page 25

    புகழாத இடமுமில்லை. இத்தகைய பெருமை படைத்தவரின் வம்சத்தவராய் விளங்கியவர்களைப் பிற்காலக்கவிகள் வேண்டியவளவு வாயாரப் புகழ்ந்து பாடியுள்ளார். ஆதி வேளிர் குலத்தவராகச் சங்கநாளில் விளங்கிய பெருவள்ளல்கள்:--வேள்-ஆய், வேள்-பேகன், வேள்-ஆவி, வேள்- எவ்வி, வேள்-பாரி, நன்னன்-வேண் மான் முதலியோர் ஆவர். இன்னோரது அழகிய சரிதங்கள், தமிழ் நாட்டார் அறிந்து மகிழத்தக்கனவாகலின், முன்னூல்களில் இவர்களைப்பற்றி யாம் தெரிந்த செய்திகளை இனி முறையே எழுதுவேம்.

    ------------------
    page 28

    வேள்-ஆய்


    இவன் கடைச்சங்கநாளில் விளங்கிய கடையேழுவள்ளல்களில் ஒருவன் என்பது-158-ம் புறப்பாட்டாலும், சிறுபாணாற்றுப் படையாலும் நன்கு விளங்குகின்றது. இவ்வேளைப்பற்றிய சரித்திர முழுதும் தெரியவிடமில்லையேனும், இவன் விஷயமாகப் பழைய நல்லிசைப்புலவர் பாடிய செய்யுள்கள் இவ்வள்ளலது வரலாறுகள் சிலவற்றை அறிதற்கு உதவியாயிருத்தலோடு, இவனது அரிய குண விசேடங்களையும் பெரிய கொடைச்சிறப்பையும் இக்காலத்தார்க்குப் புலப்படுத்துகின்றன. இவ்வள்ளல் வேளிர் குலத்தைச் சேர்ந்தவனென்பது, 'மாவேள் ஆய்', 'தேர்வேள் ஆய்' எனப் புறநானூற்றில் வருதலாற்றெரியலாம். அந்நூலில் "கழறொடி ஆஅய்மழைதவழ் பொதியில்" எனவும், "தென்றிசையாய்குடி" எனவும் கூறப்படுதலின், ஆய்நாடு பொதிய மலைப்பக்கத்து உள்ளதென்பதும், அவன் தலைநகர் 'ஆய்குடி' எனப் பெயர்பெற்ற தென்பதும் விளங்கும். இவன் மலை வேற்றரசரால் தாக்கமுடியாத அரண்வலியுடைய தென்பர்; "கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் - ஆடுமகள் குறுகினல்லது - பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே" எனக் காண்க. இவனாட்டில் கவிரம் என்னும் மலைப்பகுதியில் இனிய பல சுனைகளுண்டென்றும், சூரரமகளிர்பலர் அதில் வாழ்வதாக ஐதிகமிருந்த தென்றும் தெரியவருகிறது. இதனை--

      "தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற்
      கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்
      ஏர்மலர் நிறைசுனை யுறையும்
      சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே." (அகம்-198)

    என்னும் அடிகளிற் காண்க. ஆய்நாட்டில் யானைகள் மிகுந்த காடுகள் உண்டென்றும், பரிசிலர்க்கு யானைக்கொடை மிகுதியாக அளித்து வந்தவன் இவ்வள்ளலென்றும் தெரிகின்றன. இங்ஙனம், இவனது யானைக் கொடையின் மிகுதியை நோக்கி, ஒருபுலவர், "விளங்கு மணிக் கொடும்பூண் ஆஅய்நின் னாட்டு-இளம்பிடி ஒருசூல் பத்தீனும் மோ" என்று நயப்பக் கூறுதலுங் காண்க. இவ்வள்ளலுக்கு
    ----------
    page 29

    "அண்டிரன்" என்னும் மற்றொரு பெயரும் உண்டென்பது, இவனைப் பற்றிய பாடல்கள் பலவற்றிற் காணலாம். புறநானூற்று - உரைகாரரும், 'அண்டிரன் - ஆய்க்கு ஒரு பெயர்' என்பர். இவ்வண்டிரன் என்ற பெயர்வழக்கின் காரணம் முன் வேளிர் வரலாற்றினுள் விளக்கப்பட்டது.* புறப்பாட்டில், "ஈகையரிய இழையணிமகளிர்" "கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு" என வருதலால், ஆய் மகளிர்பலரை மணம்புரிந்தவனென்பது அறியப்படும். இவனுக்குரிய மாலை சுரபுன்னை ஆகும். இவ்வள்ளல், தன் பெருங்கொடைக்கேற்ப, இன்சொல்லே தன்சொல்லாகப் படைத்தவனென்பர். இவ்வேளிர் தலைவன், கொங்கு நாட்டாரோடு போர்புரிந்து, அவரை மேல்கடற் பக்கத்தே ஓட்டினவனென்று, 130-ம் புறப்பாடல் அறிவிக்கின்றது. இவன், ஒருகால், நீலநாக மொன்றால் அளிக்கப்பெற்ற அருமை பெருமை வாய்ந்ததோர் ஆடையைச் சிவ
    பிரானே அணியத்தக்கதென்று கருதி, அப்பிரானுக்கு உவந்து சாத்தினன் என்று சிறுபாணாற்றுப் படையில் வியக்கப்படுகின்றான். இதனை,

      "நீல நாகம் நல்கிய கலிங்கம்+
      ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த
      சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
      ஆர்வ நன்மொழி ஆய்" (96 - 99)

    என்பதனால் அறிக. இவ்வரலாறு, ஆய், சிவபக்தி மிக்கவன் என்பதை நன்கு விளக்குவது. இவ் வள்ளலின் நாளோலக்கம் மிகச் சிறந்து விளங்கும் என்பர். (நற்.-30) இப்பெருந்தகையைப் பாடிய புலவர்பெருமக்கள் உறையூர் ஏணிச்சேரி-முடமோசியார், துறையூர் - ஓடைகிழார், குட்டுவன் - கீரனார் என்போர். இவருள் முடமோசியார் அந்தணரென்பது தொல்காப்பிய மரபியலுரையால் (சூத் 74) அறிந்தது. இம்மோசியாரே, வேள்-ஆயின் அருமை பெருமைகளை அதிகமாக வெளியிட்டவர். வேள்-பாரிக்குக் கபிலர் போலவும்,
      -
      * வேளிர் வரலாறு, 16-ம் பக்கம் பார்க்க.
      + நாகங்களின் புணர்ச்சிக்காலத்து, அவற்றின் மேல் போர்க்கப்பட்ட ஆடை மிகவும் பவித்திரமானதென்றும், அது தேவதைகளுக்கு மிகவும் உகப்புடை தென்றும் வழக்குண்டு.

    ----------
    page 30

    அதிகமானுக்கு ஔவைபோலவும், ஆய்க்கு மோசியாரே பெரிது முரிமை பூண்டவரென்பது " திருந்துமொழி மோசி பாடிய ஆயும்" எனப் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் கூறுதலால் (புறம்-158) தெரியலாம்.

    வேள் - ஆயின் வள்ளன்மையையும் அருங்குணங்களையும் புறநானூற்றில் வரும் பாடல்கள் மிகவும் அழகுபடக் கூறுகின்றன. மோசியார் தன் மனைவியரது மாங்கல்ய சூத்திரம் ஒழிய மற்றவையனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கி விட்டனனாயினும், கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தறியாது தம்வயிறருத்திக் கழியும் மற்றப் பெருஞ் செல்வர்கள் மனைபோலப் பொலிவிழக்காது ஆயின் அரண் மனை அழகுமிகுந்து விளங்கும்" என்கிறார். இப்புலவர், ஆயைக் காணாதமுன்பு, பிறர் சிறிய இசையைக் கேட்டும் நினைந்தும் பாடியும் போந்த தமக்கு, அவனைக் கண்டதும் அவனது அறுங்குணங்களும் பெருங்கொடைத்திறமும் அளவிறந்த அதிசயம் விளைத்தமையால், "முன்னுள்ளு வோனைப் பி்ன்னுள்ளினேனே - ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே - பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே" எனத் தம் அறியாமையை இழிப்பதன்மூலம் ஆயின் உத்தம குணங்களை வியந்தனர். இவ்வள்ளலின் அருமை பெருமைகள் தம் போன்ற பெரும்புலவர்களைப் பணித்துவிட்டமைபற்றி " புலவர்கள் நீயில்லாத உலகத்தில் இனி வாழாதிருக்கக் கடவர்" என்றும், " பெரிதாக ஏத்தினாலும் சிறிதும் உணரமாட்டாத, பெருமையில்லாதுபெருகிய செல்வத்தையுடைய அரசரை எம்மவர் பாடார்" என்றும் புகழுவர். (புறம்-373) இங்ஙனம், வேள் ஆயின் பேரபிமானத்துக்கு உரிமை பூண்டு விளங்கிய இப்புலவர், மலைக்காட்டுவழியே ஒருகாற் செல்லும்
    போது, ஆண்டுக் களித்து வாழும் யானைக் கூட்டங்கள் தம் கண்ணுக்குப் புலப்பட, அப்போது--

      " மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்
      வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்
      குன்றம் பாடின கொல்லோ
      களிறுமிக வுடைய இக்கவின்பெறு காடே"

    ---------
    page 31

    என்னும் இனிய பாடலைக் கூறினார். " யானைகளை மிகுதியாகவுடைய இவ்வழகிய காடு, அண்டிரனுடைய (ஆய்) மலையைப் பாடிப் பரிசில் பெற்றதுகொல் என்பது இகன் கருத்து. ஆயின் யானைக்கொடை, காட்டியானைகளைக் கண்டதும் தம் மனதில் தோன்ற, அப்போது தானே சுரந்தெழுந்த பாடல் இஃதென்பது அறியலாம். இன்னும்,
    மோசியார் ஆயின் ஒப்புயர்வற்ற கொடைத்தூய்மையை--

      " இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
      அறவிலை வாணிகன் ஆஅய் அல்லன்
      பிறரும் சான்றோர் சென்ற நெறியென
      ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே"

    என்ற பாட்டாற் குறித்தனர். இவ்வுலகில் அறங்கள் செய்யின் அவை மறுமைக்குதவு-மென்று மறுபயன் பெறும் எண்ணத்தடன் தருமவியாபாரம் செய்யும் வாணிகலன்னன் ஆய்; அவனது கொடை, பெரியோர்கள் சென்ற வழியென்று உலகோர் கருதும்படி அமைந்தது" என்பது இப்பாட்டின் போந்த பொருள். இனி, அம்மோசியார் மற்றோரிடத்தில்,

      வடதிசை யதுவே வான்றோ யிமயம்
      தென்றிசை ஆஅய் குடியின் றாயிற்
      பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே"

    என இவ்வள்ளல் உலகிற்குபகாரப்படும் சிறப்பைப் புகழ்வர். இவ்வடிகளில் அமைக்கப்பட்ட கருத்து, பொதியில் மலைக்குரிய அகத்தியர்க்கு வழங்கும் புராணகதையடியாக உண்டாகியிருத்தல் வேண்டும்.

    இவ்வாறு, " ஆடுநடைப் புரவுியுங் களிறுந் தேரும் - வாடாயாணர் நாடு மூரும் - பாடுநர்க் கருகா ஆஅய் அண்டிரன்" பெருவள்ளலாய் உலகோர் தன்னை என்றும் நினைக்கும்படி விளங்கி, பின் ' காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப—மேலோருலக மெய்தினன்'. இவ்வள்ளல் பிரிவிற்காற்றாது, இவனதுரிமை மனைவியர் தீப்பாய்ந்து உயிர்விட்டொழிந்தனர். ஆய் இறந்தபோது அவனது பிரிவுக்குப் பெரிதும் இரங்கிப் பாடிய புலவர்கள், உறையூர் ஏணிச்சேரி
    ------------
    page 32

    முடமோசியார், குட்டிவன் கீரனார் என்போர். இவருள், மோசியார், ஆயண்டிரன் விண்ணிலகு சென்றதற்கிரங்கி அடியில்வரும் உருக்கமான பாடலைக் கூறினர்:

      "திண்டேர் இரவலர்க் கீத்த தண்டார்
      அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
      வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
      போர்ப்புறு முரசங் கறங்க
      ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே"*

    பெரும்புகழினனாகிய அண்டிரனை விண்ணுலகத்தில் இந்திரன் வாத்திய கோஷங்களுடன் வரவேற்று எதிர்கொண்டான் என்பது இதன் கருத்து; என்றது ஆய் சுவர்கஞ்சென்றான் என்பதாம்.

    இனி, ஆய் அண்டிரனைத்தவிர, ஆய் எயினன் என மற்றொருவனும் அகநானூற்றிற் பல விடங்களிலுங் கூறப்படுகிறான். இவனைப் பாடியவர் பரணர் முதலியோர். வேள் ஆயைப் பாடியவராக முற்கூறிய புலவர்கள் இவனைப் பாடியவராகக் காணவில்லை. இவ்வாய் எயினனும் புலவர்க்குப் பேருபகாரியா யிருந்தவனென்று தெரிகின்றது. இவன் வேளாகிய ஆயின் வேறுபட்டவனென்பதை விளங்க வைத்தற்போலும், எயினன் என்னும் சொற்புணர்ப்புடனே பெரும்பாலும் வழங்கப்படுகின்றான். வேள்- ஆயைத் தனியே அண்டிரன் எனவும் கூறுதல்போல, இவனைத் தனியே எயினன் எனவும் வழங்குவர்; இதனை, "வண்மையெயினன் வீழ்ந்தனன்" என வரும் அகநானூற்றடியால் அறிக. இவ் வாயெயினன் மிஞிலியென்பானோடு புரிந்த பெரும்போரில் உயிரிழந்தவனென்பது அக நானூற்றிற் பரணர்பாடல் பலவற்றால் அறியக்கிடக்கின்றது. ஆனால், வேள்-ஆயின் சாவைக்குறிக்கும் புறப்பாடல்கள் அச் செய்தி கூறவில்லை. மேலே கூறிய ஆய் இருவரும் ஒருவராயின், அகப்பாடல்களில் மிகுதியாகப் பயிலும் எயினன் என்னும் அடைமொழி ஆயைப்

      *இதன் பொருள்:- திண்ணிய தேரை இரவலர்க்குக் கொடுத்த குளிர்ந்த மாலையையுடைய ஆய் வருகிறான் என்று கருதி, ஒள்ளிய தொடியையும் வச்சிராயுதத்தையுமுடைய இந்திரனது கோயிலுள் போர்த்தலுற்ற முரசுமுழங்க வானத்தில் ஓர் ஓசை எழுந்தது-என்பதாம்.

    ------------------
    page 33

    பற்றிய புறப்பாடல்களில் பயிலாதிருத்தற்கும், புறப்பாடல்களில் வேள், அண்டிரன் என ஆய்க்கு வழங்கும் அடைமொழிகள் எயினனைப்பற்றிய அகப்பாடல்களிற் பயிலாதிருத்தற்கும் சிறந்த காரணமின்மையால், அவ்விருவரும் ஒருவரல்லரென்பதே ஒருதலை. அன்றியும் எயினனாகிய ஆய் பொதியின்மலைக்கு உரியவனென்று கூறப் படாமல், பெரிய காடொன்றற்குத் தலைவனாக வழங்கியிருத்தலுங் கண்டுகொள்க. இவ்வாய்-எயினன் ஏழிற்-குன்றத்திற்குரிய நன்னனது படைத்தலைவனாக ஊகிக்கப்படுகிறான். இவற்றால், ஆய் அண்டிரனையும் ஆய் எயினனையும் ஒருவராகக் கொள்ளாது வேறுவேறு தலைவர்களென்று கொள்ளுதலே பொருத்தம் என்பது தெரியலாம்.

    இனி, இற்றைக்கு 1750- ஆண்டுகட்குமுன்பு தாலமி(Ptolemy) என்னும் யவனாசிரியர் இப்பரதகண்டமுழுதும் சுற்றி, அக்காலத்துப் பூமியி னியல்புகளையும் அரசிய னிலைகளையும் பிறவற்றையும் பற்றி நீண்ட குறிப்பொன் றெழுதி-யிருக்கின்றனர். அக்குறிப்பில், தென்னாட்டைப்பற்றிய பழங்காலச் செய்திகள் சிலவும் காணலாம். இவ்வாசிரியர் இங்கு வந்த சமயம் கடைச்சங்க காலமாகவேண்டும். யவனர்கள் முன்னாளிற் சோணாட்டுப் பெருந் துறைமுகப் பட்டினமாயிருந்த தொண்டி முசிரி முதலிய இடங்களில் தம் கப்பல்களுடன் இறங்கி, அந்நாட்டுக்குரிய பண்டங்களாகிய மிளகு முதலியவற்றை விலைக்குப்பெற்றுச் செல்வதும் உண்ணாடுகளில் வியாபாபரஞ் செய்வதும் பெருவழக்கமாயிருந்தனவென்பது, தாலமி முதலியோர் குறிப்புகளால் விளங்குதலோடு பழைய சங்கநூல்களாலும் நன்கறியப் படுகின்றது. இதனை ' யவனர் தந்த வினைமா ணன்கலம்-பொன்னொடு வந்து கறியொடு பெயரும்-வளங்கெழு முசிரி" (அகம்) என்பன போன்றவற்றான் அறிக. (கறி - மிளகு) இனித், தாலமியாசிரியர் தம் குறிப்பில் தமிழகத்துள்ள பல நகரங்களைப்பற்றி எழுதியவிடத்தில் ஆயின் நாட்டையும், அதனுள் ஐந்து துறைமுகங்களையுங் குறிக்கின்றார். இவ்வாறு. 1750- ஆண்டுகட்கு முன்னிருந்த யவனாசிரியர் ஆயது நாட்டைக் குறித்திருத்தலால், ஆய் வமிசத்தோர் என்பது வெளியாகின்றது. இவ்வள்ளல், கடைச்சங்ககாலத்து அரசர் பலர்க்குச் சிறிது முற்பட்டவனென்பது புறநானூற்றால் ஊகிக்கப்படுகிறது.
    ---------
    page 34

    இனி, திருவனந்தபுர ஸம்ஸ்தானத்துச் சாஸன பரீக்ஷகராகிய ஸ்ரீமாந். து. அ. கோபிநாதராயரவர்கள் M.A. "திருவாங்கூர் ஆர்க்ய லாஜிகல் ஸீரீஸ் No. 11, 12."-களில் வெளிப்படுத்தியுள்ள கோக்கருநந்தடக்கன், விக்கிரமாதித்ய-வரகுணன் என்ற அரசரது சாஸனங்களால், அவ்விருவரும் தந்தையும் மகனுமாக 9-ம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்பதும், வேள் ஆயின் மரபினரென்பதும், அவனாண்ட ஆய் குடியே தம் தலைநகராக உடையரென்பதும் விளங்குவதோடு, அன்னோர் யதுவமிசத்து விருஷ்ணி குலத்தவரென்ற அரிய செய்தியும் வெளியாகின்றது. இன்னும், இவ்வாய் மரபினரின் நாடு தென் திருவாங்கூர் ராஜ்யமே எனவும், இவரது ஆய்குடி கோட்டாறு (Kotaur) என்ற பழமை பெருமைவாய்ந்த ஊரேயாதல் வேண்டுமெனவும், சாஸனங்களில் வேணாடு என வழங்குவது இவ்வாய் நாடே எனவும், 8-ம் நூற்றாண்டில் விளங்கிய ஜடிலவர்மன்- பராந்தகனென்ற பாண்டியனைப்பற்றிய சாஸனங்களில் இவ் வாய் மரபினர், மலைநாட்டு ஆய்வேள் என்றும், வேண் மன்னன் என்றும் வழங்கப்பட்டுள்ளார் எனவும், என் நண்பராகிய ஸ்ரீமாந்- ராயரவர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள்.

    மேல், வேளிர் வரலாற்றில் "துவரையாண்ட கண்ணபிரானது வழியினரே வேளிர்" என்றெழுதிய நச்சினார்க்கினியர் கூற்றிற்குப் பொருந்த, பிற்காலத்து ஆய்வமிசத்தரசர், அக்கண்ணனது விருஷ்ணி குலத்தவராகச் சாஸனங்களிலும், கூறப்பட்டிருத்தல், 'வேளிர் யாதவரே' என்னும் என் கொள்கையைக் கரதலாமலகம்போல் விளக்கி நிற்றல் காணலாம். வேணாடு, வேண்மன்னன், ஆய்-வேள் என்ற தொடர்கள் சாஸனங்களிற் பயிலுதலுடன் ஆய்குடி என்ற பழைய நகரே பிற்காலத்து ஆய்மரபினர்க்கு உரியதாயிருந்தமையும் அறியத் தக்கன. இவற்றுள், வேணாடு என்பது, வேளிருள் ஒரு பிரிவினராகிய ஆய்மரபினர் குடியேறி ஆண்டமைபற்றிப் பின்பு வழங்கிய பெயரே என்பதும், மகாராஷ்டிரமாகிய வேள்புலமே அவர்களது பூர்வ தேசமென்பதற்கு, பிற்பட்ட சாஸனங்களிலன்றிப் பழைய தமிழ் நூல்களில், தென்திருவாங்கூர் வேணாடு என வழங்காமையே சான்றாதலும் கண்டுகொள்க.
    ----------------
    page 35

    வேள்- ஆவி.


    ஆவி என்பான் வேளிர்குலத் தலைவருட் பழைமையானவரில் ஒருவன். அகநானூற்றில்:--

      வண்டுபடத் துதைந்த கண்ணி யொண்கழல்
      உருவக் குதிரை மழவ ரோட்டிய
      முருக னற்போர் நெடுவே ளாவி
      அறுகோட் டியானைப் பொதினி" (1)

      " முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
      பொன்னுடை நெடுநகர்ப் பொதினி" (61)

    என வருதலால், இவ்வாவி வேளிர் தலைவனும் சிறந்த வீரனும் பொதினி என்னும் நகர்க்கு உரியவனுனனவன் என்பது உணரலாம். அகநானூற்று அரும்பதவுரைகாரர்--"நெடுவேளாவி – குறுநில மன்னன்; பொதினி - ஆவிமலை" என்று எழுதலின், இவன் இருந்தாண்ட பொதினி என்ற நகர், அப் பெயர்வாய்ந்த மலையின்கண் உள்ளதென்பது விளங்குகின்றது. இப் பொதினி என்பது, இப்போது பழனி எனவழங்கும் மலையும் ஊருமாமெனவும், பழனிக்கு ஆவிநன்குடி என்பதே பழைய வழக்காகத் தெரிதலால், அது வேள் - ஆவிக்குரிய ஊர் என்பதை நன்கு விளக்குவதெனவும், பழனி என்ற
    வழக்கு பழைய நூல்களிற் காணப்படாமையின், பொதினி என்பதே பழனி எனப் பிற்காலத்து மருவியததாகல் வேண்டுமெனவும், வேளாவியின் வழியினனாகிய பேகன் என்ற வள்ளலை 'வையாவிக்கோ' என நூல்கள் வழங்குவதற்கேற்ப, பழனியிலுள்ள குளமொன்று வையாபுரி (வையாவிபுரி) என இன்றும் வழங்குவதெனவும்—ஸேதுஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீமத்-ரா.இராகவைங்கார் அவர்கள் கருதுவர்* இவ்
    வாவியின் வழியினர் ' ஆவியர்' என வழங்கப்பெறுவர்; இம் மரபினனாகிய பேகன் என்ற வள்ளல் ' ஆவியர் பெருமகன்' எனக் கூறப்படுதல் காண்க.

      * " செந்தமிழ்" த் தொகுதி-2, பகுதி-1; ஆவிநன்குடி என்ற விஷயம் பார்க்க.

    --------
    page 35

    இனி, வேள் ஆவியின் வரலாறுகள் விசேடமாக நூல்களினின்று அறியப்படவில்லை. பதிற்றுப்பத்து 4-6-8-ம் பத்துக்களின் பதிகங்களால், வேளாவிக்கோமான் என்பவனுக்குப் பதுமன் என்ற பெயர் வழங்கியதென்பதும், இப் பதுமனுடைய மகளிர் இருவர்- நெடுஞ்சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சேரவரசர்களுக்கு முறையே வாழ்க்கைப்பட்டவரென்பதும், இம் மகளிர் வயிற்றில்,-நெடுஞ்-சேரலாதனுக்குக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும்; செல்வக்கடுங்கோவுக்குத் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையும் முறையே பிறந்த மக்களென்பதும் விளங்குகுன்றன. இதனால், பதுமன் எனப் பெயர் பெற்ற வேளாவிக்கோ, சேர அரசர் பலர்க்குப் பாட்டனானவ னென்பது அறியப்படும். இச் சேரர்களில், தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறையைப் பதிற்றுப்பத்தின் எட்டாம்பத்தாற் பாடிய அரிசில்கிழார் என்றபுலவர், ஆவிவமிசத்தவனும் வள்ளலுமாகிய பேகனென்பவனாற் றுறக்கப்பட்ட அவன் மனைவி கண்ணகியை அவனோடு சேர்த்தல்வேண்டி, அவ் வள்ளலைப் பாடின செய்தி 146-ம் புறப்பாட்டாற் றெரிகிறது. இதனால், வேளாவிக்கோவின் மகள் மகனாகிய பெருஞ்-சேரலிரும்பொறையும், வேள்-பேகனும் ஒருகாலத்தவராதல் உணரலாம். இவ் விரும்பொறைக்கு வேளாவிக் கோப்பதுமன் மாதாமகனாய் அணிமைக் காலத்தவனாதலின், பேகன் என்ற வள்ளற்கும் அவன் சமீபித்தவனென்பது சொல்லாதே அமையும். இத்துணைச் சமீபகாலத்துக்குள், பதுமன் என்ற வேளாவியின் வழியினர் பெருகி "ஆவியர்" என வழங்கப்பட்டார் என்பதினும் அப் பதுமனுக்கும் முற்பட்ட காலத்தே ஆவி என்ற பெயரொடு ஒருவன் இருந்தனனெனவும், அவன் வழியினரே ஆவியரெனவும், வேளாவிக்கோமான் பதுமனும் வையாவிக்கோப் பெரும்பேகனும் அக் குடியினராவரெனவும் கொள்ளுதல் தகுதியுடைத்தாகும். இங்ஙனமன்றி, வேளாவிக்கோப்பதுமனே ஆவியர்குடி முதல்வனாகிய ஆவி எனக்கொண்டு, அவன் தானிருந்தகாலத்தே தன்வழி பெருகவும் தன்பெயர் சிறக்கவும் நின்றான்--எனக் கூறினும் இழுக்காது. இங்ஙனம், வேளாவி, சேரர்வழியிற் பெண்முறையில் முன்னோனாதல் பற்றிப்போலும், அச் சேரரது தலைநகராகிய வஞ்சிப்புறத்தே
    ----------
    page 37

    வேளாவிக்கோ மாளிகை என்று பிசித்திபெற்ற மந்திரமொன்று அவ் வேளிற்பெயராற் சேரன் செங்குட்டுவன் காலத்தும் விளங்கியது. இதனை--

      " பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
      தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
      வேளா விக்கோ மாளிகை காட்டி" ( கா-28; அ-196-8)

    என்னும் சிலப்பதிகார- அடிகளால் உணர்க. புறநானூற்றில் கருவூர்ப் பக்கத்தில் வேண்மாடமொன்று கூறப்படுதலும் இவ் வேளாவிக்கோ மந்திரமேபோலும்*. மதுரைக்குத் தெற்கே ஒருகாத தூரத்தில், ஆவியூர் என்னும் பெயரில் ஓர் உள்ளது. இதுவும், இவ்வாவியின் பெயராற் பலஊர்கள் வழங்கப்பட்ட செய்தியை வெளிப்படுக்கும்.

      * " சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையொடு வேண்மாடத்து மேலிருந்து உறையூர் ஏணிச்சேரிமுடமோசியார் பாடியது" எனப் புறநானூற்றில் வருதல் காண்க. (13)
    -

    வேள் -- எவ்வி.


    பழைய வேளிர் தலைவருள் எவ்வி என்னும் பெயர்பெற்றவன் ஒருவன். கடைச்சங்கத்தவரான கபிலர் என்னும் புலவர், இருங் கோவேள் என்பவனை "எவ்விதொல்குடி" யைச் சேர்ந்தவனாகக் கூறுவர். வேள் எவ்வியின் நாடு மிழலைக்கூற்றம் என்பதும் இக் கூற்றம் கடற்கரையைச்சார்ந்து, பல ஊர்கள் உடையதென்பதும் 24-ம் புறப்பாட்டில்--

      " முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும்
      தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய
      ஓம்பா வீகை மாவேள் எவ்வி
      புனலம் புதவின் மிழலை"

    எனவரும் அடிகளால் விளங்குவனவாம். இம் மிழலைக் கூற்றத்தில் நீடூர் என்பது எவ்வி்யின் தலைநகரமென்றும் இதனை அடுத்த எவ்வி
    page 38

    நகரம் உறத்தூர் எனவும்-- "யாழிசை மறுகி னீடூர் கிழவோன் - வாய்வா ளெவ்வி ...........உறத்தூர்" என்னும் அகப்பாட்டடிகள் குறிக்கின்றன. தேவாரம்பெற்ற சோணாட்டுச் சிவஸ்தலங்களுள் திருநீடூர் என்பதொன்றுண்டு. மிழலைக்கூற்றத்தே மிழலை எனப் பெயர் வாய்ந்த தனியூர் ஒன்றுண்டென்பதும், அது சிவஸ்தல மென்பதும்* " மிழலைநாட்டுமிழலையே வெண்ணிநாட்டுமிழலையே" என வரும் ஸ்ரீ- ;சுந்தரமூர்த்திகள் தேவாரப்பகுதியால் வெளியாம். (பொது 1239-ம் பக்கம்) மிழலைக்கூற்றம் அல்லது மிழலைநாடென்பது சோணாட்டின் கடற்கரைப் பகுதியாம்போது, நீடூர் மிழலை என்பவை, சிவஸ்தலங்களாகிய திருநீடூரும் திருவீழிமிழலையுமாகக் கொள்ளல் பொருந்துவதாம்.† இம் மிழலைக்கூற்றம் பாண்டிநாட்டின் சில பகுதியையும் முன்பு கொண்டிருந்ததென்பது, திருவாலவாயுடையார் புராணத்தில் திருப்பெருந்துறையைச் சார்ந்த பிரதேசம் மிழலைக் கூற்றத்தைச் சார்ந்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தலால் வெளியாகின்றது.‡ இனி எவ்வியின் மற்றோர் ஊராகிய உறத்தூர் நீடாமங்கலத்தை யடுத்து உள்ளது. ஒருகால், இந்நீடாமங்கலமே நீடூர்ஆயினும் ஆகலாம்.

    இம் மிழலைக்கூற்றத்துக்குத் தலைவனாகிய வேள் எவ்வி அருங்குணங்களும் பெருங்கொடையும் வாய்ந்தவன் என்பது புறநானூற்றில் இவனைப்பற்றியுள்ள பாடல்களால் விளங்குவனவாம்; " ஓம்பா வீகை மாவேள் எவ்வி" என மாங்குடிகிழாரும் (புறம்-24) " இரும்பாணொக்கற் றலைவன்" என வெள்ளெருக்கிலையாரும் (ஷ) புகழ்தல் காண்க. இப்புலவருள் வெள்ளெருக்கிலையார் பாடிய புறப்பாடல் இரண்டால் ஒரு பெரும் போரில் எவ்வி புண்ணுற்று வீழ்ந்த செய்தியும், அவன் அப்போரில் இறந்ததன்பின் அப்புலவர் இரங்கிய

      * இஃது ஆனந்தத்தாண்டவபுரம் ரயில்வேஸ்டேஷனுக்குத் தென்மேற்கில் ஒருமைலில் உள்ளது.
      † சோணாட்டில், பெருவேளூர், கீழ்வேளூர், புள்ளிருக்கும் வேளூர், வேள்குடி எனவழங்கும் தலங்களின் பெயர்களை நோக்குமிடத்தும், வேளிரால் ஆளப்பட்டது அப்பகுதி என்பது புலனாம்.
      ‡ நரி குதிரையாக்கிய திருவிளையாடல். பாட்டு-11. மஹாமஹோபாத்யாயர்: ப்ரும்மஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள் அரும்பதவுரை பார்க்க. பெருமிழலைக் குறும்பர் என்ற நாயனார் இம் மிழலைநாட்டுத் தலைவராவர்.

    -------------
    page 39

    நிலையும் வெளியாகின்றன. எவ்வி பெரும்போரோன்றில் விழுப்புண்ணுற்றான் என்ற வார்த்தை நாடெங்கும் பரவ அதனை, இப்புலவர் விடியற் காலத்தே சிலர் சொல்லக்கேட்டுப் பெரிதும் மனமிரங்கி - "இது பொய்யாகக்கடவது, பொய்யாகக்கடவது; யானைகளைப் பரிசிலர்க்குக் கொடுக்கும் சிறப்பும் வலியுமுடைய அகுதை என்பான்மேற் சக்கரம் பட்டதாகச் சொல்லப்பட்ட வார்த்தைபோல, இதுவும் பொய்யாக வேண்டும்; பெரிய பாண்சுற்றத்துக்கு ஆதாரமாகிய எவ்வியின் மார்பினிடை வேல்தைத்த புண்கள் பலவாயின என்று விடியற்காலத்துச் சொல்லப்பட்ட வார்த்தை" என்னுங் கருத்துப்பட "பொய்யாகியரோ பொய்யாகியரோ" என்ற பாட்டைக்கூறி வருந்தித் தாம் அவ்வள்ளலை நேரிற் கண்டுவர விரைந்து சென்றார். சென்றும் என்? விடியற்காலத்துக் கேள்விப்பட்ட அவ்வார்த்தை பொய்யாகாது மெய்யேயாகியது. வேல் தைத்ததனால் எவ்வி மேலுலகமெய்த அவன் கற்புடை மனைவி நடத்தும் உத்தரகிரியையைக் காணும் துர்பாக்கியமே புலவர்க்குக் கிடைத்தது. அப்போது புலவர் "அந்தோ! வருந்தக்கடவேனோ, யான்; என்வாழ்நாள் இனி மாய்வதாக. பிடியினது அடிபோன்ற சிறிய விடத்தை மெழுகித் தான் விரும்பிய காதலியால் புல்மேல் வைக்கப்பட்ட இனிய சிறுபிண்டத்தை எவ்வாறுண்டான் கொல்லோ, உலகத்தார் யாவரும் புகும்படி திறந்தவாயிலை யுடைய, பலரோடுங் கூடியுண்டலை மருவியவன்" எனத் தம் மாற்றாமை தோன்றக்கூறிப் புலம்பினர். (புறம் - 234)

    வேள் எவ்வியின் வரலாறு இதற்குமேல் அறிய இடமில்லாமற் போனது வியசனிக்கத்தக்கது. இவ்வேள், வேல்தைத்திறக்கும்படி நேர்ந்த பெரும்போர், யாருடன் நடத்தப்பட்டதென்பது விளங்க வில்லை. மாங்குடி கிழார் என்ற புலவர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடுமிடத்தில் -

      ஓம்பா வீகை மாவே ளெவ்வி
      புனலம் புதவின் மிழலையொடு
      * * *
      குப்பை நெல்லின் முத்தூறு தந்த
      கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய (புறம்-24)

    --------------
    page 40

    எனக் கூறுதலால், அப்பாண்டியன் வேள் எவ்வியின் மிழலைக் கூற்றத்தை ஒருகாலத்து வென்றுகொண்டவன் என்று தெரிகிறது.ஆனால், இச்செழியன் சிறிது பிற்காலத்தவனாகத் தெரிதலின், வேள் எவ்வியுடன் போர்நிகழ்த்தி அவனாட்டைக் கொண்டவன் என்று நிச்சயிக்கக்கூடவில்லை. இனி, இந்நெடுஞ்செழியனோடு தலையாலங்கானத்து எதிர்த்தவர், நெடுநிலமன்னர் இருவரும் குறுநிலமன்னர் ஐவருமாவர் என்றும், இவ்வெழுவரில் இருங்கோவேண்மான் என்பவன் ஒருவனென்றும் 36-ம் அகப்பாட்டில் நக்கீரனார் கூறுகின்றார். இவ் விருங்கோ வேண்மானை "எவ்விதொல்குடி" யில் உதித்தவன் என்று கபிலர் என்ற புலவர்பெருமான் கூறுவர். இதனால் நெடுஞ்செழியன் எவ்வியுடனன்றி அவன் வழியினனாகிய இருங்கோவேளுடன் போர்புரிந்திருத்தல் கூடுமென்றும், அப்போரில் அவ்விருங்கோவேள் தன் முன்னோரிடத்திருந்து பெற்ற மிழலைக் கூற்றத்தை இழந்திருத்தல் கூடுமென்றும் கருதலாம். ஆகவே, மேற்குறித்த புறப்பாட்டடியிற் குறித்தபடி, எவ்வியின்மிழலையை நெடுஞ்செழியன் கொண்டான் என்பதற்கு, 'எவ்வி முன்பாட்சி புரிந்தமிழலை' என மிழலைக்கு விசேடணமாக்கிப் பொருள்கொள்ளுதலே பொருத்தமாகத் தோற்றுகின்றது. இவ்வாறன்றி, பாண்டியன் நெடுஞ்செழியன் எவ்வியுடன் நேரிற்பொருது அவனாட்டைக் கொண்டவன் என்றல், ஆராயத்தக்கதாம்.

    இவ் வேள் எவ்வி, அன்னி என்பவனுக்கு நட்பினன் என்பதும் அவ் வன்னி, தன் காவன்மரமாகிய புன்னையைத் திதியன் என்பான் அழிக்கவந்தபோது கடுஞ்சினங்கொண்டு போர்க்கு எழும்ப, அச்சினத்தை ஆற்றவேண்டி அவ்வன்னிக்கு வேள் எவ்வி வேண்டிய நன்மொழி கூறவும் அவன் கேளாமல் திதியனோடு பொருது வீழ்ந்தானென்பதும் 126-ம் அகப்பாட்டால் தெரியவருகின்றன.

    இனிக் கபிலர் என்ற புலவர்பெருமான்;, தம் முயிர்த் தோழனான வேள்-பாரி என்ற வள்ளலை மாற்றரசர் கூடி வஞ்சித்துக்கொன்றபின், அவ்வள்ளலின் மகளிர் இருவரையும் தாமே அழைத்துக் கொண்டு இருங்கோவேள் என்பானிடம் சென்று, அம் மகளிரை மணந்துகொள்ளுமாறு வேண்ட அதனை ஏற்காது அவ்வேள் மறுத்தனன் என்றும், அப்போது புலவர் அவனை நோக்கி,
    ---------
    page 41


      "எவ்வி தொல்குடிப் படீஇயர்; மற்றிவர்
      கைவண் பாரி மகளிர்; என்றவென்
      தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும!"

    எனச் சினந்து கூறினரென்றும் 202-ம் புறப்பாட்டால் தெரிகின்றன. இவ் வடிகளின் உரையிலே,- "இவர் எவ்வியுடைய பழைய குடியிலே படுவார்களாக; பின்னை இவர் கைவண்மையுடைய பாரி மகளிர்" என்றுசொல்லிய எனது தெளியாதபுன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே!" எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. இதனால், 'கைவண்பாரி மகளிராகிய இவர் எவ்விகுடியில் (வாழ்க்கைப்) படுவார்களாக' என்பதே உரைகாரர் கருதிய பொருளாதல் தெரியலாம். ஆகவே, எவ்விதொல்குடியில் உதித்தவன் இருங்கோவேள் என்பது பெறப்படுதல் காண்க. இவ் விருங்கோவேளின் மன்னோர் சிறறரயம் பேரரயம் எனப்பட்ட நகரங்களை ஆண்டவர்களென்பதும், கழாத் தலையார் என்ற நல்லிசைப்புலவரை இவன்முன்னோர் இகழ்ந்ததன் பயனாக, அப் புலவர் பெருமானால் சபிக்கப்பெற்று, அவனூர்கள் மண் மாரியால் அழிந்தனவென்றும்-

      "இருபாற் பெயரிய உருகெழு மூதூர்க்
      கோடிபல வடுக்கிய பொருணுமக் குதவிய
      நீடுநிலை யரையத்துக் கேடுங் கேளினி
      நும்போ லறிவி னுமரு ளொருவன்
      புகழ்ந்த செய்யுட் கழாஅத்தலையை
      இகழ்ந்த தன்பயனே இயறேர் அண்ணல்"

    எனக் கபிலர் பாடுதலால் விளங்குகிறது. (புறம்-202). சோணாட்டில் திருவிடைமருதூரை யடுத்து, அரையகுளமென்றும் கழாத்தலை மேடு என்றுங் கூறப்படும் இடங்கள் உள்ளன வென்றும், பட்டுக் கோட்டைத் தாலூகாவிலும், அரையகுளம் பட்டணக்காடு எனப் பட்டவை யுண்டென்றும், பிற்கூறியது பழையநகரமொன்றின் அழிபாடாகத் தெரிவதென்றும் கேள்விப்படுதலால், முற்கூறிய கதையின் உண்மையை இச்செய்திகள் குறிப்பிக்கின்றன எனலாம்.

    ----------------
    page 42

    வேள் - பேகன்.


    இவன், மேலே தனியாகக் குறித்த ஆவியின் குடியில் உதித்த பெருந்தகையாவன்; இவனை வையாவிக்கோப் பெரும்பேகன் எனவும் வழங்குவர். கடைச்சங்கநாளில் விளங்கிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது "முரசுகடிப்பிகுப்பவும்" என்னும் புறப்ப பாட்டாலும்(158) சிறுபாணாற்றுப் படையில் 84- முதல் 122-வரையுள்ள அடிகளாலும் விளங்கும். இவனது வரையா வள்ளன்மையைப் பரணர் என்னும் பழையபுலவர் புகழுமிடத்து--" குளத்திலும் வயலிலும் களர்நிலத்தும் ஒப்பப்பெய்யும் வரையறையில்லாத மாரிபோலப், பேகனும் கொடையிடத்துத் தான் அறியாமைப் படுவதல்லது, பிறர் படைவந்து பொரும்போது அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்"--என்ற கருத்துப்பட,

      " அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும்
      உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
      வரையா மரபின் மாரி போலக்
      கடாஅ யானைக் கழற்காற் பேகன்
      கொடைமடம் படுத லல்லது
      படைமடம் படாஅன்பிறர் படைமயக் குறினே"

    என அவனது கொடைமடத்தைச் சிறப்பிப்பர். இவனது கொடை மடத்தைப்பற்றிய மற்றொரு செய்தியுமுண்டு; இவ்வள்ளல் ஒருகால் மலைவழியே செல்லும்போது மயிலொன்று தன் சிறகை விரித்து ஆடுவது கண்டு, ' அது குளிருக்காற்றாது வருந்தி நடுங்குகின்றது போலும்' என்று கருதித் தான் மேற்போர்த்திருந்த உயர்ந்த படாத்தை அதன்மேற் சார்த்திச் சென்றான்-- என்பதாம்.இச்செய்தி--

      " உடாஅ போரா ஆகுத லறிந்தும்
      படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
      கடாஅ யானைக் கலிமான் பேக!"

    எனப் பரணரும் (புறம்-141)
    -------
    page 43


      "மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிய
      படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
      கடாஅ யானைக் கலிமான் பேக!"

    என வன்பரணரும் ( ௸ - 145)

      " வானம் வாய்த்த வளமலைக் கவாற்
      கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
      அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
      பெருங்கன் னாடன் பேகன்" (சிறுபாண் - அடி.14 - 7)

    என இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் கூறுதல் காண்க. " முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் - எல்லை நீர் ஞாலத்திசைவிளங்கத் - தொல்லை-- இரவாம லீந்த இறைவர்போ னீயுங் - கரவாம லீகை கடன்" என்புழி ஐயனாரிதனாரும் இச்செய்தியைக் குறித்தார். இவ்வழகிய வரலாற்றால், வேறு பயன் கருதாது உயிர்களிடத்துப் பேகனுக்கு இயல்பாகவேயிருந்த பெருங்கருணைத்திறம் விளங்கும். " எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென – மறுமை நோக்கின்றோ அன்றேபிறர், வறுமை நோக்கின் றவன்கை வண்மையே" என, இவ்வள்ளலை நோக்கிப் பரணர் என்ற புலவர்பெருமான் புகழ்ந்திருத்தலும் ஈண்டு* நோக்கற்பாலது.

    இங்ஙனம் பேகனென்னும் பெருந்தகை வள்ளலுக்கு உரிய மனைவியானவள், கண்ணகியென்ற கற்புடையரசியாவள். இம்மனையாளுடன் இல்லறம் புரிந்துவந்த பேகனது நல் வாழ்க்கையில் திடீரென்று மாறுதல் ஒன்று நிகழ்வதாயிற்று. அந்தோ! கண்ணகி என்னும் பெயர்வாய்ந்த மகளிர்க்கெல்லாம்--தங்கணவர் பரத்தையர் நலம் நுகர்ந்து மகிழ்ந்திருக்கத்-- தாம் தனித்திருந்து அவர் பிரிவாற்றாது வருந்துதலே இயல்பாயிற்றுப் போலும். கோவலனுடைய கற்புடை மனைவியாகிய கண்ணகி என்பாள், இளமையில் தன்கணவன் பரத்தை வயத்தனாய் நின்ற துயரமிக்கு வருந்தியதுபோலவே, இக்கண்ணகிக்கும், தன் கணவனாகிய பேகன் பொதுமகளொருத்தி மோகத்தில் வீழ்ந்தமையால் ஆற்றாமை பெரிதாயிற்று, அருங்குணமும் பெருங்கொடை யுமுடைய இப்பெருந்தகை, இங்ஙனம் பொதுமகள்
    ------
    page 44

    வலைப்பட்டு, தன்னரிய மனைவியைப்பற்றிய சிந்தையேயில்லாது உறைந்தது, விதியின் வலிபோலும். பேகனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த இப்பிரிவுபற்றிய செய்தியானது. அவர்களது இல்வாழ்க்கைக் காலத்தே பெரிதும் உபசரிக்கப் பெற்றுப் பெரும்பயனடைந்த புலவர் பெருமக்களாகிய கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் என்ற சான்றோர்கட்கு எட்டியதும், அப்புலவர்கள் முன் போலக் கண்ணகியும் பேகனும் சேர்ந்துவாழ முயல்வாராயினர். இவர்கள் பேகனையடைந்து, அவன் மனைவி கண்ணகியின் வாழ்க்கையில் இரக்கந்தோன்றக் கூறும் மாட்சி, பெரிதும் வியக்கற்பாலது. இப்புலவரிற் கபிலர் என்ற புலவர்பெருமான் பேகனிடஞ் சென்று அவனை நோக்கி -- "சிறந்த மலைநாடனே! போர்வன்மையும் கொடைத் திறமுமுடைய பேக! நேற்று வழிநடந்து வருந்திய என் சுற்றம் பசித்ததால், உயர்ந்த மலையிடத்துள்ள சிறிய ஊரில் உன்வாயிற் கண்ணே வந்து நின்னையும் நின்மலையையும் வாழ்த்தி யான் பாடி நின்றேனாக, அப்போது துக்கத்துடன் சொரிந்த கண்ணீரையுடையவளாய் அக்கண்ணீர் முலையிடத்தை நனைக்கும்படி பொருமி, வேய்ங்குழல் இரங்கியொலிப்பதுபோல, ஒருத்தி அழுதாள்; இரங்கத்தக்க அன்னாள், யார் கொல்லோ, சொல்க" என்று, அவ்வள்ளலுங் கேட்டிரங்கும்படி கூறினர். இவ்வாறே பரணரும், *அவ்வள்ளளைக்கண்டு, "நேற்றுமாலையில் நின்மழைமிகுந்த காட்டை யாங்கள் பாடிக்கொண்டு வந்தேமாக, நீலமலர்போன்ற கண்களினின்றும் கலங்கி வீழ்ந்த நீர்த்துளிகள், பூணையுடைய தன்மார்பகத்தை நனைக்கும்படி வருந்தி நின்ற ஒருத்தி எம்முன் வந்து தோன்ற, அவளைநோக்கி யாங்கள், 'இளையோய்! எங்களுடைய நட்பை விரும்பும் தலைவனாகிய பேகனுக்கு நீ உறவினையோ' என்று வணங்கிக் கேட்டபோது, அவள், காந்தண் மொட்டுப்போன்ற தன் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு 'நாங்கள் அவனுடைய உறவினர் அல்லேம்; கேளுங்கள், விளங்கிய புகழையுடைய பேகன் எம்மை யொக்கும் ஒருத்தியுடைய அழகைக் காதலித்துத் தன்தேரில் இந்நல்லூரின்கண் அடிக்கடி

      *இவர் பாடியது "அருளாயாகலோ கொடிதே" (புறம்-144) என்பது. "இது,
      கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளைவகைப் பாடாண்பாட்டு" என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருளதி. பக் - 210) ) 

    --------------
    page 45

    வருவன் என்று சொல்லுவர்' என்று கூறினாள்; இஃ்து என்னே! தலைவ! நீ அவட்கு இரங்கி அருள் பண்ணாதிருத்தல் மிகக்கொடியது" " மயிலுக்கிரங்கிப் போர்வையளித்த பெருங்கருணையுடைய பேக! யாம் இப்போது பசித்து நின்பால் வரவில்லை; எம்மாற் றாங்கப்படவேண்டிய சுற்றமும் இப்போது இல்லை; பேரருளாள! நீ அறநெறியில் ஒழுக வேண்டும் என்பதே யாம் இரக்கும் பரிசில்: ஆதலால் நீ உன் தேரில் ஏறிச்சென்று, பார்ப்பதற்கரிய துக்கத்தைக் கொண்ட உன் கற்புடை மனைவியின் சிந்தாகுலத்தைத் தீர்ப்பாயாக" என்றனர். இவ்வாறே, தாம் பரிசில் வேண்டி வரவில்லை யென்றும், நீ அவளைச்சென்று சேர்தலே யாம் வேண்டுவதென்றும்-- அரிசில் கிழாரும், பெருங்குன்றூர் கிழாரும் பேகனைக்கண்டு பாடினர். * இங்ஙனம், அக்காலத்தே தமிழ் நாட்டுப் பெருமக்களாய் விளங்கிய புலவர் வேண்டுகோளுக்குப் பேகன் இன்னது செய்தான் என்பது தெரிந்திலதேனும், வேண்டியோர்க்கு வேண்டியாங்களிக்கும் பெருவள்ளலாகிய அவன், இத்தகைய பெருமக்கள் நெடுந்தூரத்திலிருந்து வந்து தன்பால் வேண்டிய விருப்பத்தை நிறைவேற்றாதிரான் என்றே நம்பலாம்.

    இனி இவ்வேள் - பேகனைப்பாடிய அரிசில்கிழார், வேளாவிக் கோமான் பதுமனுக்கு மகள்வயிற்றுப் பெயரனாகிய, தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையைப் பதிற்றுப்பத்து எட்டாம்பத்தாற் புகழ்ந்துள்ளார். எனவே, வேளாவிக்கோவின் வழியினனாகிய பேகனும், அவ்வாவிக்கோவின் மகள் மகனாகிய பெருஞ்சேரல் இரும்பொறையும் ஒருகாலத்தவராதல் பெறப்படும். ஒருகால், பேகன் வேளாவிக்கோமான் பதுமனுக்கு மகனாகவேனும் அன்றி மகன் மகனாகவேனும் இருத்தலும் கூடும். வையாவிக்கோப் பெரும்பேகன் என்று இவ்வள்ளல் வழங்கப்படுதலால், இவனூர் வையாவிபுரியாகிய ஆவி நன்குடி என்பது தெரிகிறது. இவ்வாவிநன்குடிக்குச் ' சித்தன்
    வாழ்வு' என்பதும் ஒரு பழம்பெயராம். இதனை, " நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன் வாழ் - வில்லந் தொறு மூன்றெரியுடைத்து - நல்லரவப் - பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின் -

      * இப்புலவர்கள் பாடல்களை புறநானூற்றில் 143 - முதல் 147 - வரையுள்ள பாடல்களால் உணர்க.

    ---------------
    page 46

    நாட்டுடைத்து நல்ல தமிழ்" என்னும் ஔவைவாக்கானும் அறிக*, இப்பாட்டாற் சித்தன் வாழ்வாகிய ஆவிநன்குடியில், சங்கநாளில் அந்தணர் மிகுந்திருந்தமை வெளியாம். சித்தன் வாழ்வு என்பது பழநியாண்டவர், கோயில் கொண்டமைபற்றி வந்த பெயர்:"சித்தன் - பிள்ளையாருக்குத் திருநாமம்" என்பர் நச்சினார்க்கினியரும்.

    வேள் - பாரி.


    பழைய வேளிருடைய வரலாறுகளுள்ளே பாரி என்னும் பெருந்தகையின் சரித்திரம், இனிமையும் பெருமையும் இரக்கமுமுடையதாகும். மாரியன்ன வரையா ஈகையால் உலகமுள்ளளவும் ஓங்கு புகழ் நிறுவிய தமிழ் வள்ளல்களில், இவ்வேளிர்தலைவனையே முதல் வனாகச் சொல்லல் தகும். தமிழ் மூவேந்தரும் மற்றைச் சிற்றரசர்களும்போல, இப்பாரி, நாடும் பொருளும் நன்குபடைத்தவனில்லையாயினும், இவனது வள்ளன்மை அவரெல்லாரையும் பெரிதுங் கீழ்ப்பட வைத்தமையால், இவனது பெருமை மலைமேல் விளக்குப்போல் விளங்குவதாயிற்று. இவ்வேளிர் தலைவனது வள்ளன்மையே, கொடைப்பெருமைக்கு ஓர் எல்லைக்கல்லாகப் பிற்காலத்துப் பெரியோர்களுங் குறித்துவைப்பாராயினர். எத்தனையோ வள்ளல்கள் முன்னாளில் விளங்கியிருப்பினும், "கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை" என்னும் அருமைத்திருவாக்காற் குறிக்கப்பட்டவன், இப்பெருந்தகையேயன்றோ. முற்காலத்தே புலவரையும் இரவலரையும் இவன் எவ்வாறு போற்றிவந்தவ னென்பதும், பண்டைச் செந்தமிழ்ப் புலவர் இவனது தடங்கருணையையும் பெருங் கொடையையும் எங்ஙனம் புகழ்ந்துள்ளாரென்பதும், பிறவரலாறுகளும் சங்கநூல்களில் இவ்வள்ளளைப்பற்றிய பாடல்களை நோக்குவார்க்கு நன்கு விளங்கும். அந்நூல்களிலும் பிறவற்றிலும் இவனது வாழ்க்கை பற்றிக் கூறும் வரலாறுகளை, செவ்வனம் ஆராய்ந்து ஸேது

      *திருமுருகாற்றுப்படையுரை; பக் - 27; நச்சினார்க்கினியர், சித்தன் வாழ்வு என்பது ஆவிநன்குடிக்கு ஒரு பெயர் என்றெழுதல் காண்க.

    ---------------
    page 47

    ஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீ: ரா. இராகவையங்கார் அவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகை இரண்டாந் தொகுதியில், ஔவையார், பாரிமகளிர் என்ற வியாசங்களிலே நன்கு விளக்கிக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றை இவ்வியாசத்துக்கேற்ப ஒழுங்குபடுத்திக்கூறிப், பின்பு இவ்வள்ளலைப்பற்றி யாமறிந்த சிலவிசேடங்களையும் எழுதுவேம்.

    " பாரி என்பான், தமிழ்நாட்டிற் பண்டைக்காலத்தே பெரும் புகழ்பெற்றுவிளங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன். செல்வமிக்க முந்நூறு ஊர்களையுடைய பறம்புநாட்டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும்; ' பாரி பறநாட்டுப் பெண்டிரடி' 'பறநாட்டுப் பெருங்கொற்றனார்' என வழங்குவது காண்க. இவன் பறம்பென்னும்பெயருடைய வளமலைக்கண்ணே வலிவுடையதோர் பேரரண் அமைத்து அதனைத் தன் அரசிருக்கையாக்கி அதன்பாற் சிறக்கவீற்றிருந்தோன்; இவனதுமலையரண், பெரிய அழகும் அரிய காவலும் உடையது(நற்றிணை.253) எனவும், பகைவர் முற்றியகாலத்தும் வறங்கூர்ந்தகாலத்தும் தன்னகத்து வாழ்வார் இனிதுண்டு செருக்குதற்குரிய மூங்கில் நெல்லும் பலாப்பழமும் வள்ளிக்கிழங்கும் நறுந்தேனும் தன்பால்மிக்கதெனவும், (புறம்-109) என்றும் வற்றாததும் பேரினிமை பயப்பதுமாகிய குளிர்ந்த நீரையுடைய பைஞ்சுனையொன்று தன்கண் உடையதெனவும்(அகம்-78; குறுந்தொகை-166) சான்றோர் கூறுவர். இப்பறம்பு பாண்டி நாட்டதென்பது, " வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே" என்னும் பாண்டிமண்டலச்சதகச் செய்யுளாற் (94) புலப்படுகிறது. இப்பாரி, ' உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை – வாய் மொழிக் கபிலன்" (அகம்-78) என நல்லிசைப் புலவர்களால் மேம்படுத்தேத்தப்பட்ட கபிலர் என்னும் புலவர் தலைவர்க்கு உயிர்த் தோழனானவன். (புறம்-201.) " புலங் கந்தாக இரவலர் செவினே - வரை புரை களிற்றொடு நன்கல னீயும் - உரைசால் வண்புகழ்ப்பாரி" (அகம்- 303) என ஔவையார் பாடுதலால், இவன் அவராலும் பேரன்பு பாராட்டப்பட்டவனென்று புலனாம். இவன் நிழலில்லாத நீண்ட வழியிற் றனிமரம் போல நின்று, தன்னையடைந்த அறிஞர் மடவர் வலியர் மெலியர் யாவர்க்கும் இன்னருள் சுரந்து, மூவேந்தரினும்
    -----------
    page 48

    மிகுதியாக நன்கு வழங்கிய வள்ளியோன். இவனது பெருங் கொடைக்குக் கபிலர் மாரியினையே பல்லிடத்தும் உவமை கூறுவர்; 'மாரிவண் பாரி' (பதிற்றுப். 71) ,'பாரி யொருவனுமல்லன் – மாரியுமுண்டீண்டுலகு புரப்பதுவே' (புறம் -107) எனவருவனவற்றால் உணர்க. இவன், ஒருநாள் பொற்றேரூர்ந்து ஒருகாட்டிற் செல்லும்போது, முல்லைக்கொடியொன்று படர்தற்குக் கொழுகொம்பின்றி வெற்றிடை யிலெழுந்து காற்றால் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ்வோரறிவுயிர் மாட்டும் உண்டாகிய பேரருளால், அஃது இனிது படருமாறு, தனது பொற்றேரை அதன் பக்கத்திட்டுத் தன் இணையடி சிவப்ப நடந்து போயினன் என்பர். இவ்வரிய பெரிய வள்ளன்மையே-

      "பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
      நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
      கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
      பரந்தோங்கு சிறப்பிற் பாரி" (புறம் - 200)

      "ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்
      முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்
      படுமணி யானைப் பறம்பிற் கோமான்
      நெடுமாப் பாரி." (௸ - 201)

      "சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
      பறம்பிற் கோமான் பாரி" (சிறுபாணாற்றுப்படை)

      "முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
      எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத்-- தொல்லை
      இரவாம லீந்த இறைவர்போல் நீயுங்
      கரவாம லீகை கடன்" (வெண்பாமாலை. பாடாண். - 6)

    என்பனவற்றாற் பாராட்டப்படுவது. தன்னரசிருக்கையாகிய பறம், மலையொழியத் தன்னாட்டு முந்நூறு ஊர்களையும் இவன் இரவலர்க்கே அளித்தனன் என்று கபிலர் கூறுவர்: "முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு - முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்" (புறம் -110) என்பதனால் உணர்க. இவனது வரையாவண்மை "கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங்கொடுப்பாரிலை" (தேவாரம்) என்பதனால்,
    -----------
    page 49

    சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாராலும் எடுத்தாளப்பட்டது என்பதொன்றே இவனது வள்ளற்றலைமையைத் தெள்ளிதிற் புலப்படுத்தும். இங்ஙனம் மாரிபோன்ற வரையாவீகையால், இவன் யாரினும் சிறக்கவிளைத்த பெரும்புகழ்க்கு அழுக்காறுகொண்டு, தமிழ் மூவேந்தரும் ஒருங்குகூடிப் படையெடுத்துப்போய், இவனது பறம்பாகிய மலையரணை நெடுங்காலம் முற்றுகைசெய்ய, அதனால் அவ்வரண் அடைமதிற்பட்டது.* அப்போது வேள்பாரிக்கு உயிர்த்துணைவராய் அக்காலத்தும் அங்கிருந்த கபிலர் என்னும் புலவர்பெருமான் கிளிகளை வளர்த்து விடுத்து அரணுக்கு அப்புறத்தே விளைநிலங்களில் உள்ள நெற்கதிர்களை நாளுங் கொணரச்செய்து, ஆங்கிருந்த குடிபடைகளை அருத்திப், போரால் தளராவண்ணம் பாதுகாத்து வந்தனர்.

      * அடைக்கப்பட்ட மதிலினுள்ளே தங்குதல்

    இவ்வரியகதை--

      "உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
      வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
      செழுஞ்செந் நெல்லின் விளைகதிர் கொண்டு
      நெடுந்தா ளாம்பன் மலரொடு கூட்டி
      யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையாது
      ஆளிடூஉக் கடந்து வாளம ருழக்கி
      ஏந்துகோட் டியானை வேந்த ரோட்டிய
      கடும்பரிப் புரவிக் கைவண் பாரி
      தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
      தேங்கமழ் புதுமலர் நாறுமிவள் நுதலே"

    எனவரும் அகப்பாட்டாலும் (78) "இதனுட் 'கபிலன் சூழ' என்றது - அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து, உணவில்லாமைக் கிளிகளை வளர்த்துக் கதிர்கொண்டு வரவிட்ட கதை" என வரும் அதனுரையாலும் அறியப்படும். இதுவே-

      "உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பி
      னிறைபறைக் குரீஇயினங் காலைப் போகி
      முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு

    --------------
    page 50

      இரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்
      படர்கொண் மாலைப் படர்தந் தாங்கு" (அகம்-303)

    என்பதனால் ஔவையாராலும் எடுத்துக் கூறப்பட்டதாம். பின் கபிலர், பறம்பைமுற்றுய மூவேந்தரையும் நோக்கி, "நீவிர் முத்திறத் தீரும் ஒருங்குகூடித் தானையானை குதிரைமுதலிய படைகொண்டு எத்துணைக்காலம் முற்றிப் பொருதீராயினும், இப்பாரியுடைய பறம்பு உம்மாற் கொள்ளுதல் அரிது; இவனது முந்நூறூரையம் இவன்பாற் பாடிப்பெற்ற பரிசிலர்போல நீவிரும் பாடினராய்வரின், கொள்ளுதல் எளிது" என்று, இவனது புரவலர்க்கருமையும் இரவலர்க்கு எளிமையுமாகிய பெருநிலையைத் தம் இனியபாடலான் அறிவிக்க, (புறம்-110) அதனால் அவ்வேந்தர் இவனை எதிர்த்து வெல்லுதல் அரிதென்பதோர்ந்து இவனோடு பொருதற்கஞ்சி ஓடினர் என்பர். மேலே, "ஏந்து கோட்டி யானை வேந்த ரோட்டிய – கடும் பரிப் புரவிக் கைவண் பாரி" என்றதனால், இவன் அம் மூவேந்தரையும் வென்றோட்டியமை நன்கு புலப்படும். இதன்பின் மூவேந்தரும் ஒருங்குகூடி வேறொரு சூழ்ச்சிசெய்து பாரியை வஞ்சித்துக் கொன்றனர். இதனை 112-ம் புறப்பாட்டுரையில் "ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்து வஞ்சித்துக் கொன்றமையின்" எனவருதலால் அறிக. "பாரியும் பரிசிலர் இரப்பின்-வாரேன் என்னான் அவர்வரை யன்னே" (புறம் -108) எனக் கபிலர் பாரியினியல்பு கூறுதலால், அவ்வேந்தர் மூவரும் இவனியல்புக்குத் தகப் பரிசிலர் வேடம்பூண்டோ, பிறரைப் பரிசிலராக விடுத்தோ இவனை இரந்து தம் -மகப்படுத்திக் கொன்றனராதல் வேண்டும். இக்கருத்து--

      "புரிசைப் புறத்தினிற் சேரனும் சோழனும்* போர்புரிய
      இரியச் சயங்கொண்ட போதினில் யாமினி யீங்கிவனைப்
      பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே
      வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே"

    என்னும் பாண்டிமண்டல சதகச் செய்யுளினும் (64) பயில்வது கண்டுகொள்க.

      * இந்நூலுடையார், பாண்டிமண்டலச் சிறப்பையே கூறிப்போந்தவராதலின், பாண்டியனும் அப்போரில் இரிந்தோடினன் எனக்கூற உடன்பட்டிலர் போலும்.

    -----------
    page 51

    இங்ஙனம், புரவலர்க்கு இன்னானாய், இரவலர்க்கு இனியனாய் விளங்கிய நல்லிசை வள்ளலான வேள்-பாரி, மூவேந்தர் சூழ்ச்சியால் இறந்த பின்னர், அவனுக்கு இன்னுயிர்த்தோழராகிய புலவர் பெருமானான கபிலர், அவ்வள்ளலை நீத்துத் தமித்துயிர்வாழ்தற்கு மனமிலராயினும், அவனுடைய அறிவுடைமகளிரைக் காப்பதற்கு வேறொருவரும் இலராதல்பற்றி உயிர்கொண்டுநின்று, அம்மகளிர்க்குத் தக்க அறிவும் பெருமையுமுடைய கணவரைத் தேடநினைந்து, அவர்களுடன், * அவர்கட்குந் தமக்கும் பேரன்புமிக்க பறம்பினை விட முடியாமலே விடுத்து, அப்பாரியை நினையுந்தோறும் பறம்பினைத் திரும்பி நோக்குந்தோறும் உள்ளம் நெக்குநெக்குருகிக் கண்ணீர் வாரநின்று, ஆற்றொணாத் துயராற் பொங்கியெழுந்த அன்புடைப் பாடல்களால் பாரியையும் பறம்பு மலையையும் புகழ்ந்துகொண்டேசென்று ஓரூரிற்றங்கினர். அங்கு அன்றிரவு நிலாத்தோன்றியபோது அவருடனிருந்த பாரியின் அருமைமகளிர், தாம் இதற்கு முந்திய நிலாக்காலத்தில் தமது அரசுநிலையிட்ட திருவுடைநகர்க்கண்ணே இனிது மகிழ்ந்து விளையாடியதும், அடுத்த நிலாக்காலத்துத் தாம் தந்தை யிழந்து, தண்பறம்பிழந்து, தமியராய்த் †துச்சிலொதுங்கித் துயர்
    கூரநின்றதும் தம்முள்ளத்தே தோன்ற அப்போது, மனமுருகி--

      "அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
      எந்தையு முடையோம், எங்குன்றும் பிறர்கொளார்;
      இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
      வென்றெறி முரசின் வேந்தரெங்
      குன்றுங் கொண்டார்; யாம் எந்தையு மிலமே." (புறம்-112)

    என்னும் பாடலைப் பாடினர். இப்பாடலால், இச்செய்யுள் செய்தற்கு ஒரு மாதத்துக்குமுன், பாரி தன்னரசிருக்கையாகிய பறம்பின் கண்தன் மகளிர் முதலியோருடன் இருந்து வாழ்ந்துவந்தவனென்பது புலப்படும். இப்பாடல் சங்கத்தாராற் றொகுக்கப்பட்ட புறநானூற்றில் ஒன்றாகக் காணப்பட்டவாற்றால், இம்மகளிர் நல்லிசைப் புலவராதல் உணரப்படும்

      * பாரி இறந்தபின், அவன் மனைவியையும் கபிலர் அழைத்துச் சென்றதாக இன்மையால், அவள் தன் கணவனுடன் உயிர்நீத்தனள் போலும்.
      † துச்சில் - பிறர் இருப்பு

    ------------
    page 52

    பாரிமகளிர் இருவர் என்பது மேலே புலப்படுதலின், ஈண்டும் 'பாரிமகளிர் பாடியது' எனப் பொதுப்படக் கூறப்பட்டமை பற்றி, அவ்விருவருமே செந்தமிழ்ப்புலமையாற் சிறந்தவரென்பது தெளிவாகும். புலவரிருவர் சேர்ந்து ஒருபாடல் பாடுவது முன்னை வழக்கே. இம்மகளிரது செந்தமிழ்ப்புலமை, தம்மரும்பெறற் றந்தையாகிய வள்ளற்பாரிக்கு ஆருயிர்த்தோழரான கபிலர் என்னும் புலவர் தலைவர்பாற் பெற்றதாம். இதன்மேற் கபிலர் அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பவனிடஞ்சென்று, இம்மகளிரது உயர் குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து இவர்களை மணஞ் செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட அவனுடம் படாமையால், இருங்கோவேள் என்பானிடஞ் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்து கொள்ள இயையாமையால் மனநொந்து, கபிலர், அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர்பாற்படுத்து, பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர். இதற்கிடையில், கபிலர் செல்வக்கடுங்கோவாழியாதன் என்ற சேரமான்பாற் சென்று, அவனைப் பத்துப்பாடல்களாற் புகழ்ந்துபாடி நூறாயிரங்காணமும் அவன் மலைமேலேறிக் கண்டுகொடுத்த நாடும் அவன்பாற் பெற்றனர் எனத் தெரிகின்றது. இதுவே பதிற்றுப்பத்தினுள் ஏழாம் பத்தாவது. இவர், பாரி இறந்தபின்னேதான், அவனது நற்குண நற்செயல்கள் செல்வக்கடுங்கோ வாழியாதனிடமும் இருப்பனவாகக் கேட்டு அவனைக் காணச்சென்றனராவர். இதனை-

      "பலா அம் பழுத்த பசும்புண் ணரியல்
      வாடை தூக்கும் நாடுகெழு பெருவிறல்
      ஓவத் தன்ன வினைபுனை நல்லிற்
      பாவை யன்ன நல்லோள் கணவன்
      பொன்னி னன்ன பூவிற் பசியிலைப்
      புன்கா லுன்னத்துத் தலைவ னெங்கோப்
      புலர்ந்த சாந்திற் புலரா வீகை
      மலர்ந்த மார்பின் மாரிவண் பாரி

    --------------
    page 53

      முழவுமண் புலரா இரவல ரினைய
      வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
      இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
      ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான்
      அமரா வள்ளியன் என்ன நுவலுநின்
      நல்லிசை தரவந் திசினே"*

    என்னும் பதிற்றுப்பத்தான் (7-ம் பத்து. 1) அறிக. இச்சேரன்பால் இவர் சென்றகாலத்து இப்பாரிமகளிரும் உடனிருந்தனர்போலும். இம்மகளிர் வரலாற்றினைப் புறநானூறு ஒன்றே துணையாகக்கொண்டு ஆராயின், அதன்கண்--

    112-ம் பாட்டு:- இது பாரி மகளிர் பாடியது.

    113:- இஃது அவன் (பாரி) மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக்கொண்டு போவான் பறம்புவிடுத்த கபிலர் பாடியது.

    114-:- அவன் மகளிரைக்கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கியின்று சொல்லியது.

    200:-இது பாரி மகளிரை விச்சிக்கோனுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது.

    201:-இது பாரி மகளிரை இருங்கோ வேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

    202:-இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.

    236:-வேள்-பாரி தூஞ்சியவழி, மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது.

      * "படர்ந்தோன் என்பது முற்று; அளிக்கென என்பது நீ எம்மை அளிப்பாயாக எனச்சொல்லி என்றவாறு; இரக்கு என்பது தன்வினை. எஞ்சிக்கூறேன் என்பது, உண்மையின் எல்லையைக்கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் எ-று. யான், பாரி சேட்புலம் படர்ந்தான்: நீ எம்மை அளிக்க: எனச் சொல்லி, இரக்கவென்றுவந்து சில புகழ்ந்து சொல்கின்றேனும் அல்லேன்; அஃதன்றி யான் உண்மையொழியப் புகழ்ந்து சொல்கின்றேனும் அல்லேன்; ஈத்ததிரங்காமை முதலாகிய பாரி நற்குணங்களை நின்பால் உளவாக உலகஞ் சொல்லும் நின்புகழ் நின்பாலே தரவந்தேன்"- என்பது இவ்வடிகளின் பழைய உரை.

    --------------
    page 54

    என வருவனவற்றால், பாரிமகளிர் ஒரு சிலர் என்பதும், அவர் பாட வல்லவரென்பதும், அப்பாரி இறந்தபின் அவனது தோழராகிய கபிலரென்னும் புலவரந்தணரால் இளவிச்சிக்கோ இருங்கோவேள் என்னும் அரசரிடம் தம்மை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டப் பட்டனரென்பதும், அவ்வரசர் அதற்கு உடம்படாமையாற் கபிலராற் பார்ப்பார் படுக்கப்பட்டன ரென்பதும்.* இவரைப் பார்ப்பார்ப் படுத்தபின் கபிலர் பிரிவாற்றாது வடக்கிருந்தன ரென்பதும் அறியப்படும்

      * கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர் என்பது, அம் மகளிரை அரசரொருவரும் மணஞ்செய்து கொள்ளாமையால்., அவரைத் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாவலில் வைத்தமையே குறிக்குமெனப் பல நியாயங்காட்டி எழுதுவர்- ஸ்ரீ ரா.இராகவையங்கார் அவர்கள்.

    இங்ஙனம், பாரிமகளிரை அரசரெவரும் மணம் புரிந்து கொள்ளாமையால், அவர்களைத் தமக்கு வேண்டிய பார்ப்பார்சிலரது பாதுகாவலில் வைத்துத் தம்முயிர்க்குயிராயிருந்த வள்ளலிறந்ததன்பின் உலத்தே தாம் உயிர்வாழ ஒருப்படாது--" பாரி! நீயும் யானுங்கலந்த நட்பிற்குப்பொருந்த யானும் நின்னுடன் கூடப்போவதற்கு மனமியையாமையால் 'நீ ஈண்டுத் தவிர்க' என்று சொல்லி—இவ்வாறு மாறுபட்டனையாதலின், நினக்கு நான் பொருந்தினவ னல்லேன்; அதனால், நீஎனக்கு உதவிசெய்த காலங்களிலும் என்னை வெறுத்திருந்தனைபோலும்; இங்ஙனமாயினும், இப்பிறப்பின்கண் நீயும் நானுங்கூடி இன்புற்றிருந்தவாறுபோல, மறுபிறப்பினும் நின்னொடுகூடி வாழ்த்லை விதி கூட்டுவதாக" என்ற கருத்துப்பட—

      "மலைகெழு நாட மாவண் பாரி!
      கலந்தகேண்மைக்கொவ்வாய்,நீயெற்
      புலந்தனை யாகுவை புரந்த யாண்டே;
      பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லாது
      ஒருங்கு வரல்விடா தொழிகெனக் கூறி
      இனையை யாதலி, னினக்கு மற்றியான்
      மேவினே னன்மையானே; ஆயினும்
      இம்மைபோலக்காட்டி, உம்மை

    -------------
    page 55

      யிடையில் காட்சி நின்னோடு
      உடனுறை வாக்குக; உயர்ந்ர பாலே"

    என்ற பாடலால் உள்ளமுருகு, பிரயோபவேசஞ் செய்தற்கு வடக்கிருந்து* உயிர் நீத்தனர். இப்பாட்டில், "நட்பிற்கொல்லது-ஒருங்கு வரல்விடா தொழிகெனக் கூறி" என வருதலால், பாரியுடன் தாமும் இறக்கத் துணிந்திருந்த கபிலரை அவ்வள்ளல் தடுத்தவன் என்பது உணரப்படும். இங்ஙனம் கபிலரைத் தடுத்தது, பாரி, தன்மகளிரை இப்புலவரைக் கொண்டு வாழ்க்கைப்படுத்தற்குப்போலும்.

      * வடக்கிருத்தல் என்பது, கிழக்குமுகமாகத் தருப்பைகளைப்பரப்பி வடக்கு நோக்கியிருந்து, தம்முயிர்விடச் செய்துகொள்ளும் ஒரு மஹாவிரதமாம். சங்க காலத்தில் இவ்வழக்கு மிகுதியாக வழங்கியதென்பது, பழையநூல்களால் நன்கறியப்படுகின்றது. இதனைப் 'பிராயோபவேசம்' என்பர் வடநூலார்.

    இவ்வளவே, புறநானூறு முதலிய பழைய நூல்களிற் பாரியின் வரலாறாகக் காணப்படுவன. ஆயினும், பிற்காலத்தவரால் தொகுக்கப் பட்டதும் பலசரித்திர விசேடங்களைக் கொண்டதுமான தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலினின்று, பாரிமகளிர் பார்ப்பார்ப் படுக்கப் பட்டபின் நிகழ்ந்த வேறுசில செய்திகளையும் "ஔவையார்" என்ற வியாசத்தே, ஸேதுசம்ஸ்தான வித்வான் ஸ்ரீ ரா. இராகவையங்கார் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையாவன:- கபிலர், அரசர் ஒருவரும் இயையாமையாற் பாரிமகளிரை மணம்புரிந்து கொடுக்கவியலாமல், அவரைத் தமக்கு வேண்டிய பார்ப்பார் சிலரது பாதுகாவலில் வைத்துவிட்டுத் தாம் வடக்கிருந்து உயிர் நீத்தனர் - என்ற செய்தி, ஔவையார் என்னும் அருந்தமிழ் மூதாட்டிக்குத் தெரியவர, அவர் மேனிகழ்ந்தவற்றுக்கு மனநொந்து, அப்பாரி மகளிர் இருந்த திருக்கோவலூர்க்குச் சென்று, அம்மகளிரைக்கண்டு, அவர்க்கு நேர்ந்த பெருந்துயர்க்கு மிகவும் வருந்தி, மழையால் நனைந்து வந்த தமக்கு அவர்கள் ஒரு நீலச்சிற்றாடை அளிக்க, அப்போது--
    ----------------
    page 56


      "பாரி பறித்த பறியும்* பழையனூர்க்
      காரியன் றீந்த களைக்கோலும்† --சேரமான்
      வாராயோ என்றழைத்த வார்த்தையும்‡ இம்மூன்றும்
      நீலச்சிற் றாடைக்கு நேர்" (தமிழ்நாவலர் சரிதை)

    என்ற அழகிய பாடலைப்பாடி, அன்றிரவு அவர்கள் தமக்கிட்ட இலைக்கறியமுதை உண்டுமகிழ்ந்து--

      " வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்
      நெய்தா னளாவி நிறையிட்டுப்--பொய்யே
      அடகென்று சொல்லி யமுதத்தை யிட்டாள்
      கடகஞ் செறியாதோ கைக்கு" (௸)

      * ஔவையார் பாரிபாற் பரிசில் பெறச் சென்றபோது, அவ்வள்ளல் இவளருமை பெருமையறிந்து இவரைப் பிரிதற்கு இயலாது பரிசில் நீட்டித்தனனாக, இவர் அவனைப் பரிசிலீந்து விடுக்கும்படி வற்புறுத்த, அவ்வேண்டுதலை அவன் மறுத்தற்கியலானாய் வேண்டியவற்றை அளித்து விடுத்தும், இவர் பிரிவாற்றாது தன்பால் இவர் திரும்பிவரச் சூழ்ச்சிசெய்து, இவர்செல்லும் வழியிற் சிலரைப் போக்கித் தன்பாற்பெற்ற பொருள்களைப் பறித்துவரும்படிசெய்ய, அதனால் பெற்ற பரிசில்களையிழந்த ஔவையார், பாரியெண்ணியபடியே மீண்டுவந்து அவ்வள்ளலிடம் நிகழ்ந்ததை அறிவிக்க, அவன் முகத்தால் நொந்து, அவர் மீண்டமைக்கு அகத்தால் உவந்து நெடுங்காலம் அளவளாவிப் பெருமகிழ்வெய்தி, முன்னிலும் மிகுதியாக அரும்பொருள் நல்கி விடுத்தனன்" எனவும்;
      † பழையனூர்க்காரி என்பவனிடம் சென்றிருந்த இவர், அவன்பாற் பரிசில் பெற்று வேற்றூர்போக வெண்ணிக், கொல்லைப்புறத்தே களையெடுக்குமிடத்தில் நின்ற அவன்பாற் சென்றாராக, இவரது உள்ளக்குறிப்பை உணர்ந்த அக்காரி, இவர்பிரிதற்கு உடம்படாது சிலகாலம் தங்கும்படி சூழ்ந்து, அக்களையெடுத்த விடத்தை அளத்தற்குரிய கோலொன்றை இவர்பாற் கொடுத்து இதனை அளந்துவருக என்று கூறி அவன் வேறுதொழில்மேலிட்டுச் செல்ல, இவரும் அங்ஙனமே அளந்து அன்று விடைபெறக்கூடாமையால் பின்னும் அவன்பாற் சிலகாலந் தங்கினார் எனவும்,

      ‡ சேரன் அரண்மனையில், விருந்திற்குவந்த பலருடன் ஔவையாரும் உண்டற்கு இருந்தபோது, ஆங்கு வேறு பெரிய விருந்தினனொருவன் புகுந்தானாக, சேரமான் அவனுண்ணத்தக்க இடம் ஒழிக்க நினைந்து, ஆண்டுள்ள பலரும் வேற்றோராதலின் ஒன்றுஞ்சொல்ல இயலானாய்த், தன் அன்பிற்குரிய பெருந்தமர் இவ்வௌவையாரே-யாயிருந்தபடியால், இவரைநோக்கி ' ஔவையே! வாராய்' என ஆண்டுநின்று வருமாறு அழைக்க, இவர், வந்தவனுக்குத் தம்மிருப்பிடத்தைக் கொடுத்துப் பின் அச்சேரனுடன் உண்டனர்" எனவும் கூறுவர்; இம்மூன்றும் எவ்வாறு பேரன்பேயடியாகப் பிறந்தனவோ, அவ்வாறே நீலச்சிற்றாடை, கொடுத்ததும்: ஆதலின், இவை தம்முள் ஒக்கும் என்றவாறு. இப்பாட்டில், கலனும்' எனவும், 'வாராய் எனவழைத்த வாய்மொழியும்' எனவும் பாடமுண்டு.

    --------------
    page 57

    என்ற வெண்பாவைக் கூறி, அவர்களை நன்னிலையில் நிறுத்துங் கவலையே பெரிதுடையராய், ஆண்டிருந்த தெய்வீகன் என்னும் அரசனொருவனை, இவர்களை மணம் புரியும்படி வேண்டி உடம்படுவித்தனர். அவ்வரசன் உடம்பட்டதும், இத்திருமணத்திற்குத் தாம்பெற்ற தெய்வத்தன்மையால் வேண்டுவன அனைத்தும் உண்டாக்கி, மூவேந்தர்க்கும் பாரிகுடிக்குமுள்ள பகைமையும் போக்கி, அம்மூன்றரசரையும் தம் அறிவின் வலிமையாற் கோவலூர்க்கு வரவழைத்து அப்பாரி மகளிரது பெருமணத்தைச் சிறப்ப இயற்றினர். இவ்வாறு, பாரி மகளிர் மணம் ஔவையாராற் சிறக்க நிகழ்த்தப்பட்டமை அறியப்படுதலால், ' கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தன' ரென்பது, அவர் அம்மகளிரைப் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்தமையையே குறிக்கும். இப்பெருமணத்தில் ஔவையார், பனந்துண்டம் பழந்தரவும், பெண்ணையாறு நெய்பால் தலைப்பெய்து வரவும், வானம் பொன்மாரி பொழியவும் பாடித் தமது தெய்வவாக்கின் வலிமை உணர்த்தினர் என்பர். பெண்ணையாறு இவர் பாடலுக்கு நெய்பால் கொணர்ந்து வந்த கதை, வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாராலும்--

      " ஔவைபா டலுக்கு நறுநெய்பால் பெருகி
      யருந்தமி ழறிவினாற் சிறந்து
      * * *
      தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
      திருமுனைப் பாடிநன் னாடு"

    என எடுத்தாளப்பட்டமை காண்க. மேற்கூறியவற்றை யெல்லாம் தமிழ் நாவலர் சரிதையில்---

      " ஔவையார் அங்கவை சங்கவையைத் தெய்வீகனுக்குக் கல்யாணம்
      பண்ணுவிக்கிறபோது ஓலையெழுத விநாடகனை அழைத்த வெண்பா.

      ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
      கரியுருவக் கங்காளன் செம்மல்--கரிமுகவன்
      கண்ணால வோலை கடிதெழுத வாரானேற்
      றன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

    -------------
    page 58

    சேர சோழ பாண்டியர்க்கு விநாயகனெழுதப் பாடிய வெண்பாக்கள்.

      சேரலர்கோன் சேரல் செழும்பூந் திருக்கோவ
      லூரளவுந் தான்வருக உட்காதே -- பாரிமகள்
      அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்
      சங்கியா தேவருக தான்.

      புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
      தகாதென்று தானங் கிருந்து - நகாதே
      கடுக வருக கடிக்கோவ லூர்க்கு
      விடியல் பதினெட்டா நாள்.

      வையத் துறைவன் மதுரா புரித்தென்னன்
      செய்யத் தகாதென்று தேம்பாதே - தையற்கு
      வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநாள்
      ஈண்டு வருக இயைந்து.

    மூவரும் வந்தபோது பனந்துண்டத்தைப் பாடியது.

      திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனும்
      மங்கைக் கறுகிட *வந்துநின் றார்மணப் பந்தரிலே
      சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்துக்
      கொங்கிற் குறத்தி குவிமுலை போலக் குரும்பைவிட்டு
      நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
      பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.

    அந்தக் கல்யாணத்தில், பெண்ணையாற்றைப் பாடியது.

      முத்தெறியும் பெண்ணை முதுநீ ரதுதவிர்ந்து
      தத்திவரு நெய்பால் தலைப்பெய்து - குத்திச்
      செருமலைத்தெய் வீகன் திருக்கோவ லூர்க்கு
      வருமளவிற் கொண்டாடி வா.
       * அறுகிடுதல் -- ஒருமணவினை.

    --------------
    page 59

    அப்போது வருணனைப் பாடியது.

      "கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும்
      வருணனே மாமலையன் கோவற் -- பெருமணத்து
      நன்மாரி தாழ்க்கொண்ட நன்னீ ரதுதவிர்த்துப்
      பொன்மாரி யாகப் பொழி."

    என வருவனவற்றால் அறியலாம். இவற்றால், அங்கவை சங்கவை யென்பார் பாரிமகளிர் என்பதும், அம்மகளிர் திருக்கோவலூரில் தெய்வீக னென்னும் அரசனுக்கு மணஞ்செய்யப்பட்டனரென்பதும், இம்மணம் ஔவையாரது அறிவின் மாட்சியாலும் தெய்வத்தன்மையாலும் சிறப்ப நிகழ்த்தப்பட்ட தென்பதும், ஔவையார் மூவேந்தரையும் இம் மணத்திற்கு 'உட்காது' 'நகாது' 'செய்யத் தகாதென்று தேம்பாது' வருக என்றழைத்தமையால், பாரிகுடிக்கும் அவ்வேந்தர்க்கும் உண்டாகிய பழைய செற்றம்போக்கி வருக என்றன ரென்பதும், பிறவும் ஆராய்ந்தறியப்படும். மேற்குறித்த பாடலுள் "பாரி மகள் - அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்" என்பது, முன் அரசர் சிலர் இம்மகளிரைக்கொள்ள மனமியையாமை குறிப்பதாம்.

    இனி, வேள் பாரியின் மகளிர் இருவரும், புலவர்பெருமானாகிய கபிலர்பாற் பயின்று வந்ததற் கேற்ப நல்லிசைப்புலமையே யன்றி, வரையா வள்ளியோனாகிய பாரிமகளிர் என்றதற்கேற்ப வள்ளற்றன்மையும் உடையராயிருந்தனரென்பது,

      "மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
      பாரி மடமகள் பாண்மகற்கு -- நீருலையுட்
      பொன்றந்து கொண்டு புகாவாக* நல்கினாள்
      ஒன்றுறா முன்றிலோ வில்."

    என்னும் பழமொழிச் செய்யுளாலும் (171) "மாரியென்ப தொன்றின்றி உலகம் வற்றியிருந்த காலத்தும் பாரிமடமகளிர், இரந்து வந்தானொரு பாண்மகற்குச் சோறுபெறாமையால் உலையுட்
    ----------
    page 60

    பொன்னைப் பெய்துகொண்டு திறந்து சோறாகவே நல்கினாள்; ஆதலால் ஒருதுன்பமுறாத மனையில்லை என்றவாறு. அல்லதூஉம், சோறும் அரிதாகிய காலத்துப் பொன்னே சோறாக உதவினாளாதலால், சென்றிரந்தால் ஒரு பயன்படாத மனையில்லை எ-று." - என்னும் அதன் பழைய உரையாலும் அறியப்படும்.

      * புகா - உணவு. "புகாக்காலைப் புக்கெதிர்ப்பட்டுழி" என்றார் தொல்காப்பியரும்.

    மேற் கூறியவாறு, ஸ்ரீமத்-ரா. இராகவையங்கார் அவர்களால் ஆராய்ச்சியோடு எழுதப்பட்ட பாரிமகளிர் மணச்செய்தியைப் பெரிதும் ஆதரித்து நிற்கும் சாஸனமொன்று 'செந்தமிழ்ப்' பத்திரிகையில் ஸ்ரீமாந் - து. அ. கோபிநாதராயர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது* இற்றைக்குத் தொள்ளாயிரம் ஆண்டுகட்குமுன் சோணாடாண்ட முதல் இராஜராஜசோழன் காலத்தே திருக்கோவலூர் வீரட்டானேச்சுரர் கோயிலின் கர்ப்பக்கிரகத்திற் பொறிக்கப்பட்டதும், அகவல் வடிவில் அமைந்ததுமான அச்சாஸனத்திற் கண்ட திருக்கோவலூர் விசேடங்களுள்ளே, இவ்வியாசத்துக்கு இன்றியமையாத சரித்திரப்பகுதியொன்றும் அடியில்வரும் அழகிய அடிகளிற் காணப்படுகிறது.

      "வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத்
      தென்கரை யுள்ளது; தீர்த்தத் துறையது;
      மொய்வைத் தியலு முத்தமிழ்க் கபிலன்
      மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப்
      பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை
      யலைபுன லழுவத் தந்தரிக்ஷஞ் செல
      மினல்புகும் வீடுபே றெண்ணிக்
      கனல்புகுங் கபிலக் கல்லது, புனல்வளர்
      பேரெட் டான வீரட்டானம்
      அனைத்தினு மநாதி யாயது;"

    * "செந்தமிழ்" தொகுதி-4; பகுதி - 5; பக் - 232

    இவ்வடிகளிலே, கபிலர், தம்பால் அடைக்கலமாக வைக்கப்பட்ட பாரிமகளை மலையனுக்கு மணம்புரிவித்துப் "பசைந்தாரிற் றீர்தலிற் றீப்புகுத னன்று" என்ற மூதுரைப்படி, பெண்ணைநதியின் மத்தியில்
    ------------
    page 61

    வீடுபேறு கருதி அக்கினியிற் பிராயோபலேசஞ்செய்தனர் எனவும்,* அப் புலவர் அங்ஙனம் அக்கினிப் பிரவேசஞ்செய்த கல்லையுடையது வீரட்டானங்களில் அநாதியாகிய திருக்கோவலூர் எனவும் கூறப் பட்டிருத்தல் காணத்தக்கது. இச் சாஸனத்தால், பாரிமகளிர் பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டவர் அல்லரென்பதும், திருக்கோவலூரை ஆண்ட மலையமானுக்கே அவர் மணம் புரிவிக்கப்பட்டனரென்பதும் வெள்ளிடைமலைபோல் விளங்குவன அன்றோ. ஆயின், ஐயங்காரவர்கள் எழுதியவாறு, பாரி மகளிர் திருமணம் ஔவையாரால் நிகழ்த்தப்பட்டதென்று காணப்படாமல், கபிலரால் நிகழ்த்தப் பெற்றதாக இச்சாஸனத்துக் காணப்படுகிறது. இதனால், பாரி மகளிர் இருவருள்ளே மூத்தவளை மலையற்கு மணம்புரிவித்து இளையவளைக் கபிலர் தமக்கு வேண்டிய பார்ப்பார் சிலரது பாதுகாவலில் வைத்து வடக்கிருக்க, அவ் விளையவளைத் தெய்வீகன் என்னும் மலையமானுக்கு ஔவையார் பின்புமணம்புரிவித்தனர் என்று கொள்ளுதல் பொருந்துவதாம். பாரிமகளிர் மணத்தைப்பற்றி ஔவையார் சேரனுக்கு விடுத்தபாடலில் "பாரிமகள் - அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்"† என அவ்விருவர் மணமுங் கூறாது ஒருத்தி செய்தியே கூறப்பட்டிருத்தலும், மேலே குறித்த சாஸனப்பகுதியில் "பாரி தன் னடைக்கலப்-பெண்ணை மலையற்குதவி" என அவ்வாறு ஒருத்தி மணமே கபிலர் நிகழ்த்தியதாகக் கூறப்படுதலும், பாரி மகளிருவர் மணமும் ஒருவரால் நிகழ்த்தப்பட்டதில்லை என்னும் ஊகத்துக்குத் தக்க சான்றாகின்றன. தமிழ்நாவலர்சரிதைக் குறிப்பினும் சாஸனத்துக்கண்ட செய்தியே மதிப்புக்குரிய-தாதலால், அங்கவை சங்கவையிருவர் மணமும் ஔவையாரால் நிகழ்த்தப்பட்டதாக ௸ சரிதைக்குறிப்புக் கூறுவதில், அவ்விருவருள் இளையவள் மணமே அப்பெண் புலவரால் நடத்தப்பட்டதென்று -- மேற்குறித்த சாஸனத்துக் கேற்ப்பக் கொள்ளுதல் பெரிதும் பொருத்தமுடையதாகத் தோற்றுகின்றது.

      * இதனால், கபிலர் வடக்கிருந்தனரென்ற புறநானூற்றுச் செய்தி அக்னியிற் பிராயோபவேசஞ் செய்ததைக் குறித்ததாகக் கொள்ளத்தக்கது.
      † இப் பாடல், பிற்காலத்துத் திரிந்து வழங்கப்பட்டுவருவதில், அங்கவை சங்கவை யிருவர் மணமும் ஔவையார் நடத்தியதாகவே கூறப்பட்டுள்ளது.

    ------------------
    page 62

    இங்ஙனம், பாரிமகளிரது மணநிகழ்ச்சி பழைய பாடல்களிலும் சாஸனத்திலும் தெளிவாகக் கூறசப்பட்டிருக்க, அம் மகளிர், சிங்கள தேசத்தரசனாய் வேற்று வேந்தனால் தன்னாடுகவரப்பட்டுச் சேரனோடு புகுந்திருந்த பாரிசாலனென்பான் மகளிர் எனப் பிறசில வேறுபாடுகளுடன் பின்னூல்களில் வழங்கப்பட்டுள்ளது; இதனை அடியில்வரும் அண்ணாமலைச்சதகச் செய்யுளிற் காண்க.

      "சிங்கள மெனுந்தேய முழுதாளு மன்னவன்
             சிறந்தபேர் பாரி சாலன்
         செய்மெய்த் தவத்தா லுதித்துநற் குணமேவு
             சிறுமியங் கவைசங்கவை
      மங்கையோ ரிருவரை வளர்த்தெடுத் தௌவையார்
             மாமுகக் கணபதி கையான்
         மணவோலை யெழுதிமும் மன்னரைக் கோவலூர்
             வரவழைத் தறுகிடற்கே
      தங்கிய பனந்துண்ட மரமாகி யேபழந்
             தரநதிப் பெண்ணை நெய்பால்
         தான்வரப் பாடியப் பெண்களைத் தெய்விகத்
             தலைவன் மணம்பு ணரவே
      யங்குதவு மௌவைதொழு மைங்கரன் தந்தையே
             யருள்பெறு வசந்த ராயர்
         அண்ணாவி னிற்றுதிசெய் யுண்ணா முலைக்குரிய
             அண்ணா மலைத்தே௶வனே."

    இங்ஙனம், தென்னாட்டில் ஆட்சிபுரிந்த சிற்றரசன் ஒருவனை இன்னுந் தெற்கேயுள்ள சிங்களநாட்டவனென்று வடக்கணுள்ளோர் கொண்டதும், பிற மாறுபாடும் நம் நாட்டுக்குப் புதியனவல்ல. உண்மைக் கதைகள் பிற்காலத்தில் மாறி வழங்குவன இதுபோற் பலவாம். மேற்கூறியவற்றால் வேள் பாரியின் வரலாறு ஒருவாறு உணரத்தக்கது.

    இனி, பாரியுடைய நாடும் மலையும் யாண்டையன? என்பது ஆராயற்பாலது. பாண்டிமண்டல சதகத்தில்--
    ------------
    page 63


      " புரிசைப் புறத்தினிற் சேரனுஞ் சோழனும் போர்புரிய
      இரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப்
      பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே
      வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே"

    என்று கூறப்பட்டிருத்தலால், பாரி பறம்புநாடு பாண்டி மண்டலத்தைச் சார்ந்ததென்பது அறியப்படும். மதுரையிலுள்ள பழைய சிறைக்கூடத்து வடபுறச்சுவரிலுள்ள கல்லெழுத்திலும்* இப்பறம்பு நாட்டைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. இனி, பாண்டிநாட்டுத் திருப்புத்தூர் சிவன்கோயில் தென்மதிலிற் பொறிக்கப்பட்டுள்ள பாண்டியன்- குலசேகரன் சாஸனங்களில்,† " புறமலைநாட்டுப் பொன்னமராவதி-யூருடையான் திருக்கொடுங்குன்றூருடையான்" என வருதலால், புறமலைநாடு என்பதொன்று பாண்டிநாட்டின்கண் இருந்த செய்தியோடு, பொன்னமராவதி, கொடுங்குன்று என்னும் ஊர்கள்‡ அதனுள் அடங்கியிருந்தமையும் தெரியலாம். இப்புறமலைநாடு, பாரியின் 'பறமலைநாடு' எனப்படுவதின் மரூஉப் போலும். இதற்கேற்ப, அப்பக்கத்துக் கொட்டாம்பட்டி மலைப்பகுதியைச் சேர்ந்த கூற்றம் 'பிரமநாடு' என இன்றும் வழங்குகின்றது: இதுவும் ஒருகால் பறம்புநாடு என்பதின் திரிபு போலும்.

    இவ்வூகங்களுக்கு ஏற்பநோக்குமிடத்து, பாரியின் பறம்பு அல்லது பறமலை, கொட்டாம்பட்டி திருப்புத்தூர்ப் பக்கங்களில் உள்ளதொரு மலையாகவே கொள்ளத் தக்கதாம்; ஆயின், இப்போது 'பிரான்மலை' என வழங்குவதையே பாரிமலையாகக் கோடல் பெரிதும் பொருத்த மாமென்க. ஒருதலையாகக் கூறுமிடத்து, இப்பிரான்மலையே பறமலையாகச் சொல்லத் தடையுமில்லையாம். என்னெனில், பாண்டிநாட்டுத் தேவாரம்பெற்ற தலங்களுள் கொடுங்குன்றமென வழங்கும் இம்மலையிற் றிருக்கோயில்கொண்ட சிவபிரானுக்குப் பாரீசுவரமுடையார்

      * இக்கற்கள் வேறோர் இடத்தினின்று பெயர்த்துக் கட்டப்பட்டவை யாதலால், அதன் சாஸனங்கள் பிறழ்ந்து அங்கங்கே காணப்படுகின்றன.
      † இவை, இன்னும் யாவருங் கண்டு வாசிக்கும் நிலையில் உள்ளன.
      ‡ இவ்வூர்கள், திருப்புத்தூர்ப்பக்கத்து உள்ளவை. கொடுங்குன்றம்-பிரான்மலை.

    --------------
    page 64

    என்றொரு திருநாமம் பழைய சாஸனமொன்றில் உள்ளதென்று தெரிகிறது*. இதனால், அத்திருப்பதிக்குப் 'பாரீசுவரம்' என்றபெயரும் முன்னாளுல் வழங்கிவந்தமை விளங்கும். பாரீசுவரர்க்குரிய தலம்- பாரீசுவரம்; பாரீசுவரர் என்பதற்குப் பாரி என்பானுக்கு அநுக்ரகம் புரிந்த ஈசுவரர்; அல்லது பாரி பூசித்த ஈசுவரர் என்பன பொருளாகும்; இராமேசுவரம், நாகேசுவரம், பட்டீசுவரம் என்பவற்றுக்கும் இராமன், ஐந்தலைநாகம், பட்டி என்பாள்-இவர்கட்கு அருள்செய்த அல்லது இவர்கள் பூசித்த தலமென்பதே பொருளாமாறு காண்க. ஆகவே, பாரியின் பறமலை இன்னதென்பது இப்போது வெள்ளிடை மலையாயிற்றாம். இப்பறம்புமலை 'பிரான்மலை' என இக்காலத்து வழங்குவதாயினும், அதன் பழையபெயர் கொடுங்குன்றம் என்பதாகவே தெரிகின்றது. இதனால், 'பாரிமலை' அல்லது 'பறமலை' என்பதையே, (சிவபிரான்மலை எனப் பொருள்கொண்ட) பிரான்மலை எனப் பிற்காலத்தார் வழங்கினரோ எனவும் கொள்ளக்-கிடக்கின்றது. இது, வளைந்த குன்றமாதலின் கொடுங்குன்றமென்னும் பெயர் பெற்றது. பழைய சங்கநூல்களிற் கூறப்பட்டவாறே, இம்மலை வளமும் பெருமையும் வாய்ந்திருத்தலோடு, சிதைவற்ற பழைய அரணும் இனிய நீர்ச்சுனைகளும் தேன்மிகுதியுங்கொண்டு, பாண்டிநாட்டின் கீழ்ப்பக்கத்துக்குரிய பெருமலையாக விளங்குகின்றது. இப்பறமலையின் தொடர்ச்சியாகவுள்ள மற்றொருபகுதி "துவராபதி நாடு" என இக்காலத்தும் வழங்கிவருதல் பழையவேளிர் இப்பக்கத்தே ஆட்சி புரிந்தவர் என்பதைக் குறிப்பிக்கின்றது. † இதற்கேற்ப, பிரான்மலையிலும் அதனையடுத்த சில இடங்களிலும் வேளாள வகுப்பினரின் "வேளார்" என்னுங் குடிப்பெயர்பெற்ற சிறு கூட்டத்தார் இன்றும் வசித்துவருதல் கவனிக்கற்பாலது. இவற்றால், பாரியது நாடும் மலையும் நன்கு விளங்குமாறு கண்டுகொள்க.

      * இச்செய்தியை எனக்கு அன்புடனறிவித்தவர், திருவனந்தபுரம் சிலாசாஸன அத்யக்ஷரும் என்னண்பருமான ஸ்ரீமாந்-து. அ. கோபிநாதராயர் அவர்கள் M.A., இவர்கள் அச்சாஸனமுள்ள இடத்தையுங் குறித்தனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
      + துவராபதி, வேளிருடைய ஆதிநாதர் என்பது இவ்வியாசத் தொடக்கத்தே விளக்கப்-பட்டது. துவரங்குறிச்சி என்னும் ஊரும் இப்பக்கத்துண்டு.
    -
    -----------
    page 65

    நன்னன் வேண்மான்

    நன்னன் வேண்மான் என்பவன், சங்கநாளிலே தமிழகத்திற் பெருவள்ளலாக விளங்கிய ஒரு சிற்றரசன். இவன் வேளிர் குலத்தைச் சேர்ந்தவனென்பது, இவனுக்கு வழங்கும் 'வேண்மான்' (அகம்-97.)'வேள்'(மலைபடுகடாம்-94.) என்னும் அடைகளால் விளங்குகின்றது. வேண்மான்-வேளிர் தலைவன்.* சங்கநூல்களிலே, நன்னன் என்னும் பெயருடையாரிருவர் காணப்படுகின்றனர். இவரிலொருவன் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மலைபடுகடாம் கொண்டவன். அப் பாட்டியற்றிய இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்க் கௌசிகனார் தாம் பாடிய வேண்மானை நன்னன் சேய் நன்னன் என்று (மலைபடு-அடி-64.) கூறுதலால், மற்றவனாகிய நன்னன் இவ்வேண்மானுடைய தந்தையென்று தெரிகின்றது. இவ்விருவருள் மகனாகிய நன்னனே புலவர் புகழ்ச்சிக்கு இலக்காக விளங்கியவன். இவனை 'நன்னன் ஆய்' எனவும் வழங்குவர் (அகம்-356) . பத்துப்பாட்டில் இந்நன்னற்குப் 'பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்துவேள்" (பத்துப்பாட்டு-பக்-372) என்னும் அடை கொடுக்கப்பட்டிருத்தலால், இவன்நாடு †பல்குன்றக்கோட்டமென்னும் பெயர் கொண்டதென்பதும், இவன் தலைநகர் செங்கண்மா என்பதும் வெளியாகின்றன.‡ இவன் மலைநாடு ஏழிற்குன்றம் (அகம்-152, 359) எனவும் வழங்கும். அஃது ஏழு மலைப்பகுதிகளைகே கொண்டிருந்தமையால் அப்பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. பல்குன்றக்கோட்டம்

      * தொண்டைமான், கோமான் என்பவற்றிற்போல, 'மான்' விகுதி தலைமைச் சிறப்புணர்த்துவது. வேண்மான் என்பதன் பெண்பால் வேண்மாள் என்பது; இளங்கோவேண்மாள், வேண்மாள் அந்துவஞ்செள்ளை எனச் சிலப்பதிகாரத்தும் பதிற்றுப்பத்தினும் முறையே பயின்றுள்ளமை காண்க.
      † இக்கோட்டம் பிற்காலத்துச் சாஸனங்களிலும், கூறப்படுகிறது. " மண்டைக் குலநாட்டு முருகமங்கலப்பற்று" இக்கோட்டத்தைச் சார்ந்ததாம். ( South Indian Inscriptions. Vol.I. p.102--5.)
      ‡ இப்பெயரே இன்றும் வழங்குவது; பிற்காலத்தே ஆங்கிலேயர்க்கும் ஐதர் ஆலிக்கும் போர்நிகழ்ந்த களமாகிய செங்கண்மா இதுவே.

    -------------
    page 66

    என்னும் பெயர் வழக்கின் காரணமும் இதுவேயாதல்வேண்டும். இவ்வெழு மலைகளிலிலே-பாழிச்சிலம்பு (அகம்-152) நவிரம் (மலைபடு-579) என்ற இரண்டே இப்போது தெரிவன. நன்னனாட்டில்,பாழி (அகம்-208,258,375) பாரம் (௸152) பிரம்பு (௸-356) வியலூர் (௸-97)என்ற ஊர்களும், சேயாறு (மலைபடு-474) என்னும் நதியும் இருந்தனவென்பது முன்னூல்களால் அறியப்படுகிறது. இவனது பாழிச்சிலம்பிற் பழையவேளிரால் மிகுக்கப்பட்ட பொற்குவியல் பெரிதும் உண்டென்பர் பரணர்.(257) இவனாண்ட பல்குன்றக்கோட்டநாடு,இப்போது வடஆர்க்காடு, தென்னார்க்காடு 'ஜில்லா'க்களில் அடங்கியுள்ளதாகும்.* நன்னன‌து நவிரமென்னும்† மலைமேல் 'காரியுண்டிக் கடவுள்' எனப்பெற்ற சிவபிரான் கோயிலொன்றுண்டு என்பர். (மலைபடு -74)அகநானூற்றிற் "பாடுநர் செலினே-அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை-சூழாது சுரக்கும் நன்னன்" (349)" இசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்ப்-பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" (152) என இவன் புகழப் படுதலோடு, மலைபடுகடாத்தில் அடியிற் வருமாறும் சிறப்பிக்கப் படுகின்றான்.

      * புறநானூற்றுப் பதிப்பிறுதியிலுள்ள ஸ்ரீ வெங்கையர் அவ‌ர்கள் குறிப்புப் பார்க்க.
      † இஃது அண்ணாமலை போலும்? 


      "வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
      நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு
      தொலையா நல்லிசை யுலகமொடு நிற்பப்
      பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப்
      புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியும்
      இகழுநர்ப் பிணிக்கு மாற்றலும் புகழுநர்க்
      கரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு
      தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
      வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையும்
      நல்லோர் குழீஇய நாநவி லவயத்து
      வல்லாரா யினும்புற மறைத்துச்சென் றோரைச்

    ------------
    page 67

      சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
      நல்லிதி னியக்குமவன் சுற்றத் தொழுக்கமும்
      பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரும்
      ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும்
      கேளினி வேளைநீ முன்னிய திசையே."

    எனக் காண்க. மதுரைக்காஞ்சியில்,மதுரையில் நிகழும் பலவகை உவகை ஆரவாரங்களைப்பற்றிக் கூறும்போது,மாங்குடி மருதனார் என்ற புலவர்,"பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்-சேரி விழவினார்ப் பெழுந்தாங்கு" (அடி-610,619) என்று உவமிக்கின்றார்; இதனாற் செங்கண்மாவில் நன்னன்வேண்மானது பிறந்த நாட் கொண்டாட்டம் தமிழகமெங்கும் புகழத்தக்க சிறப்புடன் நடைபெற்று வந்தமை விளங்கும். இக் கொண்டாட்டநாள் "நன்னனாள்' என்ற பெயர் பெற்றது என்பர் நச்சினார்க்கினியர். (பத்துப்-பக்-225) இந் நன்னன்,சேரமானது படைத் தலைமை வகிக்கும் கௌரவமும் பெற்றிருந்தான். (44-ம் அகப்பாட்டுரை) "ந‌ன்ன னுதியன் அருங்கடிப் பாழி" (அகம்-258) என வருதலால், சேரனைச் சார்ந்திருந்தமை பற்றி உதியன் என்ற பெயரும் இவனுக்கு வழங்கியது போலும்.* இந் நன்னனுக்கு 'வானவிறல்வேள்' † என்ற சிறப்புப் பெயரொன்றும் மலைபடுகடாத்திற் கூறப்பட்டுள்ளது. (அடி-145) இத்தொடர்மொழியே மதுரைக்காஞ்சியில் அழும்பில்வேள் என்பானுக்கும் வழங்குவதாம். (அடி-344-5) இவ் வேளும் சேரமானது கருமத் தலைவரில் ஒருவனாவான்.(சிலப்-27-205) இவ்வாறு சேரரது அரசிய‌லில் தலைமை வகித்த சிலர்க்கு 'வானவிறல்வேள்' என்னும் சிறப்புப் பெயர் வழங்குதலை நோக்கும்போது, அது,'வானவனது வெற்றிக்குரிய வேள்' என்ற பொருளில் வந்த தொடராதல் வேண்டும் என்று கருத இடந்தருகின்றது.(வானவன்- சேரன்) இவ்வாறாயின், வானவன் விறல் வேள் என்பது வானவிறல்வேள் என்று மருவியதாக‌ல் வேண்டும். இனி, இந்ந‌ன்னன்வேண்மான் பிண்டன் என்பானோடு
    -

      *அரசரைச் சார்ந்த படைத்தலைவர்முதலியோர் அவ்வரசர் பெயரே புனைதல் முன்னை வழக்கு.
      † இது மானவிறல்வேள் எனத் திரிந்தும் வழங்கும்.


    ---------------
    page 68

    பொருத பெரும் போரொன்றில் வெற்றிபெற்றவன் என்று புகழப்பட்டுள்ளான்.(அகம்-152).

    இனி, நன்னன் வேண்மானுடைய தந்தையாகிய நன்னன் கொடுங்கோல-னென்றும் கல்வியருமை அறியாதவனென்றும் அதுபற்றிப் புலவரை வெறுத்து வந்தவனென்றுந் தெரிகின்றன. இவனது கொடுங்கோன்மையைக் காட்டுங் கதையொன்றும் பரணர் என்னும் பழைய புலவராற் குறிக்கப்பட்டுள்ளது.இந்நன்னனது சோலையிலே இவன் தின்று மகிழ்தற்கென்றே வைத்துவளர்க்கப்பட்ட ஒரு மரத்தின் இனிய காயொன்று அச்சோலைப்பக்கத்தோடும் ஆற்றில் வீழ்ந்து அயலதாகிய துறையில் ஒதுங்க, ஆங்குக் குளித்தற்பொருட்டு வந்த சிறுமியொருத்தி அங்ஙன-மொதுங்கிய காயை அறியாதெடுத்துத் தின்றனள். இச்செய்தியைச் சோலைகாவலரால் அறிந்த இந்நன்னன் பெருஞ்சினங் கொண்டவனாய்த், தான் தின்னுதற்குரிய காயை அப்பெண்ணெடுத்துத் தின்று விட்டதின் பொருட்டு, அவளைக் கொலை புரிந்துவிடும்படி கட்டளையிட்டனன்.இச்செய்தியறிந்த அப்பெண்ணின் தந்தை,தன் அருமைமகளுக்கு அறியாமையால் நேர்ந்த விபத்தையெண்ணிக் கலங்கி,நன்னனிடம் நேரிற் சென்று "அரசே! என்மகள் தமக்குரிய காயென்று அறிந்துவைத்து அதனைத் தின்றவளல்லள்; அறியாது செய்த இப்பிழையைப் பொருத்தருளல் வேண்டும். அவள் புரிந்த இத்தவற்றுக்காக, எண்பத்தொரு யானைகளும் அவள் நிறையளவு பொன்னாற்செய்த பாவையொன்றும் யான் ஈடுதர வல்லேன்; அவட்கு விதித்த இக்கொலைத்தண்டனையைமட்டும் நீக்கியருள்க" எனப் பலவாறாக மன்றாடினான். எவ்வளவு மன்றாடியும் என்?அக்கொடுங்கோல் நன்னன், அறத்தை நோக்கானாய் உள்ளீரஞ் சிறிதுமில்லானாய் அச்சிறுபெண்ணைக் கொலை புரிந்தே தன் சினந்தீர்ந்தனன்" என்பதாம். இதனை-

      "மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
      புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
      ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள்நிறை
      பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
      பெண்கொலை புரிந்த நன்னன் போல
      வரையா நிரையத்துச் செலீயரோ"


    ------------
    page 69

    எனக் குறுந்தொகையில் வரும் பரணர்பாடலால் அறிக. (292) நன்னனுடைய கொடுங்கோலும் அறிவீனமும் இத்தன்மையன என்பது, சங்கநாளில்வழங்கிய இச்சரிதையால் நன்குவிளங்குகின்றது. "பண்டும் பண்டும் பாடுந ருவப்ப" என்ற புறப்பாட்டில் அதனுரை காரரும் இக்கதையைக் குறித்துள்ளார். " அறிவார் யார், நல்லாள் பிறக்குங் குடி" என்றவாறு, இக்கொடியோனுக்கு நற்குணமே திரண்ட நன்னன் - வேண்மான் பிறந்தனன். பண்டைக்கால வழக்கப்படி தந்தைபெயரையும் உடனிழைத்து " நன்னன் சேய் நன்னன்" என இவ்வேண்மானை முன்னோர் வழங்கினராயினும், அத்தீய தந்தை பெயரை விலக்கியொழியாது இவனுடன் இணைத்தது, " கள்ளி வயிற்றி னகில் பிறக்கும்" என்னும் முதுமொழியை உலகோர்க்கு மெய்ப்பித்ததற்குப் போலும். இங்ஙனம் உலகங்கூறும் பழிச்சொற்கு இலக்காய் நின்ற நன்னன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்ற சேரவரசனுடைய நாட்டைக் கவர்ந்தாண்டு வந்தமையால், (அகம்-199) பிற்காலத்தே அச்சேரனால் தன் செற்றநீங்க, வாகைப் பெருந்துறை என்றவிடத்துநடந்த பெரும்போரிற் கொல்லப்பட்டு இறந்தொழிந்தான். இவன் ஒழிந்தபின், இவன் மகனாகிய நன்னன்- வேண்மான் பல்குன்றக்கோட்டத்தைத் தன் செங்கோலால் நாளும் மகிழ்விப்பானாயினன். தன் தந்தை சேரனுடன் பகைத்திறந்தனனாயினும், இந்நன்னன் அவனுடன் நட்புக் கொண்டிருந்ததோடு முற்கூறியவாறு அச்சேரன் படைத்தலைமையும் பூண்டனன். ( இவன் தந்தையே சேரன்படைத்தலைவன் எனின், அவன் தன்னரசனுடன் போர் புரிந்தானாதல் வேண்டும். ஆயின், யஜமானத் துரோகமும் அவன் செய்தவன் ஆவன்.) இந்நன்னன் வேண்மான், தன் பந்துவோ படைத்தலைவனோ ஆகிய ஆய்-எயினன் என்பான் மிஞிலி என்பானோடு புரிந்த பெரும்போரில் இறந்தொழிய, அதற்காற்றாது பெருஞ்சினங் கொண்டு பகைவரை வேரோடு அழித்தானென்று 208-ம் அகப்பாட்டு அறிவிக்கின்றது.

    இனி, நன்னனுக்கு மகனாகிய நன்னன் பெருவள்ளலாய்ப் புலவர் புகழ்ச்சிக்கு உரியவனாக விளங்கினும், இவன் தந்தை புரிந்த தீச்செய்கைகளை இவனற் செய்கைகள் பிற்காலத்து மறைத்துவிட்டன வாகவில்லை. தந்தை நன்னன் பெண்கொலை புரிந்த பெரும்பழி

    -----------
    page 70

    மட்டும் உடையனல்லன். அவன் கல்வியருமை யறியாத கசடனுமாதலால், தன்பாற் பரிசில்பெறவேண்டிவரும் நல்லிசைப் புலவரை யெல்லாம் வெறுத்து, அவர் தன்பால்வாராமல் தன் வாயிற்கதவை அடைத்து வந்தான். இஃது, அக்காலத்து விளங்கிய புலவர்களுக்கெல்லாம் பெருவியப்பும் பெருங்கோபமு மூட்டியதோடு, அவன்மேல் வசை பாடவும் அவர்களைத் தூண்டியது. நல்லிசைப் புலவராகிய ஔவையார், ஒருகாற் பல்குன்றக்கோட்டமெனப்படும் ஏழிற்குன்றம் சென்றிருந்த போது, இந்நன்னன் அம்மூதாட்டியின் அருமை பெருமைகளை அறிந்து உபசரியாது உதாசீனனாயிருக்க, அதனைப் பொறுக்கலாற்றாத அம்மெல்லியற் புலவர்--

      " இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே
      குருடேயு மன்றுநின் குற்றம்--மருடேயும்*
      பாட்டு முரையும் பயிலா தனவிரண்
      டோட்டைச் செவியு முள."

    என அவனை முனிந்து பாடினர். † [மகனாகிய நன்னன் புலவர் புகழ்ச்சிக்கு உரியவனாகலின், இப்பாட்டில் வரும் ' ஏழிலார்கோவே' என்பது,தந்தையாகிய நன்னனையேகுறிக்கும்;அவனே ஔவையார் காலத்துக்கு ஏற்றவனும் தீச்செயலுமுடையவனுமாதலால்.] தொல்காப்பியச் செய்யுளியலுரையிற் குறிப்பில்லாமலும், தமிழ் நாவலர் சரிதையில் " ஔவையார் ஒருவனைப்பாடி அவனிகழ்ச்சி சொல்ல, அப்போது பாடிய அங்கதம்" என்னும் குறிப்புடனும் அடியில் வரும் அகவலொன்று காணப்படுகின்றது:--
    --------
      * ' மருடீர்ந்த' எனவும் பாடம்.
      † தொல் - பொருளதிகாரம், பக்-686; ‡ தமிழ்நாவலர் சரிதை.

      ‡ " எம்மிக ழாதவர் தம்மிக ழாரே
      எம்மிகழ் வோரே தம்மிகழ் வோரே
      எம்புக ழிகழ்வோர் தம்புக ழிகழ்வோர்
      பாரி யோரி நள்ளி யெழினி
      ஆஅய் பேகன் பெருந்தோண் மலையனென

    ---------------
    page 71

      ‡ நின்னை நோவ தெவனோ [வுலவா
      தட்டார்க் குதவாக்]கட்டி போல‌
      நீயு முளையே நின்னன் னார்க்கே
      யானு முளனே தீம்பா லோர்க்கே
      குருகினும் வெளியோய் தேத்துப்
      பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே."

    இப் பாட்டும், ('எழுவரு ளொருவனுமல்லை' என்பதனால்) அந் நன்னனையே ஔவையார் பாடியது போலும். பிற்காலத்திலும் புலவர்கள் இத் தீயநன்னன் செய்கைகளை மறந்தவரல்லர் என்பதை அடியில் வரும் வரலாறொன்றும் காட்டத்தக்கதாம். ஒருநாள் இளங்கண்டீரக்கோ என்னும் அரசகுமாரனும், இந்நன்னன் வழியில்வந்த இளவிச்சிக்கோ என்பானும் ஓரிடத்துச் சேர்ந்திருந்தபோது, ஆங்குச் சென்ற பெருந்தலைச்சாத்தனார் என்னும் நல்லிசைப் புலவர், முன்னவனைத் தழுவி மரியாதைசெய்து, பின்னவனாகிய இளவிச்சிக்கோவை அவ்வாறு மரியாதை செய்யாதொழிய, அஃதுணர்ந்த இளவிச்சிக்கோ 'என்னை நீவீர் புல்லாமைக்குக் காரணமென்னை?' என்று புலவரைக் கேட்பவும்,அவர், "இவன்-பெண்டிரும் தம் தரத்தினின்று பரிசிலர்க்கு யானைக் கொடையளிக்கும் கண்டீரக்கோன்:* ஆதலால் அவனைத் தழுவினேன்;நீயும்-ந‌ன்னன் மரபிலுதித்த பெருமையுடைமையோடு இயற்கை நற்குணங்களுமுடையையாதலால் என்னாற் றழுவற்கு உரியவனேயாயினும்,நின் முன்னோன் பரிசில் வேண்டிச் சென்ற புலவர்க்குத் தன் வாயிற்கதவை அடைத்துவந்த கொடுமைபற்றி நும்மலையை எம்மவர்பாடி மரியாதை புரிதல் தவிர்ந்தார்" என்றனர். இதனை-

      ‡ இதனுள் அட‌ங்கிய எழுத்துக்கள் பிரதிகளிலே பலபடியாக வேறுபட்டிருப்பினும், உற்று நோக்கி ஒருவாறு அமைக்கப்பட்டன; ஆயினும், உண்மைப் பாடம் இன்னதென்று துணியக் கூடவில்லை.
      *கண்டீரக்கோ,கண்டிற்கோ எனவும் வழங்கும்.(புற-பக்-143) இப்பெயர்கள் வள்ளலாகிய நள்ளிக்கு உரியவை. இவ்விளங்கண்டீரக்கோ, அந்நள்ளியின் மரபினனாதல் வேண்டும். 


    -------------
    page 72


      "பெண்டிரும் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க்
      கண்டீரக்கோ னாதலின், நன்று
      முயங்க லான்றிசின் யானே; பொலந்தேர்
      நன்னன் மருக னன்றியும், நீயும்
      முயங்கற் கொத்தனை மன்னே; வயங்குமொழிப்
      பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை
      யணங்குசா லடுக்கம் பொழியுநும்
      மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே."

    எனவரும் புறப்பாட்டடிகளால் உணர்க. இவ் வடிகளிலே 'நன்னன் மருகனன்றியும்' என்பதிற் கூறப்படும் நன்னன் என்பான் நற்குணமிக்க மகனாகிய நன்னனும், 'பாடுநர்க் கடைத்த கதவி' னையுடையவன், தந்தையாகிய நன்னனும் ஆதல் வேண்டும். இவ்விருவர் வழியிலும் இளவச்சிரக்கோ அல்லது இளவிச்சிக்கோ என்னும் அரசிளங்குமரன் உதித்தவன் என்பது, இப்பாட்டின் குறிப்பால் விளங்கத் தக்கது.

    இனி, ஆசிரியர் - நச்சினார்க்கினியர் மலைபடுகடாத்துவரும் 'தீயினன்ன வொண்செங் காந்தள்' என்னும் அடியின் விசேடவுரையிலே "இதற்கு, 'நன்னனென்னும் பெயர் தீயோடு அடுத்தமையின் ஆனந்தமாய்ப் பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தார்' என்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங் கூறினாரால் எனின்;- அவர் அறியாது கூறினார்" என்று தொடங்கிப் பிறரொருவர் கூற்றை மறுத்துக் கூறுவர்; 'தீயினன்ன' என்ற தொடரில் ஆனந்தக் குற்றமில்லை என்பது நச்சினார்க்கினியர் மறுப்பாயினும், நன்னனும் அவனை 'மலைபடுகடாத்'தாற் புகழ்ந்துபாடிய கௌசிகனாரும் ஒருங்கிறந்தவர்கள் என்ற பிறர் கூற்றை அவ்வுரையாளர் மறுத்திலர்; இதனால், அவ்விருவரும் ஏதோ ஒருகாரணத்தால் ஒருகாலத்தே உயிர்நீத்தவர்கள் என்பது உய்த்துணரப் படுகிறது.

    இனி, நன்னனது குலவரலாற்றைக் குறித்தும் சிறிது ஆராய்வோம். இவன் வேளிர் மரபைச் சேர்ந்தவன் என்பது மேலே பெறப் பட்டது. வேளிர் எனப்பட்டவரில் பண்டைச் சளுக்கியரும் ஒருவர்

    ---------------
    page 73

    என்பதை அவர் வரலாறு கூறுமிடத்து விளக்கியுள்ளேன்*. ஆனால், இந்நன்னன்குலத்தை சளுக்கியர் மரபென்பதிலும், அவரது சகோதர வகுப்பினராகிய கடம்பர் †மரபென்றல் பொருத்தமாகத் தெரிகிறது. ஆதி சரித்திரத்தை ஆராய்வோமாயின், சளுக்கருங் கடம்பரும் ஒருகுலத்தவரென்பது நன்கு விளங்கும்; தம்மைப் பிறப்பித்த முனிவரிடத்திலிருந்து பெற்ற " ஆரீதிபுத்திரர்" என்ற குலப்பெயரும், மானவ்ய கோத்தரமும் முருகக்கடவுளைத் தங்குல தெய்வமாகக் கொண்டமையும் சளுக்கர்க்கும் கடம்பர்க்கும் வித்தியாசமின்றியே காணப்படுவனவாம். இவருட் கடம்பர், தம்மிருக்கைக்குப் பக்கத்தே ( தங்குலதெய்வமாகிய முருகக்கடவுட்குரியது பற்றிப் போலும்.) கடம்ப மரமொன்றை வளர்த்து அதனைப் பெரிதும் போற்றி வந்ததனால் அப்பெயர் பெறலாயினர். ‡ இவ்வாறு கடம்பமரத்தை வளர்த்துப் போற்றிவந்த வேளிர்வகுப்பார், சங்ககாலத்தில், இந்நன்னன் வழியினராகவே காணப்படுகின்றனர். பதிற்றுப்பத்தின் நான்காம்பத்துப் பதிகத்தில் " உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னன்" என்று கூறப்படுதல் காண்க. இதன் பொருள்:-- உருட்சியாகிய பூவையுடைய கடம்ப மரத்தைத் தன் பெரிய வாயிற்கண்ணே கொண்ட நன்னன்" என்பதாம். பதிற்றுப்பத்துரைகாரர் 'கடம்பின் பெருவாயில் - நன்னன் ஊர்' என்பர்; இதுவும் கடம்பமரத்தை வாயிலிற்கொண்ட காரணம் பற்றியே வழங்கியதாகல் உய்த்துணரப்படும். நன்னனுக்கு வாகை காவன் மரமென்று அப்பதிகத்தில் வேறு கூறப்படுதலால் ( பக் - 58.) இக்கடம்பு அக்குலத்தினர் கொண்ட அடையாளமரமாகும். இவற்றால், நன்னன் வேளிருள்ளே கடம்பர்

      * இந்நூலின் முற்பகுதியாகிய வேளிர்வரலாறு 14-ம் பக்கங்காண்க.
      † கடம்பர் என்போர், மைசூர் ராஜ்யத்தின் மேல்பாகத்தை, --கி.பி. 3-ம்
      நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டுவரை ஆட்சிபுரிந்த தனி அரசராவர்; இவர்கள் நாட்டில், வடகன்னடமும்(Haiga) தென்கன்னடமும் (South Tuluva) அடங்கியிருந்தன. இவ்வரசரது தலைநகரம், ஸாரப் (Sarab) தாலூகாவின் மேல் எல்லையில் உள்ளதும், பழமைபெற்றதுமான பனவாஸி (Banavasi) என்பதாம். இதனை ஜயந்தி, வைஜயந்தி எனவும் வழங்குவர். பிற்காலத்தே இந்த ராஜ்யம், ஷிமோகா ஜில்லாவின் பெரும்பாகமும் அடங்க 'வனவாஸி - பன்னீராயிரம்' எனக் கூறப்பட்டுள்ளது. ( Mysore and Coorg from the inscriptions.pp21.)
      ‡ Bombay Gazetteer. Vol. I ; Part.II; p 286.


    ------------
    page 74

    பிரிவைச்சேர்ந்தவ னென்பது உய்த்தறியலாம்.* இனி, இக்கடம்பர்க்கும் வேளிர் என்ற சொல்வழக்கம் முன்பு வழங்கியதென்பதற்கு, நீண்டகாலம் இவராண்ட பிரதேசமொன்று இவர் பெயரால் " வேள் கிராமம்" என
    வழங்கியதே சான்றாகும். இப்பிரதேசம் இப்போது " பேல்காம்" (Belgaum) எனத் திரிந்து, பம்பாய் ராஜதானியில் ஒரு 'ஜில்லா'வாக வுள்ளமை முன்னரே பிரஸ்தாபிக்கப்-பட்டது.†

    இனி, வேளிராகிய சளுக்கியர் மகதநாட்டு ஆந்திரரினின்று பிரிந்தவர் என்பதற்குரிய காரணங்கள் வேளிர் வரலாற்றுள் விளக்கப் பட்டன. எனவே, அச்சளுக்கரது சகோதர வகுப்பினராகிய கடம்பவேளிரும் அவ்வாந்திரவமிசத்தவரே என்பது சொல்லாதே பெறப்படும். இற்றைக்கு 1700- வருஷங்கட்கு முன்பு, கடம்பர் மரபைச் சேர்ந்த ஆரீதிபுத்ரசாதகர்ணி என்ற வேந்தனொருவன் தக்ஷிணத்தை ஆண்டனன் என்பது பழைய சாஸனமொன்றால் தெரிகிறது; அவ்வரசன் பெயருள் முற்பகுதி அவனது இயற்பெயரென்றும், பிற்பகுதியாகிய சாதகர்ணி என்பது, அவன் குலப்பெயரா மென்றும் ஆகவே, அக்கடம்பவேந்தன் ஆந்திரரோடு தொடர்புடையவனாதல் வேண்டுமென்றும் தக்க காரணங்களுடன் சரித்திரநூலோர் கூறுவர்.‡ ( சாதகர்ணி- ஆந்திரபிருத்திய அரசர் சிலர்க்கு வழங்கிய பெயர்.) எனவே, சளுக்கியரைப்போலவே, கடம்பரும் ஆதியில் ஆந்திரரினின்று பிரிந்த வகுப்பாரென்பது வலிபெறுவது கண்டுகொள்க.

    நன்னன் குலத்தவர், மேற்குறித்தவாறு ஆந்திர வமிசத்தவரே என்பதற்கு, வேறு சில சான்றுகளும் காட்டலாம். நன்னன்வழியில் வந்த இளைஞனொருவன் இளவச்சிரக்கோ என்னும் பெயருடையான் என்பது புறநானூற்றால் அறியப்படும். இளவச்சிரக்கோ என்பது இளவிச்சிக்கோ எனத் திரித்தும் வழங்கப்படுகிறது. இவ்விளைஞன்

      * நெடுஞ்சேரலாதனைக் 'கடற் கடம்பறுத்தான்' என்று நூல்கள் கூறுவது, இவ்வரசரது காவன்மரமாகிய கடம்பை வெட்டி வென்றதையே என்று கருதப்படுகிறது, ( பதிற்றுப்-2-ம் பத்து.)
      † Bombay Gazetteer. Vol. I ; Part.II; p. 568-570
      ‡ Tbid. p.278,279
      புறநானூறு. 151-ம் பாடல்.

    ---------------

    page 75

    பெயர்கொண்டு இவன் முன்னோர் வச்சிரக்கோ, அல்லது விச்சிக்கோ என்றழைக்கப்பட்டனர்-- என்பது பெறலாகின்றது. இவ்வாறே, நன்னன்வழியினனொருவன் "வில்கெழு தானை விச்சியர் பெருமகன்" எனக் குறுந்தொகையிற் (328) கூறப்படுதலுங் காண்க. வச்சிரக்கோ என்பதற்கு வச்சிரநாட்டரசன் என்பது பொருளாம். வச்சிர நாடு என்பதொன்று தமிழகத்தே முற்காலத்து வழங்கியதாக இப்போது தெரிந்திலது; ஆதலின், இப்பெயர், நன்னன்வழியினர்க்கு அவர் ஆதிதேசத்தைப்பற்றியே வழங்கியதாகல் வேண்டும். " மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்கோன்" என்னுஞ் சிலப்பதிகார அடியின் விசேடவுரையிலே, அடியார்க்கு நல்லார், வச்சிரநாடு – சோணைநதிக் கரையிலுள்ள (Son)* தேயமெனக் குறிப்பிடுகின்றனர். (பக்-139) அஃதாவது-- ஆந்திரசக்கரவர்த்திகள் ஆட்சிபுரிந்த மகத தேசத்தின் தென்பகுதியாம். இக்காலைச் சரித்திரநூல்களில், வச்சிரதேசமென ஒன்று தனித்து வழங்கப்பட்டிலதேனும், முற்காலத்தே அது மகத நாட்டின் பிரிவுகளில் ஒன்றாக அடங்கியிருந்ததென்று தெரிகின்றது. இவ்வாறு, நன்னன் குலத்தவர் ஆந்திரர் என்பதற்கு முன்பு கூறிவந்த காரணங்களோடு பொருந்த, அவ்வாந்திரர்க்குரிய வச்சிரநாட்டை இந்நன்னன் வழியினர்க்கும் வழங்கியிருத்தல் இங்கே சிந்திக்கத் தக்கது. நன்னனது பல்குன்றக் கோட்டத்துக்கே ' வச்சிரநாடு' அல்லது 'விச்சிநாடு' என்னும் பெயரு முண்டென்று பின்னாராய்ச்சியால் விளங்கினும், அதுவும், அவன்முன்னோரது குலதேசம்பற்றியே வழங்கியதாகல் வேண்டுமென்று கருதத்தக்கது. அன்றியும், நன்னன் நாடாகிய நடுநாட்டுக்கு மகதநாடு என்ற பெயர் முன்னாளில் வழங்கி வந்ததென்பது சாஸனங்களாலும் பாடல்களாலும் நன்கறிந்தது.† இதுவும் நன்னன்குலத்தோர் தம் பூர்வதேசத்தை அபிமானித்து வழங்கியதேயாம். சுருங்கச் சொல்லுமிடத்து, "வேளிர்" என்று தமிழ் நூல்களிற் கூறப்பட்டோர், பழையகாலத்தே, மகத நாடாண்ட ஆந்திரரினின்று பிரிந்துவந்து தென்னாடாண்ட சிற்றரசர் என்பதே முடிபென்னும்படி பழைய நூல்களும் பிறவுங் குறிப்பிக்கின்றன
    எனலாம்.

      *இச் சோணை நதியின் வரலாறு வான்மீகத்திற் காணப்படும்; இது, வடக்கே பண்டில்கண்டு என்ற நகரத்தையடுத்து உற்பத்தியாகி, பாடலீபுரத் தருகே கங்கையிற் சங்கமமாகும் ஓர் உபநதியாகும்.
      † "செந்தமிழ்" தொகுதி-2; பக்-424.

    ------------

    page 76

    மற்றை வேளிர்.

    வேளிர்குலத்தே சங்ககாலத்தில் தமிழகம்புகழ விளங்கிய பெரு வள்ளல்கள் மேற்கூறிப்போந்த வேளிர் அறுவருமேயாவர். இவர்களன்றி, தமிழ் வேந்தராகிய சேரசோழபாண்டியர் சார்பிற் சிற்றரசராகவும், மகட்கொடுத்துச் சம்பந்தஞ் செய்தவராகவும், அமைச்சராகவும், படைத்தலைமை,தந்திரத் தலைமை வகித்தவராகவும் அமர்ந்த வேள்குலத் தலைவர் பல்லோரென்று தெரிகின்றது. நாங்கூர்வேள் அழுந்தூர்வேள் என்போர், சோழன்-உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னிக்கும் அவன் மகன் கரிகாற்பெருவளத்தானுக்கும் முறையே பெண்கொடுத்தவர்கள். (தொல்.பொருளதி. பக்.54) மையூர் கிழானாகிய வேண்மான், இளஞ்சேரலிரும்பொறையின் தாய்ப்பாட்டனும் அமைச்சனுமாக விளங்கியவன். (பதிற்றுப்.-9-பத்து) நன்னன் வேண்மான் அழும்பில்வேள் என்போர், சேரரது படைத் தலைமையும் தந்திரத்தலைமையும் முறையே வகித்தவர். இனி, இவ்வேளிர்கள் பதினால்வர் (135) எனவும், பதினொருவரெனவும் (246) அகநானூற்றுட் கூறப்படுகின்றனர். இவரிற் பதினால்வர் சேர்ந்து காமூர்த்தலைவனான கழுவுள் என்னும் இடைக்குலத்துச் சிற்றரசனைப்* போரில் வென்றனர் என்பதும், கரிகால் பெருவளத்தான் வெண்ணிவாயில் என்னுமிடத்து நிகழ்த்திய பெரும் போரிலே தோற்றவருள் பதினொருவேளிர் சேர்ந்தவர் என்பதும் 135, 246-ம் அகப்பாட்டுக்கள் குறிக்கின்றன. வேளிர்க்கும் திதியன் என்பானுக்கும் நிகழ்ந்த போரொன்றும் அந்நூலிற் கூறப்பட்டுள்ளது.(332) இனிச் சங்க நாளில் விளங்கிய வேறு வேள்குலத்தவராகத் தெரிந்தோர்--வெளியன் வேண்மான், பிடவூர் வேண்மான், நெடுவேளாதன், இளவிச்சிக்கோ, இருங்கோவேள், ஆலஞ்சேரி-அயிந்த‌ன் முதலியோராவர். இவர்களைப் பற்றிய வரலாறுகள் தெளிவாக விளங்க இடமில்லை:ஆதலின் நூல்கள் நோக்கி உணருமாறு விடப்பட்டன.

    இவ்வாறு பழைய வேளிர் வரலாறுகள்,சங்கநூல்களிற் கூறப் பட்டவாறு ஆராயப்பட்டன. இவ‌ர் வ‌ழியின‌ராய்ப் பிற்கால‌த்து

      *ப‌திற்றுப்ப‌த்து,71,88-ம் பாட‌ல்க‌ளிலும் இவ‌ன்செய்தி வ‌ருகின்ற‌து.

    -----------
    page 77

    விளங்கியவர், வேளார் என்னும் பெயருடன் சோழர் முதலிய அரசராலும் பலவாறு கௌரவிக்கப்பட்டு வந்த செய்தி சாஸனங்களால்* அறியப்படுகின்றது. இவர்க்குப் பிற்காலத்தும், இக்குலத்தலைவரிற் கொடைக்கடம் பூண்டிருந்த பெருவள்ளல்கள் பலராவர். இவற்றையெல்லாம் ஈண்டுவிரிப்பிற் பெருகும்; ஆதலின், பின்புள்ளோர் இயற்றிய நூல்கள் நோக்கி அறிந்துகொள்ளற்பாலன.

      "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு" - திருவள்ளுவர்.

    &nbbsp;   * South Indian Inscriptions, vol. III, p. 115.

    வேளிர் வரலாறு முற்றும்.


    ------------------


    விஷய சூசிகை

    அகத்தியர் தென்றிசைவந்தவரலாறு - 3
    அகநானூறு - 2,33,49,76
    அங்கதப் பாட்டு - 70
    அங்கவை, சங்கவை - 59
    அடியார்க்கு நல்லார் - 75
    அண்டரீ (Andorea) - 13
    அண்டிரன் - 16
    அண்ணாமலை - 66
    அண்ணாமலை சதகம் - 62
    அபிதான கோசம் - 5 ,23,76
    அம்பர்கிழான் சேந்தனார் - 11
    அரசர் பதினெண்மர் - 4 29
    அரிசில்கிழார் - 45
    அருவாளர் - 3
    அரையகுளம் - 41
    அழுந்தூர் வேள் - 23,76
    அழும்பில் வேள் - 67,76
    அன்னி - 40
    ஆந்திரசக்கரவர்த்திகள் - 13
    ஆந்திரர் பலியின்யாகத்து உதித்தமை-15
    ஆந்திரவரசர் எழுவர் - 14
    ஆயரது வரலாறு - 20 - 1
    ஆய் - எயினன் - 32,69
    ஆய்குடி (கோட்டாறு) - 29,34
    ஆய்நாடு - வேணாடு - 34
    ஆய்நாட்டின் ஐந்துதுறைமுகநகர்கள் - 33
    ஆய்மரபினர் சாஸனம் - 34
    ஆய்மரபு விருஷ்ணிகுலம் - 34
    ஆய்வேள் - 34 ,74
    ஆரீதிபுத்திரசாதகர்ணி - 74
    ஆரீதிபுத்திரர் (கடம்பர்) - 73 - 74
    ஆலஞ்சேரி அயிந்தன் - 76
    ஆவிநன்குடி - 34
    ஆவியர் - 34
    ஆளவந்த பிள்ளையாசிரியர் - 76
    இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
    இரணிய முட்டத்துப் பெருங் குன்றூர்க் கௌசிகனார் - 65
    இராகவையங்காரவர்கள் - (ரா) 34,47,54,60
    இராஜராஜ சோழன் சாஸனம் - 60
    இருங்கோவேள் - 20,37,53,5,8
    இருங்கோவேள் மருங்கு - 2
    இளக்கண்டீரக்கோ - 71
    இளங்கோவடிகள் - 3
    இளங்கோவேண்மாள் - 23,65
    இளஞ்சேரலிரும்பொறை - 76
    இளவிச்சிரக்கோ - 74
    இளவிச்சிக்கோ - 52,71
    உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னி - உறத்தூர் - 38
    உறையூர் - ஏணிச்சேரி முடமோசியார் - எல்லூரா (Ellora) - 11
    எவ்வி - 37
    எவ்விதொல்குடி - 2, 41
    ஏரெழுபது - 24
    ஏலாபுரம் - 11
    எழிலார்கோ - 70
    ஏழிற்குன்றம் 33, 65
    ஏழுவள்ளல்கள் - 1
    ஏனாதிப்பட்டம் - 23
    ஐயனாரிதனார் - 43
    ஐரோப்யவரசர் ஆட்சிக்காலம் - 19
    ஒளிநாடு - 17
    ஔவையார் - 11,46,50, 57, 70
    ஒளியர் - 17
    கங்காபுத்ரர் - 21
    கஜபதிகள் - 14
    கடம்பருஞ் சளுக்கரும் ஒருகுலம் - கடம்பர் - 73
    கடம்பர் தலைநகர் - 73
    கடம்பறுத்தசேரன் - 74
    கடம்பின்பெருவாயில் - 73
    கடையெழுவள்ளல்கள் - 1
    கண்டீரக்கோன் - 71
    கண்ணகி (பேகன் மனைவி) - கண்ணபிரான் - 3
    கதம்பர் - 12
    கடம்பர்க்கு வேளிர் என்ற பெயர்வழக்கு
    கபிலக்கல் - 60
    கபிலருங் கிளிகளும் - 49
    கபிலருஞ்சேரமானும் - 53
    கபிலரைப்பற்றிய சாஸனம் - 60
    கபிலர் - 5,9,15,18,37,41,47,54
    கரிகாற்பெருவளத்தான் - 23,76
    கருவூர் (வஞ்சி) - 37
    கலித்தொகை - 21
    கல்லெழுத்து - 63
    கவிரம் - 29
    கழாத்தலைமேடு - 41
    கழாத்தலையார் - 41
    கழுவுள் - 76
    களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 36, 69
    கனகசபைப்பிள்ளையவர்கள்(v)8,16
    காகதீயர் - 14
    காரியுண்டிக்கடவுள் (சிவன்) - 66
    காலசூரியரசர் - 14
    காவிதிப்பட்டம் - 23
    கிளியின் கதை - 49
    கிரேக்க ஆசிரியர் - 16
    கிழார் - 22
    குட்டுவன்கீரனார் - 29
    குலசேகரபாண்டியன் சாஸனம் - 63
    குறுநிலமன்னர் ஐவர் - 40
    குறுந்தொகை - 69,75
    கூர்ச்சரம் - 10
    கொங்கணம் - 17,20
    கொங்குதேசராஜாக்கள் சரிதை - 8
    கொங்குநாட்டாரோடு ஆயின்போர் - 29
    கொடுந்தமிழ்நாடு - 12,16
    கொடைமடம் - 42
    கொட்டாம்பட்டிமலை - 63
    கொல்லவேலம் - 20
    கோக்கருநந்தடக்கன் சாஸனம் - 34
    கோட்டம் இருபத்துநான்கு - 24
    கோபாலையரவர்கள், B.A., (v) - 19
    கோபிநாதராயரவர்கள் M.A. - 11, 34
    சசகபுரம் - 10
    சடகோபராமாநுஜாசாரியர் - 22
    சடிலவர்மன்பராந்தகன் I பாண்டியன் - 34
    ஜப்பானரசரது காலவளவை - 18
    ஜராசந்தன் - 6
    சளுக்கரது ஆதிநாடு - 13
    சளுக்கரதுவராகக்கொடி - 11
    சளுக்கருங்கடம்பரும் ஒருகுலமாதல் - 74
    சளுக்கருந் தமிழ் வேளிரும் - 13-5
    சளுக்கர் யாதவகுலம் - 14
    சளுக்கர் விஷ்ணுவமிசம் - 18,25
    சளுக்கியப் பெயர் வரலாறு - 14
    சாதகர்ணி - 74
    சாயவேளர் - 20
    சித்தன்வாழ்வு (பழனி) - 45
    சிலப்பதிகாரம் - 3, 75
    சிலாசாஸனம் - 60
    சிறுபாணாற்றுப்படை - 1
    சிற்றரையம், பேரரையம் - 41
    சுந்தரமூர்த்திநாயனார் - 1,49
    சுரபுன்னைமாலை (ஆய்) - 29
    ஸுவெல்துரை - 14
    சுளுகர் - 14
    சூகரக்கொடி - 11
    செங்கண்மா - 65
    செங்குட்டுவன் - 37
    செந்தமிழ்ப்பத்திரிகை - 47,60
    செல்வக்கடுங்கோவாழியாதன் - 36,52
    சேயாறு - 66
    சேரமான்வாராய் எனவழைத்த வார்த்தை - 56
    சோணைநதி (Son)-75
    சோழவம்சசரித்திரம் - 11
    டாக்டர் - பண்டர்கார் - 11
    டாக்டர் - பிளீட் - 11
    தடவு (சளுகம்) பாத்ரம் - 15
    தண்டாரணியம் - 17
    தபங்கமுனிவர் - 9
    தமிழ்நாவலர்சரிதை - 9,55,57,70
    தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் - 39
    திதியன் - 40,76
    திருநீடுர் - 38
    திருக்கொடுங்குன்றூருடையான் - 63
    திருக்கோவலூர் சாஸனம் - 55,57,60
    திருவாலவாயுடையார்புராணம் - 38
    திவாகரம் - 11
    திருவீழிமிழலை - 38
    துவரங்குறிச்சி - 64
    துவராபதி (துவாரகை) - 3
    துவராபதிநாடு - 64

    துவார‌ச‌முத்திர‌ம் -8
    துளுநாடு -20
    துளுவ‌வேளாள‌ர் -21
    தெய்வீக‌ன்-57
    தென்னார்க்காடு -66
    தேர்க்காட்டூர்வேளாள‌ர்-25
    தேவார‌ம்-47
    தொல்‌காப்பிய‌னார் 3,21,23,24
    ந‌க்கீர‌ர் -20
    ந‌ச்சினார்க்கினிய‌ர்-3,72
    ந‌டுநாடு -75
    ந‌விர‌ம் -66
    ந‌ன்ன‌ன்-ஆய் -65
    ந‌ன்னன்-உதியன் -67
    ந‌ன்னன்சேய்ந‌ன்ன‌ன்-65
    ந‌ன்னன்தந்தையின் கொடுங்கோன்மை-68
    ந‌ன்னன் நாள்-67
    ந‌ன்னன்-வேண்மான் -12
    நள்ளி -71
    நாங்கூர்வேள் -23,76
    நாற்ப‌த்தொன்ப‌து வேளிர் த‌லைமுறை -18
    நில‌ங்க‌ட‌ந்த‌ நெடுமுடிய‌ண்ண‌ல் -34
    நீடாம‌ங்க‌ல‌ம் -38
    நீடூர்கிழவோ‌ன்-37
    நீல‌நாக‌ம் -29
    நெடுஞ்சேர‌லாத‌ன் -36,74
    நெடுவேளாத‌ன் -76
    ப‌ஞ்ச‌திராவிட‌தேச‌ங்க‌ள் -17
    ப‌ட்ட‌ண‌க்காடு-41
    ப‌ட்டின‌ப்பாலை -2
    ப‌ண்டில்க‌ண்டு -75
    ப‌திற்றுப்ப‌த்து -2,45,73,76
    ப‌தினான்கு வேளிர் -76
    ப‌தினெண்குல‌யாத‌வ‌ர் -76
    ப‌தினெண்குடிவேளிர் -76
    ப‌தினொருவேளிர்-76
    ப‌தும‌ன் -36
    ப‌ம்பாய்கெஸ‌ட்டிய‌ர் -14
    ப‌ர‌ண‌ர்-68,42
    ப‌லி-15
    ப‌லிஜ‌ர்-15
    ப‌லிபுச்ச‌க‌ர்-18
    ப‌ல்குன்ற‌க்கோட்ட‌நாடு-65-6
    ப‌ழ‌மொழி -59
    ப‌ழ‌னி(பொதினி) -34
    ப‌ழைய‌வேளிர்-27,76
    ப‌ழைய‌னூர்க்காரி-55
    ப‌ற‌நாடு -47
    ப‌ற‌நாட்டுப்பெருங்கொற்ற‌னார்-47
    ப‌ற‌‌ம‌லைநாடு-63
    ப‌ற‌‌மலையே பிரான்மலை -63
    பறம்புமலை பாண்டிநாட்டில் -47
    பனந்துண்டம் பழந்தரப்பாடியது -57
    பனவாசி -73
    பாகவதம் -15,18
    பாடலீபுரம் -75
    பாண்டிமண்டலசதகம் -47,50
    பாண்டியருடன் ஆயர்வந்தமை -21
    பாண்டியன் குலசேகரன் சாஸனம் -63
    பாரம் -66
    பாரிசாலன்-63
    பாரிநாடுபாண்டிநாட்டில்-63
    பாரிபறித்தபறியின்செய்தி-56
    பாரிமகளிர்-51
    பாரிமகளிர் ஔவைக்கு ஆடையளித்தது -56
    பாரிமகளிர் சோறிட்ட‌து -59
    பாரிமுல்லைக்குத் தேரீந்த‌து -49
    பாரிமூவேந்த‌ரையும் வென்ற‌து
    பாரீசுவ‌ர‌முடையார் -63
    பாரீசுவ‌ர‌ம் -64
    பார்ப்பார்ப் ப‌டுத்த‌ல் -52,54
    பாழி-(நன்னனூர்) -66
    பாழிச்சில‌ம்பு -66
    பிங்க‌ல‌ந்தை-10,13
    பிண்ட‌ன் -67
    பிட‌வூர்வேண்மான் -76
    பிர‌ம‌நாடு -63
    பிர‌ம்பு(ஊர்) -66
    பிரான்ம‌லைவேளார் -15
    புலிக‌டிமால் -9,10
    புலிக்கொடி -11
    புற‌ந‌ானூறு -1,2,15,16
    புற‌ம‌லைநாடு -63
    பெண்ணையாறு -57
    பெருஞ்சேர‌லிரும்பொறை 36,45
    பெருந்த‌லைச்சாத்த‌னார் -71
    பேக‌ன்-34
    பேக‌ன்ம‌யிற்குப்போர்வை அளித்த‌து-42,43

    பேரரையம் - 40
    பேலா(ஊர்) - 12
    பேலாலர் - 8
    பேல்காம் (ஊர்) - 12,74
    பொதினி (பழனி) - 34
    பொருளதிகாரம் - 3,4
    பொன்னமராவதியூருடையான் – 63
    மகதநாடு - 75
    மண்டைக்குலநாடு - 65
    மதுரைக்காஞ்சி 2,3,67
    மருதநிலமக்கள் - 22
    மலைபடுகடாம் - 65,72
    மாங்குடிகிழார் - 39
    மாளவவரசர் -14
    மானவிரல்வேள் 67
    மானவ்யகோத்ரம் -14,73
    மிஞிலி 32,69
    மிழலைக்கூற்றம் 37
    மூவேந்தரும் பாரியை வஞ்சித்துக் கொன்றமை-50
    மேலைச்சளுக்கியர் -10
    மையூர்கிழான் -16
    மோசிபாடியஆய் 29,30
    மௌரியர் -18
    யதுவமிச வரலாறு -5
    யவனர் -33
    யாதவ அரசர் -14
    யாதவர்பதினெண்குலத்தார் -4
    யாதவர் 104 - கிளை - 4
    யாதவர் வைசியராதல் -21,22
    ரோமேச சந்திரதத்தர் -7,11
    வசந்திகாதேவி -10
    வச்சிரநாடு -75
    வட ஆர்க்காடு - 66
    வடக்கிருத்தல் - 55
    வரந்தருவார் - 57
    வராகக்கொடி 11
    வருணன் - 59
    வனவாசி பன்னீராயிரம் -73
    வன்பரணர் - 43
    வாகை(காவல்மரம்) -73
    வாகைப்பெருந்துறை -69
    வானவிறல்வேள் - 67
    வான்மீகம் -75
    விக்ரமாங்ககாவ்யம் - 14
    விக்ரமாதித்யவரகுணன் - 34
    விக்ரமார்க்கன்வமிசம் -14
    விஜயநகரநரபதிகள் - 14
    விச்சிக்கோன் - 53,75
    விநாயகன் - 58
    வியலூர் - 66
    வியாஸபாரதம் - 4
    விருஷ்ணிவமிசத்து ஆய் அரசர் - 34
    விருஷ்ணிவமிசம் -5
    வில்லிபுத்தூரர்மகனார் -57
    விஷ்ணுபுராணம் - 18
    விஷ்ணுவமிசம் -18,25
    வெங்கையரவர்கள், M.A. -66
    வெளியன் வேண்மான் - 76
    வெள்ளெருக்கிலையார் -38
    வேட்கோ -20
    வேணாடு -16
    வேணாட்டரசர் -11
    கொன்றமை-50
    வேண்மன்னன் 34
    வேண்மாடம்-37
    வேண்மார் -21,66
    வேண்மாள் அந்துவஞ்செள்ளை -65
    வேண் -17
    வேலமா (வேண்மார்) - 20
    வேளாபுரம் -8,12
    வேளார் - 64,77
    வேளாவிக்கோமாளிகை - 37
    வேளாவிக்கோமான் -36,45
    வேளாளர் இருவகையர் - 22
    வேளிரது ஊர்கள் - 22
    வேளிரது நாடுகள் - 23
    வேளிரது 49 - தலைமுறை -2,6
    வேளிர்குடியேறியகாலம்- 18--9
    வேளிர் தமிழரசருடன் சம்பந்தஞ்செய்தமை – 23
    வேளிர் துவரையாண்டமை - 6
    வேளிர் பன்மைச்சொல் - 1
    வேளிர் யாகத்து உதித்தமை - 15
    வேளூரகம் - 11
    வேளூர்-8,11
    வேள் - ஆய் -16
    வேள் என்பதின் பொருள்கள் - 25
    வேள் கிராமம் (Belgaum) - 12,74
    வேள்குலச்சளுக்கி - 11


    வேள், சளுக்கியர் பெயர் - 13
    வேள்பட்டி - 12
    வேள் - பாரி - 46
    வேள் புலம் - 16
    வேள்புலவரசர் - 11
    வேள்பேகன் - 42
    வைஜயந்தி - 73
    வையாவிக்கோப்பேகன் - 34,42
    வையாவிபுரி (பழனி) - 34,45
    ஹொய்சளப் பெயரின் வரலாறு - 9
    ஹொய்சளயாதவர் - 8
    ஹொய்சளர்க்குப் புலிக்கொடி - 10
    Bandarkar. Dr. - 11
    Bombay Gazetteer - 12,73
    Chronology of Ancient India - 19
    Civilization in Ancient India - 7
    Essays on Indian Antiquities - 13
    Fleet. Dr. - 11
    Forgotton Empire - 14
    History of Dekkan - 17
    Indian Antiquity - 14,18,25,77
    James Prinsep - 13
    Lewis rice - 8
    Mysore and Coorg from the inscriptions - 78
    Mysore Gazetteer - 8,10,74
    Pliny - 13
    Ptolemy - 33
    South Indian Inscriptions - 25,65
    Tamils 1888 years ago - 9,24
    Travancore Archaeological series - 34